வ.ந.கிரிதரன்
திடீரென்று மனதில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சிதான் அது. மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடர் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்… ஓங்கும் விருட்சங்கள்.. சீறும் காற்று.. உறுமியோடும் புலி முதலான விலங்குகள்… ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக, பேராறாகப் பெருக்கெடுத்து….. அலைக்கரம் கொண்டு சாடும் கடல்… இவற்றிடையே இயற்கையின் குழந்தையாக நான்.
இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும் , அலுப்பாகச் சலிப்பாகக் காணப்படும் கணங்கள் அர்த்தம் நிறைந்வையாகக் காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்கான சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது… ஆனால் இயற்கையின் குழந்தையான நீ .. இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே.. அதுவே உன் பிரச்சனைகளின் உறையுள்.. என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்…’ (மண்ணின் குரல்; பக்கங்கள் 233, 234, 235 & 235)
மேற்படி ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலுள்ள இன்னுமொரு நாவல் ‘மண்ணின் குரல்’ 1984 காலப்பகுதியில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துப் பத்திரிகையில் தொடராக வெளியாகி முற்றுப் பெறாமல் நின்று போன கதை. பின்னர் கனடாவில் பூர்த்தியாக்கப்பட்டு ஒரு சில கவிதைகள், கட்டுரைகளுடன் நூலுருப் பெற்றது. கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது நாவலென்ற பெருமை இதற்குண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த ‘மண்ணின் குரல்’ நாவலடங்கிய நூல் அதனுடன் மேலும் சில கவிதைகளையும், அரசியற் கட்டுரைகளையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் தமிழகத்தில் வெளிவந்த ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்போ நான்கு நாவல்களின் தொகுப்பாக வெளிவந்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் குறிப்பாக 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்துத் தமிழ்ப்பகுதிகளில் நிலவிய சூழலை மையமாக வைத்து, வர்க்க விடுதலையுடன் கூடிய தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய நாவல். தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்ட விடுதலைப் போராளிகளைப் பற்றி, இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ்ப் பெண்ணொருத்தி, விடுதலைப் போராளியொருத்தியின் காதலி, போராட்டத்தில் இணைந்தது பற்றி, பின்னர் சாதாரண இளம் வயதுக்கேயுரிய எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் காதலன் எவ்விதம் அவளது வழியைப் பின்பற்றிப் போராட்டத்தில் இணைந்து கொளகின்றானென்பது பற்றி விபரிக்கும் சிறிய நாவல். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட இந்நாவல் அன்றைய காலத்து என் மனதின் பிரதிபலிப்பாக விளங்கும் காலத்தின் சூழலின் விளைவாக உருவான நாவல். கருத்தினை மையமாக வைத்து உருவான இச்சிறு நாவலில் ஆங்காங்ககே தூவிக் கிடக்கும் கருத்துகள் சிலவற்றைக் கீழே காணலாம்:
‘தம்பி! மனிதனால் அறியமுடியாதபடி புதிர் நிறைந்ததாக இப்பிரபஞ்சத்தின் தோற்றமிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி. பொருளும், சக்தியும் ஒன்றென்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வுலகம், கிரகங்கள், நட்சத்திரங்கள், .. பால்வெளிகளை உள்ளடக்கிய இயற்கையே சக்தி. அச்சக்தியே இயற்கை. இயறகையில் யாவுமே ஒழுங்காக இருக்கின்றன. .. மனிதனும் ஒழுங்காக இருப்பானாயின் பிரச்சனைகளே இல்லை…’
‘அறியாமையில் உருவான சமயம் என்கின்றீர்களே! அதனை நீங்கள் நம்புகிறீர்களா?”
“தம்பி! நமக்கும் மேலாகவொரு புதிரான சக்தி இருப்பதை நான் ஏற்றுகொள்கிறேன். ஆனால் சமயத்தையோ அதன் மூடத்தனமான கோட்பாடுகளையோ நான் ஏற்கவில்லை….
அன்ராடம் பிரச்சனைகளால் ஆடும் மனிதனைப் பிரச்சனைகளைத் தீர்த்துப் புதுபாதை காட்டுவதற்குச் சமயங்கள் முயலவில்லை. மாறாக என்ன செய்கின்றன…
– ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு –
– கொடுமை செய்பவன் நரகத்திற்குச் செல்வான் –
– எல்லாவற்றையும் கடவுள் மேல் பழி போட்டுவிட்டு நிம்மதியாகவிரு –
இவ்விதமான போதனைகளால் சமயம் மனிதனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்குப் பதில் பிரச்சனைகளிலிருந்து தப்பியோட வைப்பதால், மனிதனை மனிதனாக வாழ்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளைக் கூறாமல் நடைமுறைக்கொவ்வாத நரகத்தைப் பற்றியும், சொர்க்கத்தைப் பற்றியும் போதிப்பதால்.. அததகைய சமயத்தை நான் ஆதரிக்கவில்லை.. நமக்குப் புதுவிதமான , நடைமுறைக்குச் சாத்தியமான , பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமான தீர்வுகளைக் கூறுகின்ற சமயம் தான் தேவையே தவிர, மூட நம்பிக்கைகளுடன் கூடிய, மனிதனை பிரச்சனைகளிலிருந்து கோழையைப் போல் ஓட வைக்கின்ற சமயம் தேவையில்லை…’ (பக்கங்கள் 327 & 328)
‘ஆகா.. அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது”
சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.
“இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குற்றிக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு…” என்றபடியே அருகீலமர்ந்த சாமியாரையே ஆவலுடன் நோக்கினான் அநபாயன்.
“இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான்.. ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கின்ரது… போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக, நியதியாகவே உள்ளது…”
மேலும் தொடர்ந்தார்:
“இயறகையின் முரணபாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடி கொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக, புறவுலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவே, பிரச்சனைகளைச் சிக்கலாக்கியது.. அவனது அறிவு வளர, வளர முரண்பாடுகளை அவன் கையாணட விதம் , பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில் புதிய முரணபாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளைஒ அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின…” (பக்கங்கள் 346 &347)
இவ்விதமாகச் செல்லும் நாவல் பின்வருமாறு முடிந்திருக்கும்:
‘அதோ பாருங்கள்… உலகின் நானா பக்கங்களிலுமே அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கெதிராக ஒரு மக்கள் கூட்டம் தர்மத்திறகான வேள்வித் தீயினில் குதித்துப் போராடிக் கொண்டிருப்பதை…. வறட்டு வேதாந்ததினுள்ளும், அடிமைத்தளைகளுக்குள்ளும், அறியாமையினுள் மாண்டிருக்கும் மானுடத்தைப் புத்துயிர்ப்படையச் செய்வதற்காக, நடுக்கும் குளிரினுள், அர்த்த இராத்திரிகளில், கொடிய வனாந்தரங்களில், குகைகளில், மலைச்சாரல்களில், காடுகளில், ஊன் உறக்கமின்றி , இரவு பகல்களாக, ஏற்றத்தாழ்வுகளால, நாற்றமெடுத்துச் சீழ்பிடித்துச் சிதைந்து கிடக்கும் சமுதாயத்தினைச் சீர்சிருத்துவதற்காக அவர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தாம் பிறந்த மண்ணில், தாணடவமாடிடும் அநீதியினை, அக்கிரமத்தினை அழித்தொழிப்பதறகாக, மலிந்து கிடக்கும் பொய்மையினை ஒழித்திடுவதற்காக, புழுதியில் புரண்டு கிடக்கும் பெண்மையின் புனிதத்தினைப் பேணுவ்தற்காக, சிதைந்துவிட்ட குடும்ப உறவுகளைச் சீராக்குவதற்காக, இழந்துவிட்ட அமைதியையும், இன்பத்தினையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மண்ணுடனான தமது கடமையினைச் செய்வதறகான புனிதப் போரினில் அவர்கள் ஈடுபட்டிருகின்றார்கள்…. இந்த மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டம் ஒருக்கிறதே.. அது என்றுமே தோற்றுவிடுவதில்லை. இவர்கள் இறந்து விடலாம். இவர்கள் ஏற்றி வைத்த இலட்சியச்சுடர்கள் அணைந்து விடுவதில்லை. விதைத்த தர்மப் பயிர்கள் மடிந்து விடுவதில்லை. இவர்களது உடல்கள் இம்மண்ணுடன் கலந்து விடுகையில்… இம் மண்ணில் வீசும் தென்றலும் புரட்சிப் பண் பாடி நிற்கும். துளிர்க்கும் புற்களும் போர்ப்பண்ணிசைத்து விடும். மலையருவிகள், குன்றுகள்… இங்கெல்லாம் இம்மண்ணின் குரல் கேட்கின்றதே.. உங்களுக்கு அவை புரிகின்றதா? … ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றதொ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப் படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்றுவரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ” ( பக்கங்கள்: 352, 353 & 354 )
இவ்விதமாக மேற்படி தொகுப்பிலுள்ள ‘மண்ணின் குரல்’ அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள ‘வன்னி மண்’, மற்றும் ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’ என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேறபடி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ கேள்விக்குள்ளாகினால் , ‘வன்னி மண்’ நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
வன்னி மண்ணில் என் வாழ்வு….
மேற்படி ‘வன்னி மண்’ என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு (‘கிரி பத்’ ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் ‘ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே’ என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது ‘வன்னி மண்ணி’ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.
மேற்படி ‘வன்னி மண்’ நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:
“..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்… வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
– பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் –
– பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது…-
– அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் –
– போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது –
ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ….. போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?
… நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்… மிகவும் கொடியதுதான்…” (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)
இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி ‘மண்ணின் குரல்’ நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:
‘எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்’ என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான ‘அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்’ நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:
” அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்.” (மண்ணின் குரல்; பக்கம் 220)
மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.
இவை தவிர ‘அமெரிக்கா’ என்றொரு சிறுநாவலும் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் மேலும் சிறுகதைகளையும் உள்ளடக்கி, தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக ‘அமெரிக்கா’ என்னும் பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. இது பற்றிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றில் (சரிநிகர், புதியபாதை) விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. மேற்படி ‘அமெரிக்கா’ அமெரிக்காவிலுள்ள தடுப்புமுகாம்களில் வாடும் அகதிகள் பற்றியது. என் சொந்த அனுபவத்தின் விளைவான பதிவு. பின்னர் ‘அமெரிக்கா II ‘ என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்.
இவ்விதமாக எனது நாவல்கள் எல்லாவற்றிலுமே சமகாலப் பிரச்சினைகளின் தாக்கங்கள் என் அனுபவங்களினடிப்படையில் மலிந்து கிடக்கும். அதே சமயம் மேற்படி நாவல்களிலெல்லாம் இருப்பு பற்றிய என் கேள்விகளும், இயற்கையின் மீதான் என் ஆழ்ந்த காதலும் இழையோடிக் கிடப்பதை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படி நாவல்களைத் தவிர இணைய இதழ்களில் வெளியான பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த என் அனுபவத்தின் விளைவான உருவானவை. கவிதைகளும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதியிருக்கின்றேன். இருப்பு பற்றிய என் கேள்விகளைக் கருப்பொருளாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளேன். இதே போல் கட்டுரைகள் பலவும் பதிவுகள் இணைய இதழில் பத்தி எழுத்துகளும் (ஒரு சில புனைபெயர்களில்) சமகால சமூக, அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், விடயங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஆகச் சுருக்கமாகக் கூறின், என் படைப்புகள் எதுவாகவிருந்தாலும் (கதையோ, கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாகவிருந்தாலும்) அவற்றில் நிச்சயமாக என் மண்ணின், புலம்பெயர்ந்து வாழும் சூழலின் அனுபவப் பதிவுகள் நிச்சயமாக இழையோடியிருக்கும். அதே சமயம் இருப்பு பற்றிய என் தேடலின் விளைவான சிந்தனைகளும் அவற்றில் நிச்சயம் விரவியே கிடக்கும்.
ngiri704@rogers.com
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- அறிவியலும் அரையவியலும் – 3
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- தினம் தினம் தீபாவளி
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- நிலாச்சோறு!
- காதல் சாத்தானின் முகவரி
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- …கதைசொல்லும் தீபாவளி