சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

வெங்கட் சாமிநாதன்


அடக்கப்படும் பெண்களின் உரிமைக் குரல் தமிழ் நாட்டில் மாத்திரம் எல்லை கொண்டதல்ல. அம்பையின் பிரயாணங்களும் வாசங்களும் அதை நாட்டின், கண்டங்களின் எல்லைகள் தாண்டி விஸ்தரிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்நிலை மாறுபடலாம். ஆனால் ஆணாதிக்கம், சமூக ஆதிக்கங்கள் ஒரு தளத்தில் ஒன்றுபடுகின்றன. வசதியான ராஜஸ்தான வீட்டில், பூரண சுதந்திரம் என்பது பரந்த வீட்டின் ஒரு மூலை சமயலறையோடு முடிவடைகிறது. வங்காள குடும்பங்களில் ஒரு தலைமுறையில் புடவைத் தலைப்பில் முடிந்து தொங்கும் சாவிக் கொத்து, அந்த வீட்டு அரசியின் அதிகாரத்தைக் குறிக்கும். அதைப் பற்றி அவள் கொள்ளும் கர்வமும், மற்ற இளம் பெண்கள் எப்போதும் தம் புடவைத் தலைப்பிற்கு அச்சாவிக்கொத்து வரும் என்று காத்திருத்தலும் அவர்கள் சுதந்திரம் குறுக்கப்பட்டுவிட்டதை சகஜமாக ஏற்றுக்கொண்டதையே சொல்லும். தம் பாதுகாப்புக்கு என்று கட்டப்பட்டிருக்கும் தளைகள், தம்மீது கொண்டுள்ள அன்பின் நீட்சி என்று மகிழும் பெண்கள், சிலி நாட்டிலிருந்து அகதிகளாக பர்மிங்காமில் வாழும் பெண்கள், பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படும் அவலம், ஒரு கொடுமையிலிருந்து இன்னொரு கொடுமைக்கான தாவல், சித்தாந்தம் கூட விமோசனம் அளிப்பதல்ல, பலி கேட்கும் சித்தாந்தமாகத் தான் ஆகிறது. பன்றியின் குதூகல வாழ்வு மரணத்துக்கான காத்திருப்பாகிறது. பலி ஆடுகூட தலை சிலிர்த்துக் கொள்கிறதே. இந்த உலகம் விரிவது, 1988-ல் வெளி வந்த அம்பையின் இரண்டாவது தொகுப்பு வீட்டின் ஒதுங்கிய மூலையில் ஒரு சமையலறையில். முதல் தொகுப்பு வெளிவந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு. இதைப் பற்றி நான் புதி தில்லி Economic Times (4.10.1992) -ல் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையே பல மொழிகளில் வெளிவந்துள்ள பெண்ணிய குரல்களைப் பற்றிய ஒரு தொகுப்பில், Many Ideas, Many Literatures, New Critical Essays (World View Publications, Delhi)-யிலும் இடம் பெற்றது.

வெகு வருடங்களாகி விட்டன. தொன்னூறுகளின் ஆரம்ப வருடங்கள் ஒன்றில் கதா நிறுவனத்திற்காக சிறந்த தமிழ்ச் சிறு கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அம்பையினதாக இருந்தது என அந்நிறுவனத்தின் வெளியீட்டு விழா ஒன்றிற்குப் போனபோது அங்கு அம்பை இருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ‘ஹலோ’ என்று ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக்கொண்டோம். பழைய கசப்பில்லை என்றாலும் ஏதும் சினேக பாவத்தின் இதமும் இல்லை. இருவருக்குமே அது கஷ்டம் தான். பொய்யான இதங்களில் அர்த்தமில்லை. அதில் எங்கள் இருவருக்குமே நம்பிக்கையும் இல்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் சாப்ரு ஹவுஸில் இருக்கும் போது பரத நாட்டியம் பற்றி என்னுடன் ஒரு பேட்டி பதிவு செய்திருந்தீர்களே, அது எங்கோ அச்சில் வெளிவந்திருக்கிறது போலிருக்கிறதே, அதன் ஒரு பிரதி எனக்குத் தரமுடியுமா? என்று அம்பை கேட்க, மறு நாள் யாத்ரா இதழின் அப்பக்கங்களின் ஸெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். 1973-ல் நடந்த இந்தப் பேட்டி, 1983-ல் ஒரு யாத்ரா இதழில் தான் பிரசுர சாத்தியமாயிற்று. இப்பேட்டியை மற்ற பேட்டிகளோடு உரையாடல்கள் என்னும் விருட்சம் பதிப்பக வெளியீட்டுத் தொகுப்பில் பார்க்கலாம்.

அந்தப் பேட்டி பற்றிச் சொல்வது அம்பையின் பெண்ணியம்(?) எத்தகையது, அதன் பரிமாணங்கள் என்னவென்பதையும் சொன்ன தாகும். தற்செயலாக அம்பையின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடக்க விருந்ததென்று பின்னர் தெரிந்தது. என்னில் பரதம் என்ற நாட்டிய மொழியும் அதன் வெளிப்பாடும் ஒர் உறைந்த நிலையில் இருப்பதன் காரணங்கள் பற்றி எனக்கு பல கேள்விகள் இருந்தன. அந்தப் பேட்டியில் நாங்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இடது சாரிக் கொள்கைகளின் தாக்கம் கொண்டிருந்த அம்பை. அவர் சார்ந்திருந்த JNU வே இடது சாரிகளின் நாற்றங்காலாகத்தான் இருந்தது. என் நண்பர் ராமச்சந்திரனையும் சேர்த்து. பெண்ணின் உரிமைகளை மீட்கும் அம்பை, ‘அது என்ன எப்போ பார்த்தாலும் நாயகனுக்காக ஏங்கித் தவிக்கும் நாயகியையே நாட்டியத்தில் பார்க்கிறோம். ஏன் நாயகிக்காக தவிக்கும் நாயகனைப் பார்க்க முடிவதில்லை. நாயகனின் சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள் தான் நாயகி என்பதாலா நாயகியின் ஏக்கம் தான் நாட்டியத்தில் பேசப்படுகிறதா? நாட்டியத்தில் பேச வேறு விஷயங்கள் இல்லையா?’ என்றெல்லாம் (இந்த பேட்டியில் அல்ல) அம்பையின் கேள்விகள் எழுகின்றன. பாரதி தாசனின் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா, கண்ணே நீ இன்பம் சேர்க்கமாட்டாயா? என்ற பாட்டு அம்பைக்கு மிகவும் பிடிக்கும் தான். ஆனாலும் ஒரு கேள்வி உண்டு அவரிடம். அதென்ன, அவள் யாழ் எடுத்து வாசித்து இவருக்கு என்ன இன்பம் சேர்ப்பது? ஏன் அவளுக்கு துன்பம் நேரும்போது இவ்ர் யாழெடுத்து இன்பம் சேர்த்தால் என்ன குறைந்து விடும்?” என்பது அம்பையின் கேள்வி. இப்படித்தான் வாழ்க்கையின் எந்தத் துறையெடுத்தாலும் அங்கு பெறுவது ஆணின் உரிமையாக இருக்கும். கொடுப்பது என்பது பெண்ணின் கடமையாக இருக்கும். நம் இலக்கியம் பூராவும் ஆரம்ப காலத்திலிருந்தே இத்தகைய மனோபாவத்தில் தான் எழுதப் பட்டிருக்கும். ஆண்டாள் பெண். அவள் பெருமாளுக்கு தன்னை இழப்பது சரி. ஆனால் திருமங்கை ஆழ்வாருக்கு என்ன ஆயிற்று?. அவரும் பெண்ணாக தன்னை உருவகித்துக்கொண்டு பெருமாள் மேல் மையல் கொள்கிறாரே? எங்கும் பெண் ஒரு போகப் பொருள். அவள் ஆணுக்கு இன்பம் தர உருவானவள் என்பது காலம் காலமாக ஆண்டு வரும் ஒரு நம்பிக்கை. தர்மம். பெருமாளுக்கு ஏன் தாமரைப் பாதம்? தாமரைப் பாதம் எப்படி இருக்கும்? ஓடி ஆடி அலைந்தால் தானே புழுதியும் மண்ணும் படியும்? என்று சிந்தனை செல்லும். வீட்டில் சமைக்க பிடி அரிசி கிடையாது. அடுத்த வீட்டிலிருந்து செல்லம்மாள் கடன் வாங்கி வந்த அரிசியை குருவிக்கு இரைத்த கதை படித்தால், இதையே மாற்றி, பாரதி கடன் வாங்கி வந்த அரிசியை செல்லம்மாள் குருவிக்கு வாரி இரைத்து, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாட ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? – என்று யோசனை போகிறது. ஆண் செய்தால் அது கவித்வ வாழ்க்கை. செல்லம்மாள் செய்திருந்தால் பொறுப்பில்லாத்தனமோ பைத்தியக்காரத்தனமோ ஆகியிருக்கும்.

