அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்



மூன்று தமிழர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே 4 குழுக்கள் அமைந்துவிடும் என்பதற்கு மாறாக, ஒற்றுமையும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையும் அன்புடனின் அடையாளங்களாக அமைந்திருப்பதில் தமிழ் வலைக் குழுமங்களில் மட்டுமல்லாமல் எனக்குத் தெரிந்த தமிழ் அமைப்புகளிலேயே அன்புடன் தனித்துத் தெரிகிறது. குழுமத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் வாழ்த்துக்கள்

போட்டி நடத்துவதென்பது எளிதல்ல என்பதை பலமுறை அனுபவத்தின் மூலம் கண்டறிந்திருக்கிறேன். அன்புடனின் இரண்டாவது ஆண்டு நிறைவுப் போட்டிகள் மிகவும் கோலாகலமாய் கச்சிதமாய் நடத்தப்பட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழக்கத்திலிருந்து விலகி, வாசிப்பனுபவம், பாடும் அனுபவம், கேட்கும் அனுபவம், பார்க்கும் அனுபவம் என கவிதையின் பல்வேறு பரிணாமங்களையும் சுகிக்கத் தந்த குழுவினருக்குப் பாராட்டுக்கள். ஒரே ஒரு குறை – சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற மற்ற படைப்பு வடிவங்களையும் சற்று கவனித்திருக்கலாம். அன்புடன் கவிஞர்களுக்கு மட்டுமான களமாக ஆகிவிடக் கூடாதல்லவா?

சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது கேளம்ப்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளிக்காக இரண்டு விளம்பரப்படங்கள் எடுத்தேன். வெறும் 10 -20 விநாடிகள்தான். ஆனால் அதற்கு ஸ்டோரி போர்ட் அமைத்து, நடிகர்களைத் தெரிவு செய்து, படம்பிடித்து, பின்னணிக் குரல், இசை சேர்த்துப் பார்க்க இரு நாட்கள் ஆயின. ஆனால் அவற்றை முழுமையாய்ப் பார்த்த விநாடி கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே… துள்ளிக் குதிக்க வேண்டும் போல உற்சாகம் பீரிட்டெழுந்தது, முகமெல்லாம் மத்தாப்பு என்றார்கள் சுற்றி இருந்தவர்கள். ஓராயிரம் வரிகள் சொல்ல முடியாததை ஒரு நல்ல காட்சி சொல்லிவிடும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. அதனால் காட்சிக் கவிதைப் பிரிவுக்கு நடுவராக இருக்கச் சொன்னதும் மிக மகிழ்ச்சியாகச் சம்மதித்தேன்.

12 கவிதைகளும் வந்து சேர்ந்த உடன் ஆர்வம் தாளமுடியாமல் பார்த்துத் தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்க்க முடிந்தது. பங்கு பெற்றவர்களைப் பாராட்டியே தீரவேண்டும். போட்டிப் பிரிவுகளிலேயே இதுதான் சிரமமான பிரிவு, அதிக சிரத்தையும் உழைப்பும் திறமையும் தொழில்நுட்ப அறிவும் தேவையான பிரிவு என்பது எனது எண்ணம்.

போட்டி விதிமுறைகளில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது.

– கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டுமென்றால், படைப்பு வீடியோ காட்சியாக இருக்க வேண்டுமா அல்லது புகைப்படங்களை இணைத்துச் செய்த படக்காட்சியாக இருக்கலாமா?

– பொதுவில் இலவசமாய்க் கிடைக்கும் படங்களையோ காட்சிகளையோ பயன்படுத்தலாமா?

இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லை என்றாலும் படைப்புகளை மதிப்பிட, ஸ்டோரி போர்ட், காட்சியழகு, காட்சிகளைக் கோத்த விதம், கவியழகு மற்றும் ஒலியழகு போன்ற அம்சங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டேன்.

ஒரு காட்சியின் வெற்றி நம்மை அதனோடு ஒன்றிவிடச் செய்வதில், நம்மில் ஒரு எதிர்வினையைக் கிளறிவிடுவதில் இருக்கிறது. எதிர்வினை ஒரு சின்ன புன்சிரிப்பாகவோ, ஒரு துளிக் கண்ணீராகவோ, மின்னலாய்த் தோன்றி மறையும் ஒரு சிந்தனைக் கீற்றாகவோ அல்லது வேறேதேனுமாகவோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அப்படி ஒன்றினை நம்மில் கிளப்பிவிட வேண்டும் – மண்ணுக்குள்ளிருக்கும் மணத்தை ஒரு சொட்டுச் சாரல் கிளறிவிடுவதைப் போல!

வாத்தியாரிடம் சண்டையிடும் ‘நம்பியார் பயலை’ டூரிங் டாக்கீஸின் புழுக்கத்திலும் ஒரு கிராமத்து ஆத்தா மண் வாரித் தூற்றுவதில்தான் அந்தக் காட்சியின் வெற்றி இருக்கிறது. ஒரு நல்ல திரைக்கதையால்தான் இது சாத்தியமாகும். அதுதான் படைப்பின் உயிர்நாடி. உயிர் மட்டுமிருந்தால் போதாதே! உடலும் இருந்தால்தானே படைப்பு முழுமை பெறும்?

இயக்குநர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் பார்த்திருப்பீர்களல்லவா? அதனைப் பின்னணி இசை சேர்க்குமுன் பார்த்தவர்கள் படம் தேறாது என்றே கூறினார்களாம். ஆனால் இளையராஜாவின் இசையுடன் முழுமை பெற்று வெளியானபின் என்ன நடந்ததென்று சொல்லத் தேவையில்லை.

திரைக்கதையோடு ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என இன்னபிற அம்சங்களும் காட்சிக்கு வலு சேர்க்கின்றன. எனவே, திரைக்கதை, காட்சியழகு, கவியழகு, ஒலியழகு, காட்சிகளைக் கோத்தவிதம் போன்றவற்றின் அடிப்படையில் காட்சிக் கவிதைகளை மதிப்பிட்டேன்.

சில படைப்புகளில் திரைக்கதை என்பதே முற்றிலுமாய் விடுபட்டுப் போயிருந்தது. சம்பந்தமில்லாமல் எதேதோ காட்சிகள். ஆனால் இங்கே நான் உட்பட எல்லோரும் கற்றுக் குட்டிகள்தானே! அடுத்தமுறை இதில் கவனம் செலுத்தினால் ஆயிற்று!

சில படைப்பாளிகள் தமது கவிதைக்காக பிரத்யேகக் காட்சிகளைப் படம் பிடித்திருந்திருந்தார்கள்; நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருந்த சிரத்தை தெரிந்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு காட்சியை உருவாக்குவதிலுள்ள நிறைவை அவர்கள் சற்றேனும் சுகித்திருப்பார்கள்.

பரிசுக்குரிய படைப்புகளாக நான் தேர்ந்தெடுத்த படைப்புகளையும் அவை குறித்த சிறு விமர்சனங்களையும் கீழே தருகிறேன்.

ஆறுதல் பரிசுக்குரிய இரு படைப்புகள்:

அருவி:

இந்தப் படைப்பின் மிகப் பெரிய பலம் பின்னணிக் குரல் என்றுதான் சொல்வேன். இனிமையான குரல், ரஸமான வாசிப்பு, தெளிவான உச்சரிப்பு. கவிதையில் இருந்த சந்தமும் வாசிப்புக்கு உறுதுணையாய் இருந்தது. திரைக்கதை என்று பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் கவிதையோடு ஒத்த காட்சிகளாலும் காட்சிகளில் இருந்த இயற்கையழகினாலும் படைப்புக்கு ஒரு உந்துதல் கிடைத்திருக்கிறது. பரிசில் பாதியேனும் நயாகராவுக்குச் சேரவேண்டும் 🙂

துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!

என்ற வரிகள் கவர்ந்தன.

ஒரு காட்சியில் ஓரு ஃப்ரேம் சரியில்லை என்றாலும் சில சமயம் காட்சி பாழ்பட நேரும். அருவி எங்கோ இருக்க, ஒரு பெண்ணின் பின் தலையும் கேசமும் சில நொடிகள் பிரதானமாய் வந்து போவதை வெட்டி எறிந்திருக்கலாம். பெரிய சிரமமொன்றுமில்லை. இத்தகைய சின்னச் சின்ன சிரத்தைகள் படைப்பில் பெரிய மாறுதலைக் கொண்டுவரும்.

மூப்பு:

இந்தப் படைப்பு ஒரு வயதானவரின் மூக்கிலிருந்து துவங்குவது ஒரு பெரிய சறுக்கல். முகத்தை முழுமையாகக் காட்டியிருந்தாலோ அல்லது சோகம் ததும்பிய கண்களிலிருந்து துவங்கியிருந்தாலோ கூட தாக்கம் சிறப்பாக இருந்திருக்கும்.

படைப்பின் ஆரம்பக் காட்சிகளில் நடித்திருக்கும் மனிதரின் பாடி லாங்குவேஜ்தான் இந்தப் படைப்பின் உயிர்நாடி. அலுப்பையும் தனிமையையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரிடம் மூப்பு தெரியவில்லை என்பது ஒரு சிறிய குறை.

//மூப்பு வந்து முதுகை அழுத்த
மூச்சிரைத்து மார்பும் வலிக்க
முட்டாள் மனது ஏக்கத்தோடு//

//உடலும் உலர்ந்து ஓய்ந்து விட்டது – இன்று
உயிரும் பசையின்றிக் காய்ந்து விட்டது//

போன்ற உணர்ச்சி மிக்க வரிகளை மனித முகங்கள் அருமையாய்ப் பிரதிபலிக்கும். ஆனால் கேமரா அஃறிணைப் பொருட்களையே சுற்றி வருவதால் உணர்வுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெகு நேரம் வருகிற மொட்டை மரம் சற்று எரிச்சலைக் கூட ஏற்படுத்துகிறது. எனினும், கவிதை வரிகளுக்கேற்ப காட்சிகள் படமாக்கப்பட்டிருந்ததால் காட்சிக் கவிதையின் மதிப்பு கூடியதென்னவோ உண்மை.

