செல்வன்
ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு மையலில் வீழ்வது வெகு பிரசித்தியானது.ஆனால் கம்ப ராமாயணம் முழுக்க அவர்கள் இருவரையும் முதல் முதல் கண்டவர்கள் காதலில் வீழ்ந்த கதைகளை கம்பன் சுவாரசியமாக சொல்லுகிறான்.
மிதிலையில் ராமன் உலா வருகிறான்.அவனை கண்ட மகளிர் அந்த விநாடியே மையலில் வீழ்ந்தனராம்.
பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம்,
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால்
அத்தனை கருவிழிகள் காகுத்தன் மேனி சேர்ந்து தான் அவன் மேனி கருத்ததோ என வியக்கிறான் கம்பன்.
ராமனின் முழு உருவையும் பார்த்து மையலில் யாரும் வீழவில்லையாம்.அவன் தோளை கண்டவர் தோளை மட்டுமே பார்த்தனராம்.தோளைகண்டவருக்கு கண்னை அதிலிருந்து எடுக்கவே மனதில்லையாம்.தாளை கண்டார் தாளையே பார்த்தனராம்.அவன் முழு வடிவையும் எந்த வாள் விழியும் காணவில்லையாம்.(அடிமுடி காண முடியாத பரப்பிரம்மத்தின் முழு உருவையும் மானிடரால் காண முடியாதன்றோ?)
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? –
அம்புகளை எறிந்து எறிந்து பொன் சிலை போலும் அழகு படைத்த காமனுக்கு அம்புறாத்தூணியே தீர்ந்து போய்விட்டதாம்.இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் மையலில் வீழ்ந்தால் அம்புகளுக்கு அவன் எங்கு போவான்?அர்ச்சுனன் போல் அம்புகள் தீரா தூணியையா வைத்திருக்கிறான் காமன்?அம்புகள் தீர்ந்ததால் உடைவாளை எடுக்க வேண்டிவந்ததாம் காமனுக்கு.
வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான்
காதலை மறைக்க எண்ணினாளாம் ஒரு பெண்.மனதை மறைக்கலாம்.முகத்தை கூடவா மறைக்க முடியும்?முகத்தில் தோன்றும் காதல் உணர்ச்சியை அவளால் மறைக்கவே முடியவில்லையாம்
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள், அது அறிந்தனன்; – அற்றம் தான்,
மனங்கள் போல, முகமும் மறைக்குமே?
இந்த பெண்களாவது பரவாயில்லை.சீதையை கண்ட ராவனன் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது.அதுவும் கண்டதும் காதல் தான்.10 தலை,20 கண்கள் படைத்த ராவனன் சீதையை கண்டதும் தான் தன் 20 கண்களின் சிறுமையை உணர்கிறானாம்.காணக்கண்கோடி வேண்டும் சீதையின் அழகை காண வெறும் 20 கண்கள் தானா என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆயிரம் கண்களாவது வேண்டாமா இவள் அழகை காண?வெறும் 20 கண்கள் எதற்கு போதும் என வருந்துகிறானாம்.
‘சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை!’ என்று, அல்லல் எய்தினான்
கஷ்டப்பட்டு பிடித்த மூவுலகங்களையும் இவள் காலடியில் ஒப்புவித்துவிட்டு,தன் தேவிமாரையும்,தான் பிடித்த இந்திரன் முதலான தேவ்ர்களையும் இவளுக்கு அடிமையாய் தந்துவிட்டு மூவுலகையும் இவள் ஆள இவளுக்கு நானும் அடிமையாய் இருந்து இனி ஏவல் செய்வேன் என மூவுலகும் ஆளும் லங்காபதி எண்ணுகிறானாம்.
‘தேவரும், அவுணரும், தேவிமாரொடும்,
கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட,
மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான்
ஏவல் செய்து உய்குவென், இனி’ என்று உன்னினான்
தன் தங்கை சூர்ப்பனகை மீது அவனுக்கு திடீர் பாசம் வந்துவிடுகிறது.அவள் அன்றோ இப்படி ஒரு புவன மோகினியை தனக்கு காட்டினாள்?அவளுக்கு என்ன பரிசு கொடுத்தால் தகும்?தன் ராஜ்ஜியம் முழுவதையும் பரிசாக தந்தாலும் தகுமே என எண்ணுகிறானாம் இராவனன்.
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு’ என்று எண்ணினான்
இதே போல் சூர்ப்பனகை,அனுமன்,வாலி முதலியானோர் இவர்களை கண்டதும் காதலில் வீழ்ந்த காட்சிகளை கம்பன் அழகாக வர்ணிக்கிறான்.வாலி காதலில் வீழ்ந்த காட்சி மிகவும் ரசமானது.ராமன் அம்பு பட்டு வீழ்ந்த வாலி முதலில் தரிசிப்பது ராமனை அல்ல. ராம நாமத்தையே.ராம பாணத்தில் பொறிக்கப்பட்ட ராமநாமத்தை கண்டு காதலில் வீழும் வாலி அதன் பின் ராமனை காண்கிறான்.
வால்மிகியின் வாலி வதைப்படலத்தில் வாலி ராமனை வசை பாடுகிறான்.ஆனால் பரம பாகவதனான கம்பன் அதற்கு இடம் தரவில்லை.கம்ப ராமாயணத்தில் வாலி வசை பாடுவதில்லை.ஸ்தோத்திரம் பாடுகிறான்.
தன் மேல் அம்பு எய்து கொன்றவனை வசைபாட வாலியால் முடியவில்லை.அவனை போற்றி துதிக்கிறான்.அவன் மேனி அழகை,குணநலன்களை புகழ்ந்து பாடுகிறான்.அதை படித்தாலே வாலி ராமன் மேல் கொண்ட காதல் தான் தெரியும்.அல்ல..அல்ல.. கம்பன் ராமன் மேல் கொண்ட காதல் தான் தெரியும்.
வாலி மீது ராமன் அம்பு எய்ததும் மண்ணில் வீழ்ந்த வாலி அந்த அம்பை பறிக்கிறான்.யார் அந்த அம்பை எய்தது என உற்று நோக்குகிறான்.அந்த அம்பில் அவன் எதை கண்டான்?
கம்பனின் கன்னல் தமிழில் கேளுங்கள்
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்
ராம நாமம் மீது கம்பன் கொண்ட காதல் ராமன் மேல் கொண்ட காதலை விட மேலானதாக தோன்றுகிறது.அந்நாமத்தை வாலி கண்டதும் சாலப்பொருத்தம் தான்.மரணத்தருவாயில் இருப்போனுக்கு ராமநாமத்தை விட சிறந்த துணை எது?
வாலி ராமனை இகழ்ந்துரைக்கிறான்….எப்படி திட்டுகிறான்?கம்பனின் வாயால் கேளுங்கள்.
‘வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும், தருமமும், தழுவி நின்றாய்
திட்டும் வார்த்தைகளாம் இவை.நல்ல அழகு தான் போங்கள்.தாய்மையும்,நட்பும் தருமமும் தழுவி நின்றாய் என திட்டு கிடைக்கிறது.
திட்டு மேலும் தொடர்கிறது.
‘குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
ராமனின் புவன மோகனம் வாலியின் நெஞ்சை கொள்ளை கொண்டுவிட்டதாம்.தடுமாறுகிறான்.
‘கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் –
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! – உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை
தன் மீது அம்பெய்தவனை,தன் உயிரை போக்கியவனை எப்படி வர்ணிக்கிறான் என பாருங்கள்.
ஓவியத்து எழுத ஒண்ணா உருவமாம் காகுத்தனுக்கு.கொடுமையே உருவானவனே என சொல்ல வேண்டியவன் புகழ் மாலை போட்டுக் கொண்டுருக்கிறான்.சானகியை எப்படிக்கவி பாடுகிறான் என பாருங்கள்.சனகன் பெற்ற அன்னமாம்.அமுதாய் வந்த தேவியாம்.
“அமுதாய் வந்த தேவியை பிரிந்த திகைப்பால் செய்தாயா என் தகப்பனே?” என கனிவோடும் காதலோடும் கேட்கிறான் வாலி.
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?
‘ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
கலியது காலம் வந்து கலந்ததோ? – கருணை வள்ளால்!-
தன் மீது அம்பெய்திவனை தகப்பனே என்கிறான்.கருணை வள்ளலே என்கிறான்.
ராமனை இந்த லட்சணத்தில் திட்டி விட்டு லட்சுமணனை பார்த்து என்ன சொல்கிறான்?அவனைப்பார்த்தாவது கோபம் வருகிறதா?இல்லையே எப்படி வரும்?
‘தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி’ என்றான் – சிறியன சிந்தியாதான்
“தருமமாய் நின்ற தம்பியாம்.”
“தாயாய் நின்று அருள் செய்தானாம்”
மரணப்படுக்கையிலும் கண்டவனை காதல் கொள்ள வைத்த வடிவழகாம் கம்பனின் ராமனுக்கு.
——————————–
holyox@gmail.com
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- விருந்தோம்பின் பாடல்
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- யாத்ரா பிறந்த கதை
- கடித இலக்கியம் – 3
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- கண்டதும் காதல்
- வளர்ந்த குதிரை – 2
- அப்பாவின் அறுவடை
- ஒற்றைப் பனைமரம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கடிதம்
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- ‘இருதய சூத்திரம்’
- கற்பதை விட்டொழி
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 14
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- தோணி
- கால மாற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- கவிதைகள்
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பிரமோத் மகாஜனின் மறைவு
- உண்மையைத் தேடியலைந்தபோது
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19