இதன் பின் இரண்டு தொகுப்புகள் அம்பையினது வெளிவந்துள்ளன. காட்டில் ஒரு மான் 2000-லும் வற்றும் ஏரியின் மீன்கள் 2007-லும். அம்பையின் ஈடுபாடுகளும், பயணங்களும், வாழ்க்கையும் அவரை எங்கெங்கெல்லாம் இட்டுச் சென்றுள்ளன, எத்தகைய பரந்த அனுபவங்களை அவர் கடந்து வந்துள்ளார் என்பது இக்கதைகளில் விரியும். எதுவும் கற்பனையல்ல. பாத்திரங்களோ சம்பவங்களோ. அம்பை தனக்கென வரித்துக்கொண்ட வாழ்க்கை (நானும் தாலி கட்டிக்கொள்ளாத கல்யாணமானவள் தான். குழந்தைகள் வேண்டாம் என்று இருப்பவள்) எத்தகைய சிக்கல்களில் ஆழ்த்தும், அறிமுகமற்ற கூட்டத்தினரிடமிருந்து கூட கிண்டலையும் கண்டிப்பான வேண்டாத அறிவுரைகளையும் வாரிக்கொட்டுவது ( பயணம்-1 ) கண்டு இரக்கப்படுவதா, சிரிப்பதா? இதையெல்லாம் எப்படி புரிய வைப்பது? அவர்கள் கெட்டவர்கள் இல்லை. ப்ளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்….என்னும் கதை எங்கு சென்றாலும், அமெரிக்கா போனாலும் கூட ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் சின்ன சின்ன முருகன், அம்மன் வகையறாக்களாக நிறைய தெய்வங்கள். எடுத்துச் செல்லும் அம்மா, அந்தச் சின்ன அற்ப ப்ளாஸ்டிக் டப்பாவை வைத்துக்கொண்டு போகுமிடமெல்லாம் ஒரு உலகையே சிருஷ்டித்துக் கொண்டுவிடுகிறாள். மனம் விரிந்தால் எதுவும் பிரபஞ்சமாக விரியும். இது ஒரு வாழ்க்கை நோக்கு. பண்பட்ட மனதின் நாகரீகத்தின் வெளிப்பாடு. தன் அமைதிக்கு தானே சிருஷ்டித்துக்கொண்ட ஒரு உலகம். பயணம் – 3 என்று ஒரு கதை. அம்மா மல்லேஸ்வரத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்துக்குப் போவாள். அதே சமயம் மெஜஸ்டிக்கில் இருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு வேலைக்காரியை அனுப்புவாள். தன் சார்பில் படையலுக்கான எல்லா தயாரிப்புகளையும் செய்து கொடுத்து அனுப்புவாள். இரண்டும் அம்மன்களும் ஒன்று தான். ஆனால் பெயர்களே சொல்வது போல ‘ஒன்று அவங்க சாமி. மற்றது நம்ம அம்மன் கோயில்’ இதில் வேலைக்காரி சின்ன பையனைக் கூட்டிச் சென்று நடந்த ரகளை மிக ரசமானது. வாகனம் என்ற கதையில் நம் அன்றாட இயல்பான வாழ்க்கையிலே கூட பெண்களுக்கென செய்யப்படும் ஒரு ஒதுக்கீடு, இது தான் அவர்களுக்கு, அதல்ல அவர்களூக்கு என்ற ஒதுக்கீடு. நடக்கிறது எங்கும் என்றும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னேயே மகரிஷி கார்வே தொடங்கிய பள்ளிக்கு சிறுமிகள் சைக்கிளில் வரத் தொடங்கியாயிற்று. ஆனால் அது சரித்திர விவரம். புரட்சியின் தொடக்கத்துக்கு அடையாளம். ஆனாலும் நம் வீட்டுச் சிறுமிக்கோ “சைக்கிள் பக்கம் போனே தெரியும் சேதி? என்று மிரட்டல்கள் அண்ணாவிடமிருந்து. பிரசுரிக்கப் படாத கைப்பிரதி என்ற கதையில் வரும் திரு என்னும் திருமகளும் சரி, மல்லுக்கட்டு கதையில் வரும் சண்பகமும் சரி, சிறு வயதிலிருந்தே பழகிய போதிலும், ஒரே ஈடுபாடுகள் கொண்ட போதிலும், தானே விரும்பி காதலித்து மனைவியாக்கிக் கொண்ட போதிலும் மனைவி தன்னை விடத் திறமையானவள் என்பதை ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை. ஆண் ஆளப் பிறந்தவன் அல்லவா, வலியவன் அல்லவா? அய்யாவின் காலத்தில் “உன்னை மீறி அவ போயிட்டாடா” என்று அய்யா பாராட்டிய சண்பகம், இப்போது தான் பாடும்போது மேடையில் தன்க்குப் பின்னால் இருந்து கொண்டு ஒரு கனைப்புடன் சமிக்ஞை காட்டும் போது சூடான பால் எடுத்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சங்கீதமோ, இலக்கியமோ, அவள் திறமைகளை இருட்டடிப்புச் செய்து தான் பிரகாசிக்க வேண்டும் என்று ஆணுக்கு நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காலத்தில் தேவ் ஆனந்து – சுரையா(திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விடவேண்டுமென்ற நிபந்தனை தடையாயிற்று), அமிதாப் பச்சன் – ஜெயா பாதுரி, கஜல் பாடும் தம்பதிகள் (திருமணத்திற்குப் பிறகு மனைவி பாடுவதை நிறுத்தியாயிற்று )- பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது. அம்ஜத் அலி கானை மணந்ததும், தன் நாட்டியத்தை ஒதுக்கி நல்ல மனையாளாகிவிட்ட சுப்பலக்ஷ்மி. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். திருமகளும் சரி, சண்பகமும் சரி, கணவனின் பொறாமைக்கும் அதிகாரத்துக்கும் அடி பணிய வேண்டியவர்களாகிறார்கள். எதற்காகச் சொன்னேன் என்றால் இவர்கள் ஏதும் கற்பனையில் பெண்ணின் ஏற்றத்துக்காக உருவாக்கப் பட்டவர்கள் இல்லை. எனக்குத் தெரிந்த கால நிரூபணங்களில் சில இவை.

ஒன்றிரண்டு கதைகள் என்னை நெருடத்தான் செய்கின்றன. ஒரு இயக்கம், ஒரு கோப்பு, சில கண்ணீர்த்துளிகள் கதையில் வரும் குமுத் பென் புவா. தன் சிறு வயதில் விதவையாகி வந்தவள். இந்த வீட்டில் வளர்ந்து, அடுத்த தலைமுறை குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கியவள். தமாலை ஏற்றுக் கொண்டவள். தமாலுக்கு மீன் பிடிக்கும் என்று முகம் சுணங்காமல் சமைத்துப் போடுபவள். வீட்டில் வளரும் நாயை, ‘அர்ஜுன் பேட்டா” என்று அழைத்து பூஜைப் பிரசாதத்தைக் கொடுப்பவள். இப்படி அவளைப் பற்றிய சரித்திரத்தைச் சொல்லி, ஒரு கட்டத்தில் மதக் கலவரத்தில் ஊரி பற்றி எரியும் போது, உடன் வந்த முஸ்லீம்களை உள்ளே வராதே என்று சொல்கிறாள். அப்போது அவள் கண்களைப் பற்றி இந்த விவரணை தரப்படுகிறது.

“அவை அத்தையின் கண்கள் அல்ல. மங்கி வரும் அந்தியின் வெளிச்சத்தில் தெரு விளக்கின் மஞ்சள் ஒளியில் அவை ஒர் ஓநாயின் கண்கள் போல் ஒளிர்ந்தன.” எவ்வளவு சீக்கிரம் திடீரென, தன் சிறுவயதிலிருந்து இங்கு வளர்ந்த அத்தை, தங்களை வளர்த்தெடுத்த அத்தை, அர்ஜுன் பேட்டாவுக்கு பூஜை பிரசாதத்தைக் கொடுக்கும் அத்தை, தமாலுக்கு மீன் சமைத்துக் கொடுக்கும் அத்தை, ஒரு நொடியில் ஒநாயாகிவிடுகிறாள். இது அத்தையில் காணும் மாற்றமா? அல்லது அப்படி மாறிவிட்டதாகச் சொல்பவரில் காணும் மாற்றமா? சில இடங்களில் காணும் நெருடல்களுக்கு இது ஒரு உதாரணம் மாத்திரமே. சண்முகத்தின் மாற்றத்தையும் (மல்லுக்கட்டு) முத்துக் குமரனின் மாற்றத்தையும்(பிரசுரிக்கப் படாத கைப்பிரதி) நாம் புரிந்து கொள்கிறோம். கதையிலேயே அதற்கான தடயங்கள் இருக்கின்றன. ஆனால் புவா வின் மாற்றம் வலுக்கட்டாயமாகக் காணும் மாற்றமாகத் தோன்றுகிறது.

அம்பையின் எழுத்துக்களில் பெண்ணிய உலகம் சித்தாந்தத்தில் உருவாகி தரப்படுபவை அல்ல. இயல்பான, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையில் காணும் மனிதர்களும், சம்பவங்களும், நாம் பேணும் தர்மங்களும் தான் இவை. நான் ஒரு feminist இல்லை என்று இந்திரா காந்தி சொல்வார். அவரிடம் அவர் தந்தையிடம் காணப்படாத மனத் திடமும் செயல் தீரமும் காணப்பட்டன. வீர முழக்கங்கள் தேவை இல்லை. வலிந்த உரத்த குரல்கள் தேவை இல்லை. வாழ்ந்து வரும் வாழ்க்கை தானே தன் குணத்தை வெளிப்படுத்திக் கொள்ளும். அம்பைக்குப் பிறகு இப்போது எழுதி வருபவர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்தரிப்பிலேயே பெண்ணிய பார்வை தானே வெளிப்படுத்திக் கொள்ளும். சிவகாமியின் பழையன கழிதல் நாவலில் கௌண்டர்களின் சாதி அதிகார வெறியை எதிர்க்கும் காத்தமுத்து, தனக்கென ஒரு அந்தபுரத்தை உருவாக்கி விஸ்தரித்துக்கொள்வதில் ஏதும் தவறு காண்பதில்லை. பாமாவின் கருக்கு கான்வெண்டில் கழித்த வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதை. இமையத்தின் செடல், பொட்டுக்கட்டப்பட்ட தலித் சிறுமி. ஆனால் அவள் அதை ஏற்க மறுக்கிறாள். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்கிறாள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. செடல் கற்பனையல்ல, தான் சந்தித்த ஒரு ஜீவன் என்கிறார். இமையம் இதற்குப் பெண்ணிய லேபிளோ தலித் லேபிளோ ஒட்டவில்லை.

அம்பை கதைகள் அதிகம் எழுதுவதில்லை. சுமார் 40 வருடங்கள் நீண்ட எழுத்து வாழ்க்கையில் அவர் எழுதியது அதிகம் இல்லை. தமிழ் பெண் எழுத்தாளர்களின் எழுத்து பற்றி ஆராயத் தொடங்கிய அவர் இப்போது கதைகள் எழுதுவதை விட பல துறைகளிலும் வாழ்க்கைத் தடங்களிலும் பெண்கள் சாதனைகளையும் அவர்கள் எதிர்கொண்ட நிலைகள் பற்றியுமான ஆவணங்கள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். பெரிய சாதனையாளர்களான பாடகிகள் கூட எளிதில் தம் சிகரத்தை எட்டி விடவில்லை. ஆண்களை விட அவர்கள் நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அதன் சில காட்சிகள் தான் மேலே சொன்ன பிரசுரிக்கப்படாத கைப்பிரதி, மல்லுக்கட்டு போன்ற கதைகளில் நாம் காண்பது. 84 வயதில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாரத் ரத்னா ஆகியிருக்கலாம். உயர்ந்த சிகரங்களை எட்டியிருக்கலாம். ஆனால் அது சுலபத்தில் கிட்டியதில்லை. அவருக்கு பக்க வாத்யம் வாசிப்பது தமக்கு அந்தஸ்து குறைவு என்று பலர் மறுத்த காலம் ஒன்று இருந்தது. பெண்ணாக பிறந்திருந்தும் சங்கீதம் கற்றுக்கொள்ள குடும்பத்தில் நிறைய எதிர்ப்பு இருந்ததென்று (எம்.எல் வசந்தகுமாரி என்று ஸ்ருதியில் படித்த நினைவு) தெரிகிறது. சினிமா உலகில் நடிகைகள் படும் பாடு நமக்குத் தெரிந்தது மிகக் குறைவு. இரண்டு நடிகர்கள். ஒரு நடிகை. புகழின் உச்சத்தில் இருப்பவர்கள். நடிகை நடிகரில் ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். இருப்பினும் மனம் செய்து கொண்ட இருவரும் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் போது, இரண்டாவது நடிகர் அருகில் சென்று, “என்னம்மா இப்போல்லாம் நம்மைக் கவனிக்க மாட்டே ங்கறயே” என்று சொல்லி அருகில் உட்கார்ந்து கொள்கிறார். நடிக தம்பதிகளுக்கு உள்ளுக்குள் புழுக்கம். புகார் செய்த நடிகர் போன பிறகு, “இப்பவும் இவன் என்ன திமிரோட இங்கே வந்து இப்படி பேசுவான்?” என்று பேசிக்கொள்கிரார்களே தவிர அந்த பெரிய நடிகருக்கு முன்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. சினிமா உலகில் பெண்கள் என்றால், நக்ஷத்திரங்களானாலும் அவர்கள் ‘available” என்ற நினைப்பு.

அம்பை என்றால் பெண்ணிய சீற்றம் என்று பொருள் அல்ல. ஒரு சாந்தமும் அதில் உண்டு. தமிழின் பெண்ணிய குரல் என்று சொல்லி வருவனவற்றைக் கேட்டால், பெண்மையை மறுப்பதோ என்று தோன்றும். சாத்வீகம், சாந்தம், நளினம் எல்லாம் புரட்சிக்கு எதிரானவையோ என்று தோன்றும்.

“பித்தளைச் சரிகையோடிய பளீர்ப் பச்சை சின்னாளம்பட்டிப் புடவை, அடிக்கடி வரும் நீலத்தில் சிகப்புக் கரையிட்ட அம்மாவின் பழைய பட்டுப் புடவை, ஓளிர் மஞ்சளில் கறுப்புக் கட்டம் போட்ட கைத்தறிப் புடவை என்று சில புடவைகள் உண்டு மருதாயிடம். விசேஷ நாட்களில் உடுத்த. அவற்றில் ஒன்றை உடுத்திக்கொண்டு, எல்லாப் புடவைகளுக்கும் பொதுவாக இருந்த கறுப்பில் சிவப்புப் புள்ளியிட்ட ரவிக்கை அணிந்து கொண்டு ஷெட்டிலிருந்து வெளியே வருவாள். மீனாட்சிக்கு சிவப்பில் மஞ்சள் புள்ளி போட்ட பாவாடை அல்லது ஊதாவில் பச்சைத் தாரகைகள் போட்ட பாவாடை ஒன்றை இடுப்பில் கட்டியிருப்பாள், தொப்பிளுக்குக் கீழே. பாவாடைக்கு மேல் உள்ள ரவிக்கை இடுப்புக்குச் சற்று மேலேயே நிற்கும். ஈரக் கூந்தலுடன், மஞ்சள் பூசிய முகமும், பெரிதாகக் குங்குமம் இட்ட நெற்றியுமாய் மருதாயி மீனாட்சியின் கையைப் பிடித்தபடி….. ” என்று வேலைக்காரி கெம்பம்மா மாரியம்மன் கோயிலுக்குப் போகும் காட்சியை அம்பை சொல்லும் போது படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இப்படி நிறைய நீண்ட பகுதிகள் உண்டு ஆங்காங்கே. எந்த சித்தாந்த வழிப்பட்ட பெண்ணியவாதியின் எழுத்தில் இத்தகைய காட்சியைக் காண்கிறோம்?. எல்லா திராவிட கழக, பாட்டாளிப் புரட்சிக்கு எழுத்தாளர்களின் வரட்சியே நம்மை ஒதுங்கி நகர்ந்து செல்லப் நிர்ப்பந்திக்கும். வரட்சியில் தான் சித்தாந்தத்தின் வலு உறைகிறதோ என்னவோ. இசையிலும், நாட்டியத்திலும், கவிதைகளிலும் ஈடுபாடுள்ள அம்பையின் எழுத்தில் ஜியா மொய்னுதீன் டாகரின் பிலாவலும், அடிக்கடி மீரா பஜனைப் பாட்டுக்களும், பீம்சேன் ஜோஷியும் இடையிடையே வந்து போவது சகஜம்.

தனக்கு மறுக்கப்பட்ட இடத்தைக் கேட்கும் பெண், வாழ்க்கையின் நளினங்களையும், அழகுகளையும் வண்ணங்களையும் தன்க்கு மறுத்துக் கொண்டுதான் குரல் கொடுக்கவேண்டும் என்றிருக்கிறதா என்ன?

வெங்கட் சாமிநாதன்/15.4.09

Series Navigation

author

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

Similar Posts