பின்னணி இசையும் உச்சரிப்பும் நன்று – இளமையை இளைமை என்பதைத் தவிர.

//இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்.
மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்.//

– இவை கவிதையின் நம்பிக்கையான வரிகள். கவிதையில் சந்தம் இன்னும் கொஞ்சம் சந்தம் சேர்ந்திருக்கலாம்.

இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு:

“பூங்கா”

பூங்காவை மையமாகக் கொண்ட அழகான சில காட்சிகள் படைப்பின் பலம். குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்தது ஒரு குறையே. குழந்தைகளையும் பூக்களையும் எப்படிப் படம் பிடித்தாலும் அழகாய் அமைந்துவிடுமென்பதால் இந்தக் குறையைப் பமிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம்.

நீ பாதி நான் பாதி படத்தில், ‘நிவேதா’ பாடலை கவனித்திருக்கிறீர்களா? குட்டிக் குட்டியாய் க்யூட்டாய் அவ்வளவு காட்சிகள்.. அத்தனையும் கவிதைகள். அப்படி அமைந்திருக்க வேண்டிய கவிதை இது…

சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம்.

ஒவ்வொரு பருவத்தின் உணர்வுகளையும் வெளிப்படுத்த அந்தத்தப் பருவத்தினரின் முக உணர்வுகளைக் கொஞ்சமேனும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். எடுத்துக்காட்டாக,
//தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ//
என்ற வரிகளுக்கு ஒரு மழலையின் எச்சிலொழுகுகிற சிரிப்பு காட்சியாய் அமைந்திருந்தால் நம்மைச் சிலிர்க்க வைத்திருக்குமல்லவா! எனினும் நல்ல ஆரம்பமே!

கவிதையைக் காட்சியில் எழுதுகிற வேகம், சில வேளைகளில் பார்வையாளர்களைக் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் செய்கிறது. இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது.

முதல் பரிசுக்குரிய படைப்பு:

“உயிர் வலிக்க வலிக்க…”

‘க்ளியர் வின்னர்’ என்று இந்தப் படைப்பினைச் சொல்லலாம் – கிட்டத்தட்ட போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல.

மனதை உலுக்குகிற படைப்பு. இனப்பிரச்சினைகளை மிகச் சிறப்பாய் எடுத்துக்காட்டியிருக்கிறார் படைப்பாளி. மொழிபெயர்த்து சேவை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வளவு நேர்த்தி.

கொய்யா மரத்தில்
குடியிருக்கும்
என் தம்பியின்
அசைவற்ற உடல்…

எனக்குள்
அதிர்கிறது!!!

காட்சி நம்மையும் அதிரவைக்கிறது. அதுதான் இந்தப் படைப்பின் வெற்றி. ஒவ்வொரு படமும் ஒரு அகதியின் அத்தியாயத்தை அழுத்தமாய்ப் பேசுகிறது – வார்த்தைகளின் தேவை இல்லாமலே! வார்த்தைகளும் சேர்ந்து கொள்ளும்போது கனம் தாங்காமல் மனது மௌனமாய் சுருண்டு கொள்கிறது.

உன்
ஞாபகத்தூறலோடு
நடக்கிறேன்…

நான்
இன்னும்
நீண்ட தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது!!!

(ஞாபகத் தூறல்… என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்!) இப்படி கவிதை முற்றுப் பெறும் பொழுது நெஞ்சு வெறிச்சென்றிருக்கிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு, வெறும் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டிய வலியை உணரமுடிகிறது.

இந்தக் கவிதையைத் தனியாய்ப் படித்திருந்தால் இப்படி ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்காது… இதுதான் இந்தக் காட்சிக் கவிதையின் வெற்றி

முகத்திலறைகிற புகைப்படங்களை அழகாகக் கோத்து, உயிரைத் தொடுகிற சோகத்தைப் பின்னணி இசையில் புகுத்தி, இதயத்தைத் துளைக்கும் வார்த்தைகளால் கட்டியெழுப்பி படைப்பினை நம் மனதுக்குள் ஒரு தாஜ்மஹால் போலப் பிரமாண்டமாய் இருத்திவிடுகிறார் இயக்குநர். பிரத்யேகமாய் வீடியோ எதுவும் பதிவு செய்யாமலேயே இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதீத திறமை தேவை. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

கவிதை இன்னும் சற்று கோர்வையாக இருந்திருக்கலாம் என்பதைத் தவிர எனக்குக் குறையேதும் தெரியவில்லை.

அன்புடன்
நிலா

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


http://groups.google.com/group/anbudan

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts