சீதாலட்சுமி
ஒரு சமயம் ஆழ்வார்ப் பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதினான்கு வயது. ஆனாலும் அவனும் என்னைப் போல் படிக்கத் தெரிந்த நாள் முதலாய் வாரப் பத்திரிகைகள், மாத இதழ்களுடன் கதைப் புத்தகங்களும் படிப்பான். அவன் ஜெயகாந்தனிடன் கேட்ட ஒரு கேள்வி என்னையும் என் கணவரையும் தூக்கிவாரிப்போட வைத்தது.
“மாமா, உங்க கதை ஒண்ணும் புரியல்லே எங்களுக்குப் புரியற மாதிரி எழுதினா என்ன?”
“நீ ரொம்பச் சின்ன பையன். உன் அம்மாகிட்டே கேட்டிருந்தா அவங்க உனக்கு அர்த்தம் சொல்லி இருப்பாங்களே”
என் மகன் பேச வாயைத் திறந்தான். ஆனால் அதற்குள் என் கணவர் அவனைத் தனக்கருகில் இழுத்து சைகையால் அவனைப் பேச விட வில்லை. ஜெயகாந்தன் கவனித்தாரா என்று நானும் பார்க்கவில்லை. அப்பொழுதே என் மகன் கல்கி, சாண்டில்யன் கதைகள் படிக்கின்றவன். அவனுடைய மகன், அதாவது என் பேரன் தன் பதினாறு வயதில் ஜெயகாந்தனின் மேடைப்பேச்சுக்கு அர்த்தம் சொன்னான். கால இடைவெளியில், மனிதனின் சிந்தனாசக்தி எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டது என்று வியந்தேன்
Frustration
பேரன் சொன்ன முதல் வார்த்தை.
தமிழில் சொன்னால் விரக்தி
பின்னால் நீண்டதொரு விளக்கமே கொடுத்தான்.
“பலவிஷயங்களுக்கு அடிமையாகி விட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை”
இது ஆற்றாமையில், ஆதங்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. பெண் வெளி வருவதும், விருப்பம்போல் அலங்காரம் செய்து கொள்வதும் மட்டும் பெண்ணின் நிலை முன்னேறிவிட்டதாகாது. இது ஒரு சோடாபுட்டி திறக்கப்படுவது போல். இத்தனை நாட்கள் அடைபட்டுக் கிடந்தவர்கள் சுதந்திரக் காற்றை நுகரவும் மகிழ்ச்சியில் கொஞ்சம் அதிகமாகவே தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். கவனமின்றி சோடா பாட்டிலைத் திறந்தால் முகத்தில் அடிபடும். அதே போல சுதந்திரத்தையும் புரிந்து கொண்டு நடக்கா விட்டால் பாதிக்கப்படுவது பெண்களே. கிடைத்த சுதந்திரத்தில் தன்னிலை மறப்பது ஆபத்தானது. இத்தகைய சுதந்திரத்திற்கு அடிமையாகி விடுவது கொடுமை. இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருக் கின்றார். இன்றைய போக்கு எந்த சிந்தனையாளனையும் வருந்தச் செய்வதே.
நானும் பேரனும் நிறையப் பேசி விவாதித்தோம். அவனும் பல நாடுகளைப் பார்த்துவிட்டான். அமெரிக்கா ஒரு சுதந்திர பூமி. இப்பொழுதெல்லாம் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் காண முடிகின்றது. அவன் உறவுகள் இந்தியாவில் இருக்கின்றனர். அந்த உள்ளம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றது. அதனால்தான் இப்படி பேச முடிந்தது.
பெண்கள் முழுமையாக சுதந்திரம் பெற்று விட்டார்கள் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் “சுதந்திர அடிமை “என்ற
சொல்லின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நானும் ஓர் போராளி. பெண்ணியம் பேசுகின்றவள். இன்று காணும் காட்சிகள்தானா முன்னேற்றத்தின் அடையாளங்கள்?
கல்வி கற்பதில் கொஞ்சம் முன்னேற்றம். வீட்டுக்குள்தான் பெண் என்ற நிலையிலும் சிறிது மாற்றம். பெண் என்று சொல்லும் பொழுது அது நகர்ப் புரம் மட்டும் பார்த்து பேசுதல் சரியல்ல. நம் நாட்டில் கிராமங்கள் அதிகம். விவசாயத்தில் வேலை பார்க்கும் பெண்கள், கட்டட வேலை போன்ற பணிகளில் தினக்கூலி பெறும் பெண்கள், மில்களிலும், உடைகள் தைப்பது போன்ற சிறு கைத்தொழில்களிலும் வேலை பார்க்கும் பெண்கள், சொல்லிக் கொண்டே போகலாம்.. எண்ணிக்கையில் அதிகமானவர்கள் இவர்கள்தான். இவர்கள் நிலை என்ன?
சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவைகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி பார்த்தால் மிகவும் குறைவு. விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல் கவர்ச்சிக்குப் போய் எத்தனை பெண்களின் வாழ்க்கை ஏமாற்றத்திலும், நிம்மதியற்ற வாழ்க்கையிலும் முடிந்திருக் கின்றது. பட நாயகர்களைப்போல் நாயகிகள் வாழ்க்கை கிடையாது.. சிறிது காலமே பிரகாசிக்க முடிந்த தொழில். அதிலும் எத்தனை பிரச்சனைகள் !
பெண்களின் இன்றைய வாழ்க்கையைத் தொகுத்து விளக்கி எழுதப் பட வேண்டும். உழைக்கும் பெண்கள் சார்பிலே நான்காண்டுகள் பன்னாட்டு அமைப்பில் இருந்த பொழுது பல நாட்டுப் பிரச்சனைகளையும் ஆய்வு செய்திருக்கின்றேன். சுருங்கச் சொல்ல முடியாதது.
ஒன்று மட்டும் என்னாலும் கூற முடிகின்றது
Exploitation
சூழ்நிலையில் சுருட்டல் அல்லது சுரண்டல் என்று சொல்லலாமா?
இது யாரால் என்ற கேள்வி தேவையில்லை. முதலில் பெண்ணே உணர வேண்டும். அவளுடைய தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அமைப்புகளும் ஆரம்பத்துடன் தங்கள் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து கண்காணித்து ஆவன செய்ய வேண்டும். உடனுக்குடன் போராடி உரியவர்களிடம் பிரச்சனைகளை எடுத்துப் போய் தீர்வு காண முயல வேண்டும்.
முதலில் அரசியலில் பெண்கள் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். மனம் கொதிக்கின்றது. அரசியலில் பெண்களின் தலைமை எத்தனை சாடல்களுக்குள்ளாகின்றது. அரசியல் என்றால் தாக்குதல் இல்லாமல் இருக்காது, தெரியும். கொள்கைகளைக் குறை சொல்லட்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டட்டும். நன்றாகத் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் ஒரு பெண்ணை ஆணுடன் சேர்த்து கொச்சைத்தனமாகப் பேசுவது சரியா? அழகுத் தமிழில் ஆபாசத்தை விஷமாகக் கலக்கின்றார்களே!
ஒரு சம்பவம் கூறியாக வேண்டும். 1990 ஆம் ஆண்டு. ஒரு அரசியல் பிரமுகர் ஒரு பெண்னை மிகக் கேவலமாகப் பேசினார். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
அப்பொழுது நான் பங்களூரில் இருந்தேன். என் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமாகிக் கட்டிலில் கிடந்தார்கள். அவர்களை முழு நேரம் கவனித்து வந்தேன். இந்தச் செய்திகளைப் படித்தவுடன் என்னால் இருக்க முடியவில்லை. என் தாயாரைக் கவனிக்க ஒருவரைத் துணைக்கு வைத்து விட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். வந்தவுடன் திருமதி சரோஜினி வரதப்பனிடம் குமுறினேன். இன்னும் பல பெண்களைச் சந்தித்தேன். மவுனமாக இருக்கக் கூடாது என்று கூறினேன். உடனே ஒரு கண்டனக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. கூட்டம் சிறியதுதான் ஆனாலும் பெண் அரசியலுக்கு வந்தால் இப்படி கேவலப்படுத்தக் கூடாது என்று ஒருமித்துக் கூறினோம். நாங்கள் நடத்தியது அரசியல் கூட்டமல்ல. அது போதாது என்று தோன்றிற்று. ஒரு மகளிர் மன்ற சார்பில் ஓர் அறிக்கையும் கொடுத்தோம். “நீயா சொன்னாய்?” என்று அறிக்கையில் எங்கள் மன வலியை விளக்கமாக எழுதி அனுப்பியவள் நான் தான். இன்றும் அந்த பத்திரிகை அலுவலகத்தில் அதன் நகல் இருக்கும்.
இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் பெண்களை அவச்சொல்லால் பழிக்கப்படும் பொழுது பெண் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அரசியல் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் கீழ்த்தரமான பேச்சை அனுமதிக்கக் கூடாது
ஒரு அரசியல்வாதி தன் கட்சியைச் சேர்ந்த பிரமுகரிடம், “அவனுக்கு சரியாகப் பேசத் தெரியவில்லை” என்று புகார் சொன்ன பொழுது பிரமுகர் கூறிய பதில். “இப்படிப் பேசுகின்றவர்களும் வேண்டும், அப்படிப் பேசுகின்றவர்களும் வேண்டும்” என்பதுதான்.
நடுத்தெருவில் அரசியல் மேடைகளில் பெண்ணை வார்த்தைகளால் நிர்வாணப்படுத்திப் பேசுவதும் அதைக் கேட்டு மக்கள் கைதட்டிச் சிரிப்பதுவும் கொடுமையாகப்பட வில்லையா? இதுவா நாம் கற்ற நாகரீகம்? இது ஒரு வகையான விபச்சாரமாகத் தெரிகின்றதே! அசிங்கப் பேச்சை ரசித்தவன் அவன் முகத்தை தன் மனைவியிடன், மகளிடம், ஏன் தாயிடம் எப்படி காட்ட முடிகின்றது?!
ஓர் பெண் அரசியல்வாதி , ஒரு ஆணை விமர்சிக்கும் பொழுது, “உனக்கு எத்தனை சொந்த வீடுகள்? எத்தனை சின்ன வீடுகள்? எத்தனை ஒட்டு வீட்டுகள்?” என்று கேட்டால் அந்த ஆண்கள் தன் முகத்தை எப்படி மறைப்பார்கள்? பெண்கள் இப்படி பேசுவதில்லை என்பது அவர்களுக்கு ஆதாயமாகிவிட்டது.
பெண் அமைப்புகள் அரசியலுக்கப்பால் இது போன்ற பிரச்சனைகளைக் கண்காணித்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.
ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர் பேசியது சரியில்லை என்று துடிக்கின்றோமே !
அரசியல் மேடை ஆபாசப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருப்பது சரியா?
திருமதி இந்திராகாந்தி அம்மையாரையும் செல்வி ஜெயலலிதா அவர்களையும் இதே தமிழகத்தில் எப்படியெல்லாம் பேசினார்கள் ?
வெளிப்படையாக எழுத முடியவில்லை. கூசுகின்றது.
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. அரசியல்வாதிகள்
எல்லோரையும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். இந்த முதியவள் ஓர் தாயாய் இருந்து வேதனையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
“பெண்மேல் இது போன்று சேற்றை இறைக்காதீர்கள்”
“ஒரு பெண் நள்ளிரவில் தெருவில் தனியாகப் போய்விட்டு என்று பத்திரமாகத் திரும்புகின்றாளோ அன்றுதான் சுதந்திரநாடு என்று சொல்ல வேண்டும்.”
சொன்னவர் யாரென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். எட்டு வயதுச் சிறுமிகூட பாலியல் கொடுமைக்காளாகிp படுகொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்படூம் கொடுமை தொடர்கின்றதே.! பெண் சிசுக்கொலை இன்னும் நிற்கவில்லையே!?
எல்லாத்துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டார்கள்.
உண்மை. மறுக்கவில்லை. ஆனால் எத்தனைப் பேர்கள் இப்படி உயர் நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அடையாளப் பொட்டுகள்.
முன்னேற்றப்பாதையில் பெண்போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம். இதுவே நான் அதிகமாகச் சொல்லிவிட்டேன். தனி அரங்கத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும்.
ஜெயகாந்தன் இதுவரை எழுதிய கதைகளில் பெண்களை அனுசரணையுடன் தான் பார்த்திருக்கின்றார். விபச்சாரிகளைக் கூட வெறித்தனத்தில் அதை செய்யவில்லை, வயிற்று பிழைப்புக்காக
செய்வதாகக் காட்டுகின்றார்.
‘ஓர் நடிகை நாடகம் பார்க்கின்றாள்’ என்ற கதையில் கல்யாணியை
ஒரு பெண்ணின் நிலையில் இருந்து பாத்திரைத்தை நகர்த்துவார். ரங்கணையும் யதார்த்தமாகக் காட்டுவார்.
கதைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பெண்களிடம் அவர் காட்டும் மரியாதையைப் பார்த்திருக்கின்றேன்.
சிலரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் வாழ்க்கை நடமுறையில் நடந்து கொள்வதற்கு வித்தியாசங்கள் இருக்கும். ஜெயகாந்தன் குடும்பத்துடன் பழகியவள் நான். ஜெயகாந்தனும் என் குடும்பத்துடன் பழகியவர். எங்கள் இருவரின் குறைகளும் நிறைகளும் இருவரும் அறிவோம். அவரைபற்றி அறிய சில காட்சிகளைக் காட்ட விரும்புகின்றேன்
எனக்கு ஒரு தோழி. கேரளத்து அழகி. சமுதாயப் பணியில் சிறந்தவள்.
ஆனால் அவளின் தோற்றம் பல ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவளைத் தவறாக நினைக்க வைத்தது. வெறும் நினைப்புடன் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவள் போகுமிடங்களில் அவளத் தவறாக அணுகினர். அவள் வருத்ததுடன் என்னிடம் கசப்பு அனுப்பவங்களைக் கூறுவாள். இவைகளுக்குக் காரணமும் அவளே. மேடை நாடகத்திற்குச் செல்வது போன்ற ஒப்பனை. நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் “இதற்கு எனக்கு சுதந்திரம் கிடையாதா” என்று கேட்பாளே தவிர தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிரச்சனைகளும் தொடர்ந்தன.
ஜெயகாந்தனிடம் எல்லாம் கூறி அவளை அழைத்து வருவேன் புத்திமதி கூறுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அவர் மவுனமாக இருந்தார். அவளைக் கூட்டிச் சென்றேன். அவளும் அவரிடம் மனம் விட்டுப் பேசினாள். ஆனால் அவர் பதிலே கூறவில்லை. எனக்கு அவர் மீது கோபம் வந்தது. அங்கிருந்து அவளைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.
பின்னால் அவரைச் சந்திக்கும் பொழுது சண்டை போட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “அலங்காரம் செய்து கொள்வது அவர்கள் விருப்பம். ஒருவர் சுதந்திரத்தைப் பற்றி இன்னொருவர் விமர்சனம் செய்யலாமா” என்று கேட்டார். அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அடுத்து அவர் கேட்ட ஒரு கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.
“சீதாலட்சுமி ! என்றாவது உங்கள் தோற்றம் பற்றி யோசித் திருக்கின்றீர்களா? முரண்பட்ட மனிதர்களிடம் பழகுகின்றீர்கள் நீங்கள். யார் யாரிடம் பழகுகின்றீர்கள் என்பதும் அவர்களுக்கும் தெரியும். உங்களை ஏன் மதிக்கின்றார்கள்?”
என் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களும் கேள்விகளே..
நான் எறிந்த அம்பு என் மேலேயே திரும்பப் பாய்ந்தது.
என் நெருங்கிய உறவினர் ஒருவர் என் தோழியிடம் அவள் அலங்காரத்தைப் பற்றி விளக்கினார்.
விழாக்களுக்கு, திருமண வைபவங்களுக்கு போகும் பொழுது அலங்காரங்கள் செய்வது தவறில்லை. செய்யும் பணி சமுதாயப்பணி. அப்பொழுது அலங்கரித்துக் கொண்டு சென்றால் ஆளைக் காட்டிப் பணம் கேட்பது போலத்தான் நினைப்பார்கள். அணுகலும் மோசமாகத்தான் இருக்கும். அதில் சுதந்திரம் பேசுவது சரியா?
எதுவும் அந்தச் சூழலுக்குப் பொருந்தி இருக்க வேண்டும். ஒன்று தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது வருவதை எதிர்கொள்ள வேண்டும். புலம்புவதில் அர்த்தமில்லை.
அவர் என் தோழியுடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. என்னைப்பற்றி யும் பேச ஆரம்பித்தார்.
“இப்பொழுது கூட இந்த சீதாவைப் பாருங்கள் புடவையும் ரவிக்கையும் பொருத்தமான நிறத்தில் இருக்கின்றதா? அவளுக்குத் தன்னைப்பற்றிய சிந்தனையே கிடையாது. அதுவும் சரி என்று சொல்ல மாட்டேன். அலுவலகங்களுக்குப் போகும் பொழுது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிய வேண்டும். நான் அலங்காரத்தைச் சொல்லவில்லை. ஆனாலும் அவள் பழகும் முறையும் அவள் பேச்சும் அவள் குறையை மறந்து அவளுடன் எல்லோரும் பழகுகின்றனர்.
தோற்றத்தால் மரியாதையும் பெறலாம் மரியாதையையும் இழக்கலாம். எப்படி தோற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அனுபவத்தில் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்று எதையும் செய்தல் கூடாது. கடல் சுதந்திரம் வேண்டிக் கரையைத் தாண்டினால் என்னவாகும்?
இந்த சந்திப்பில் என் தோழி மாறி விட்டாள். ஆனால் என்னால் மாற முடியவில்லை. இப்பொழுதும் பல நாடுகள் சுற்றிய பொழுதும் உடைகள், அலங்காரத்தில் எனக்கு அக்கறை வரவில்லை. இது என் சுபாவம்
நான் கேட்டுக் கொண்டும் ஒரு பெண்ணுக்குப் புத்திமதி கூற அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் என்னைக் கேள்விகள் கேட்டு
அதையே பதில்களாகக் காண வழிவகுத்து விட்டார். பெண்மனத்தைப் புண்படுத்தமாட்டார்.
அவரது வாழ்க்கைத் துணைவிகள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் மூவரிடமும் பேசிவிட்டுத்
தான் வீட்டைவிட்டுப் புறப்படுவேன். தனித்தனியாகச் சில வினாடிகளாவது அரட்டையடிக்க வேண்டும். என் தோழி ருக்குமணி அவர் வீட்டுக்கருகில் குடி இருக்கின்றாள். இப்பொழுது அவளும் அந்தக் குடும்பத்துடன் பழக ஆரம்பித்திருக்கின்றாள். அவள் எப்பொழுது சென்றாலும் மூவரும் என்னைப்பற்றி விசாரிப்பதைக் கண்டு அவளுக்கு வியப்பு. உடனே எனக்கும் தகவல் அனுப்பிவிடுவாள்.
சென்னையில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த நாடக் குழுக்களில் ஒன்றான சேஷாத்திரி குழு நாடங்களில் ஜெயகவுசல்யா நடித்துவந்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். படித்தவர். ஜெயகாந்தனுக்கு உதவியாளராக வந்தார்.
கவுசல்யாவும் சிறந்த சிந்தனையாளர். அவர் பேசினால் சில நேரங்களில் ஜெயகாந்தனுடன் பேசுகின்றோமோ என்று தோன்றும். அந்தப் பெண்ணைத் துணைவியாக வரவேண்டும் என்று விரும்பினார் ஜெயகாந்தன்.. நினைப்பு வந்த அதே வினாடியில் தன் எண்ணத்தை கவுசல்யாவிடம் வெளியிட்டார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கொடுத்துவிட்டார். ஒரு நொடியில் நடந்த ஒப்பந்தம். உறவிலும் இணைந்தனர்.
ஜெயகாந்தனுக்கு காதல் செய்வது, அதற்காகக் காத்திருப்பது, பின்னால் ஓடுவது இவைகளில் பொறுமை கிடையாது. எண்ணத்திற்கு முரணாகத் தெரிந்தால் விலகி விடுவார். மனத்தில் சுமையாக்கி அல்லல்பட மாட்டார்.
அவர் முதல் திருமணத்தைப் பற்றியும் பேசியிருக்கின்றார்.
மாமன் மகள். அதாவது அவருக்கு முறைப்பெண். மாமனோ
இவருடைய கல்விக் குறையையும், நிலையான வேலையின்மையையும் அடிக்கடி சுட்டிக் காட்டிப் பேசி இருக்கின்றார். எப்படி இவனுக்குத் தன் மகளைக் கொடுப்பது என்றும் சொல்லி இருக்கின்றார். நம் ஜெயகாந்தான் நேராக தன் முறைப் பெண்ணிடம் சென்றார்.
“இங்கே பாரு, உங்கப்பா சொல்றது சரி. எனக்கு நிலையான வேலை இல்லை. அதனால் நீ படித்து சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிக் கொள் உனக்கு வேலை கிடைத்தவுடன் நமக்குக் கல்யாணம்”
மனத்தில் நினைத்து விட்டால் அதைச் சொல்லிவிட வேண்டும். அத்தை மகன் சொல்லிவிட்டாரே! முறைப்பெண்ணும் படித்து டீச்சராகி விட்டார். மாமனுக்குப் பாசம் இல்லாமல் போகுமா? உடனே திருமணத்தை நடத்தி வைத்தார்.
கவுசல்யாவை நடிக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. அவருக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நாடகத்திற்கு கவுசல்யா நடிக்கப் போகும் காலங்களில் இவரே கொண்டுபோய் விடுவார். கவுசல்யாவாகவே நடிப்பதை நிறுத்தினார். வீட்டில் பெண்களை மரியாதையுடன் நடத்துவார்.
சுதந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரிந்த குடும்பம்.
அவரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவைகளை எழுதுகின்றேன்.
கடைசியாக அவர் வீட்டிற்குச் சென்ற பொழுது என்னுடன் நிலாரசிகணும் சஹாராத் தென்றலும் வந்திருந்தனர். அப்பொழுது நடந்த சுவையான காட்சிகள் சில காணலாம். அடுத்துப் பார்ப்போம்.
தொடரும்
++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian” seethaalakshmi@gmail.com
- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- வலி
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- வேத வனம் விருட்சம் 86
- யாரிடமும் சொல்லாத சோகம்
- கிடை ஆடுகள்
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- முள்பாதை 30
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- ஜன்னல் பறவை:
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்