நாகரத்தினம் கிருஷ்ணா
2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் ( Jean-Marie Gustave Le Clèzio) லெ க்ளேஸியோ என்ற நீண்டபெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டென பெயர்கள் (ழான்-மரி, குஸ்த்தாவ்) அவருக்கு உண்டென்றாலும், லெ க்ளேஸி (Le Clèzio) என்ற குடும்பப்பெயரிலேயே சுருக்கமாக பிரெஞ்சு இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டிருக்கிறார். முதல் நாவல் Le Procès- Verbal (The Interrogation) 1963ம் ஆண்டு வெளிவந்தபோது இருபத்துமூன்று வயது இளைஞர், அந்த ஆண்டிற்கான ரெனொதொ இலக்கிய பரிசினையும் (Prix Renaudot) அந்நாவலுக்காக வென்றார். அன்றிலிருந்து கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அயர்வுறாமல் எழுதிவருகிறார். இன்றைய தேதியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளென்று ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகள்; நோபெல் பரிசுக்கு முன்பாக பிரெஞ்சு இலக்கிய உலகத்தின் ஆறு முக்கிய பரிசுகளை வென்றிருக்கிறார்.
சராசரி பிரான்சு நாட்டு குடிமகனை லெ க்ளேஸியோவைத் தெரியுமாவென்று கேட்டால், ஓரளவு புவியியல் ஞானம் இருக்குமானால் பிரெத்தோன் மாகாணத்திலுள்ள ஒரு சிற்றூரை ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லக் கூடும். லெ க்ளேஸியோவை மாத்திரமல்ல, தமிழ் நாட்டு சிற்றிதழ் வாசகனறிந்த பிரெஞ்சு எழுத்தாளர்களைக்கூட அவன் அறிந்திருக்க மாட்டான். நோபெல் பரிசு அறிவிக்கப்படாதவரை பிரெஞ்சில் பெரிதாக எதையும் கிழிக்காதவர் என்றே எனக்குள்ளும் ஓர் கருத்தியலை உருவாக்கியிருந்தேன். நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த அவரது சிறுகதைத் தொகுப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம். நோபெல் பரிசு அறிவித்த பிறகு அவரைப்பற்றிய செய்திகளை முதலில் இணைய தளங்களில் வாசித்தேன். கடந்த ஆண்டு ‘Lire'(Reading) என்ற பிரெஞ்சு இலக்கிய இதழ் எடுத்திருந்த கருத்துக் கணிப்பில் தீவிர இலக்கிய வாசகர்களின் அபிமான எழுத்தாளர்கள் வரிசையில் அவர் முதலிடம் பெற்றிருந்ததும், 1980ல் வெளிவந்த Dளூsert (Desert) பிரெஞ்சுமொழிக்கென்றுள்ள பேரரறிஞர்கள் அமைப்பு வழங்கும் பரிசினைப் பெற்றிருந்ததும் அவர்மீதான எனது கருத்தியலை மறுக்கட்டமைப்பு செய்ய உதவின. கிளர்ந்த ஆர்வம் சோர்வுறுவதற்கு முன்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடந்து முடிந்த புத்தகவிழாவில் சிலாகிக்கப்பட்ட Ritournelle de la faim (Ritornello of hunger) அவரது சமீபத்திய நூலை அவசரமாக வாசித்து முடித்தேன்:
1945ம் ஆண்டு, பிரான்சு ஜெர்மானியர்களின் ஆக்ரமிப்பிலிருந்த காலம். சுந்தந்திரமாக நடமாட முடிந்த பாரீஸிலும், ஆக்ரமிப்பிலிருந்த நீஸ் நகரிலும் கடுந்துயரங்களையும் நெருக்கடிகளையும் உடல்வெளியில் சுமந்து அலுப்புற்ற எத்தெல் (Ethel)பெண்ணின் முதல் இருபதாண்டுகளில் இடம்பெற்ற அவல வாழ்க்கையை எடுத்துரைக்கும் நாவல். யுத்தகாலத்து பாரீஸ், மனித விலங்குகளின் மனவிகாரங்கள், கோரமுகங்கள், அடங்காப்பசிகள், பாய்ச்சல்கள், ஒழுங்கீனங்களென அதன் நீலம்பாரித்த ஆழ்கடலில் மூச்சுத் திணறியும், வெக்கை புழுத்த பாலையில் தாகவிடாயுடணும் இருபதாம் நூற்றாண்டின் தறிகெட்ட வாழ்க்கையை அசைபோடும் நாவலில், முன்னும் பின்னுமாக ஆசிரியர் நிகழ்காலத்திற்கு வருகிறார். தொடக்கத்தில் ஒரு சில பக்கங்கள் வயிற்றுப்பசியின் சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறது, பசியாற உதவிய டப்பாவில் அடைக்கபட்ட பாலும், இறைச்சியும் ஆசிரியரால் கொண்டாடப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் பெறும் புத்துணர்ச்சியும், அக்கடாவென்ற நிம்மதியையுங்கூட ஆசிரியர் சொல்லத் தவறவில்லை. பாவண்ணன் எழுதியிருந்த பசி என்னும் அரக்கன் என்ற தலைப்பிலான கட்டுரையையும், சுள்ளிக்காடு பாலசந்திரனுடைய திருவோண விருந்தினையும் நினைவூட்டுவதுபோல நாவலின் தொடக்கப்பகுதி அமைந்துள்ளது. எத்தெல் நல்லகுடும்பத்தைச் சேர்ந்த ஒர் இளம்பெண், சொலிமான் என்ற மாமனிடம் வளர்கிறாள். அவர் வயதானவர் என்றாலும் அன்பானவர். உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் கண்காட்சியொன்றில், மரபான மொரீஷியஸ் நாட்டு குடியிருப்பொன்றை (வராண்டாவும், ஊதா வண்ணமும்கொண்டது)ப் பார்த்து பிரியப்பட்டு அதை விலைக்கு வாங்கிவருகிறார். தம் சொத்து முழுமைக்கும் தமது மருமகளே வாரிசென்று எழுதிவைத்த குறுகிய காலத்தில் இறந்தும்போகிறார். பெறோர்களிடம் (அலெக்ஸாண்டர்- ஜஸ்ட்டின்) திரும்பும் எத்தெல் சொத்தினை, நிருவகிக்கும் பொறுப்பு இப்போது அவளுடைய தகப்பனிடம். பெண்ணின் சொத்தினை கரைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் நடக்கிறது. தம்பதிகள் இருக்கிற கட்டிடத்திலேயே வசிப்பவள் இசைநாடக அரங்குகளில் பாட்டுபாடும் பெண்மணி ‘மோது’. அவள் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு நேரங்காலமின்றி தனது வீட்டிற்கு வருவது திருமதி ஜஸ்ட்டினுக்கு எரிச்சலூட்டுகிறது, தனது கணவனின் கள்ளக்காதலியாக அவள் இருக்கக்கூடுமென்ற சந்தேகம். ஓயாமல் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. எத்தெல் கதையை முடித்த கையொடு மீண்டும் ஆசிரியரை கடைசியாகச் சந்திக்கிறோம், எதையோ சொல்ல மறந்த பதட்டம். வாசகர்கள் மனதிற்படிந்த சந்தேகத் தூசைத் தட்ட நினைக்கிறார். எத்தெலை தனது தாயல்ல என மறுக்கும் ஆசிரியர், அவள் தனது தாயின் நகல் என்பதை மறுக்கவில்லை. எத்தெல் கதையை எழுதியதற்கான வித்துணர்வு முளைகட்டிய விதத்தை கடைசியாக “இருபது வயதில், அவளது விருப்பத்திற்கு மாறாக வீராங்கனையாக வாழநேர்ந்த பெண்ணொருத்தியின் நினைவென்று” ஆசிரியர் கூறுகிறார்.
நோபெல் பரிசுத் தேர்வுக் குழுவினர் கடந்த அக்டோபர்மாதம் ‘லெ க்ளேசியாவை’ இலக்கிய பரிசுக்கென தேர்ந்தெடுத்தமையை வெளி உலகுக்கு அறிவித்தபோது, “இன்றைய மனிதகுல பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒர் புதிய மானுடத்திற்கான தேடுதல் வேட்டையில் கவித்துவ துணிச்சலும், உணர்ச்சிக் களிப்பும், ஒருங்கே அமைந்த படைப்பாளி”, எனப் புகழ்ந்தார்கள்.
லெ க்ளேஸியாவினுடைய படைப்பினைப் பொதுவாக விமர்சகர்கள் ஒருவகையான ‘பிரிவோம்பல்” (“oeuvre de la rupture”) என்கிறார்கள். எழுதிய படைப்புகள் தோறும், அவரது கதை மாந்தர்கள் ஊழிக்காலங்களால் வேருடன் பறித்து வீசியபின்பும் உயிர்பிழைத்து இறந்தகாலத்திற்காக ஏங்குபவர்களாக இருப்பது அவ்வாறான விமர்சனத்திற்கு தெம்பினைக் கொடுத்திருக்கிறது. எழுத்தாளரை அறிந்தவர்கள், அவரது பிறப்பு வளர்ப்பை அறிந்தவர்கள், இப்பிரிவோம்பலை நியாயப்படுத்துகிறார்கள். சொந்தவாழ்க்கையைச் சொல்கிறார் என்கிறார்கள். அகம் புறமென்றல்ல அதற்கும் வெளியே, மானுட எல்லைக்கோட்டிற்கு மறுவெளியில், அண்டத்திற்கு அப்பாற்பட்ட திசையில் அவரது பார்வைப் பயணிக்கிறது. ” இலக்கியம் கடல்போன்றது, ஏன் கடலுக்குமேலே அதாவது அலைகளுக்கு மேலாகவும் சூரியனை முன் வைத்தும் கடந்து செல்லும் ஒரு பறவையென்றும் கூறலாம்”, என ஒரு முறை எழுதியிருக்கிறார்.
பச்சைபிடித்த பின்பும் நாற்றங்காலை குறித்த கவலை பயிர் வாடுவதுபோல, லெ க்ளேஸி அகமனதில் தன்னை அந்நியான நிறுத்தி வதைபடும் மன நிலை அதாவது எங்கே சென்றாலும் ‘தனக்கான இடம் இதுவல்ல’ என்பதுபோல வேரினைத்தேடி துயரம் கசியும் எழுத்துக்கள்: “அதை நியாயப்படுத்தவென்று பெரிய காரணங்கள் எதையும் என்னால சொல்ல முடியவில்லை, இருந்தபோதிலும் என்னை செவ்விந்தியனாகத்தான் உணருகிறேன் (Haï,1971); அவனுக்குப் பெயரென்னவோ டேனியல்தான், ஆனாலும் மற்றவர்கள் அவனை சிந்துபாத் என அழைக்கவேண்டுமாம் (Mondo and other stories, 1978); கறுப்பின பெண்ணொருத்திக்கு மகனாக பிறந்திருக்கவேண்டுமென்ற ஆசை வெகுகாலமாக இருந்தது (The African, 2004) மேற்கண்ட அபிலாஷைகள், புற தேவைக்கான ஒரு ஏக்கமோ அல்லது புறவடிவத்தினை மறு செதுக்கலுக்கு உட்படுத்தும் உயிர்ச்சத்தற்ற கனவு வாக்கியங்களல்ல, அவை அவரது அகவய ஏக்கங்கள், தமது இருப்பு நிலையை எங்கே பொருத்தியும் நிறைவுறாத நாடோடி.
J.M.G. லெ க்ளேஸியோ என படைப்புலகத்தினராலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் நமது எழுத்தாளர் ஏப்ரல் 13ந்தேதி 1940 ஆண்டு பிரான்சிலுள்ள நீஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஆங்கிலேயர், மொரீஷியஸ் ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்தபோது அங்கே மருத்துவராக பணிபுரிந்தவர். தாய் வழியில் லெ க்ளேசியோ பிரெஞ்சு இனம். பதினெட்டாம் நூற்றாண்டில் மொரீஷியஸ் தீவிலிருந்து பிரான்சுக்கு குடிவருகிறார்கள். சிறுவயதில் பிரான்சு நாட்டில் தாத்தா-பாட்டியிடம் வளர்கிறார். எட்டுவயதில் நைஜீரியா நாட்டில் மருத்துவராக பணிபுரியும் தந்தையுடன் இணைகிறார். ஆக பால்யவயதிலேயே லெ க்ளேஸிக்கு நாடோடி வாழ்க்கை என்பது தீர்மானிக்கப்பட்டது என்றாகிறது. முதல் புலம்பெயந்த அனுபவத்தினை, ‘Onitsha’ (1991) என்ற ஆப்ரிக்க நகரத்தினை தலைப்பாகக் கொண்டு எழுதப்பட்ட நூலில் பதிவு செய்திருப்பதைப் பார்க்கிறோம்.
1950களில் நீஸ் நகரத்தில் பள்ளிக் கல்வி. வகுப்பில், பாடங்களில் கவனமின்றி சிந்தனையை அலைய விட்டதாக சொல்கிறார். இளம் வயதிலேயே சித்திர கதைகள், கவிதைகள், சாகஸக்கதைகள், தத்துவ விஷயங்கள், பயணக் கட்டுரைகள் என எழுதத்த் தொடங்கியிருக்கிறார். ‘வாசிப்பதற்கு முன்பாகவே தாம் எழுதத் தொடங்கியதாக’ சமீபத்தில் பிரெஞ்சு இலக்கிய வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியது இங்கே நினைவு கூறதக்கது. பிரான்சு, இங்கிலாந்து இருநாடுகளின் குடியுரிமையும் அவருக்கு உண்டென்பதால், பிரிஸ்டலில் மேற்கல்வியைத் தொடர்ந்தார், முதல் திருமணம் லண்டனில் நடந்தது.
1970ம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல்களில் புவியியல் ஞானம் அவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். பால்யவயதில் ஆரம்பித்து வைத்த நெடும்பயணம் தொடர்கிறது. பனாமா, அமெரிக்கா, மொராக்கோவின் தென் பகுதி, இந்து மகா சமுத்திர தீவுகள், பாரீஸ்- நீஸ் என்ற புவியியல் தேடலில், சொந்த வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கிறது, நியூ மெக்ஸிக்கில் 1977லிருந்து செய்யும் ஆசிரியப் பணி, 1975ல் மொராக்கோ நாட்டு பெண்ணுடன் நடந்த இரண்டாவது திருமணம், அவரது பதிப்பாளருக்காக பாரீஸ், பிறந்த ஊரென்ற கையில் நீஸ், மூதாதையர் நாடான மொரீஷியஸ் என ஆங்காங்கே பயணித்து உற்ற அனுபவங்கள், படைப்புகளில் வெளிப்படுகின்றன.
லெ க்ளேஸியினுடைய புத்தகங்கள் ஒவ்வொன்றும் மேற்கண்டவற்றுள் ஏதொவொரு இடத்தைச் சித்தரிக்கின்ற வகையிலேயே எழுதப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தவிர அந்நூல்களில் ஆசிரியரின் பதிவானது ஒரு தற்காலிக குடியின் உணர்வினைச் சாராது, நிரந்தகுடியொருவனின் அகப்பாடுகளாக இருக்கின்றன என விமர்சகர்கள் கருதுகிறார்கள். “நாடோடி மனநிலை என்பது லெ க்ளேஸிக்கான இரண்டாம் கட்டம், தாம் ஒரு பயணி என்பதையே அவர் மறந்து விடுகிறார்”, என்கிறார், பிரெஞ்சு இலக்கிய சஞ்சிகை ஒன்றினைச் சேர்ந்த ழான் க்ரோஸ்ழான்
நன்றி: காலச்சுவடு
————————————————————————————————-
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- பூனைகள்…
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- எழுத்து எழுதுகிறது
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- ஏ ஜே நூல் வெளியீடு
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- அந்த கொடிய பகலின் வேதனை
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- வேத வனம் விருட்சம் 16
- ஞயம் பட உரை
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- கிறிஸ்துமஸ் பரிசு
- நான் நிழலானால்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- விட்டு விடுதலையாகி….
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு