தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

லதா ராமகிருஷ்ணன்


—-

14.08.2005 அன்று சென்னை தியாகராயகர் , தக்கர்பாபா வித்யாலயாவில் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பேரவை நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் ‘ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டமொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்களின் கருத்தினை ஒட்டி உருவாக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முதல் சிறப்புப் பேரவை இது.

30.3.2005 அன்று சங்கம் பதிவு செய்யப்பட்டது.சிறப்புத் தலைவராக மூத்த மொழிபெயர்ப்பாளர் மாஜினியும், தலைவராக பேராசிரியர் கோச்சடையும்,செயலராக அமரந்தாவும், பிற செயற்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.சென்ற ஆஅண்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் யோசனைக்கேற்ப கட்டுரைகள் சேகரிக்கப்பட்டன.

சிறப்புப் பேரவையில் எதிர்காலப் பணிகளைத் திட்டமிடவும், மொழிபெயர்ப்பு நூல்களில் அரசியல்-சமூகம் மற்றும் பிற துறைகள் சார்ந்த இரு பகுதி நூல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் விவாதங்கள் நடைபெற்று கருத்துக்கள் தொகுக்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர்களுக்கென ஒரு விரிவான கலைச்சொல் அகராதியைத் தொகுக்கவும், தமிழ்மொழிபெயர்ப்பாளர்களின் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கவும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டன.

சங்கத்தின் சார்பில் மொழிபெயர்ப்பு சார்ந்த கட்டுரைகள் அடங்கிய ‘ தமிழில் மொழிபெயர்ப்புக் கலை – இன்று ‘ என்ற தொகுப்பும், எண்பது வயதைக் கடந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் ‘திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் மொழிபெயர்த்த பல்வேறு இந்திய மொழிச் சிறுகதைகள் அடங்கிய ‘அனைத்தும் கடந்து ‘ என்ற தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டன.

பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட முதல் நூலினை முனைவர். கே.எஸ். சுப்பிரமணியம் வெளியிட மொழிபெயர்ப்பாளர் திரு. இளம்பாரதி பெற்றுக் கொண்டார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘அனைத்தும் கடந்து ‘ கதைத் தொகுப்பினை திரு. மாஜினி வெளியிட மொழிபெயர்ப்பாளர் திரு. இரா.நடராசன் பெற்றுக் கொண்டார். மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோல்களை வெளியிட முன்வந்த பதிப்பாளர்கள் இருவரையும் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மூத்த மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் நா.தர்மராஜன், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்கென ‘திசை எட்டும் ‘ என்ற தமிழ்க் காலாண்டிதழை வெளியிடும் திரு. குறிஞ்சிவேலன் ஆகிய மூவரையும் பாராட்டி புதுமைப்பித்தை நூற்றாண்டு நினைவுப் பரிசிகள் வழங்கப்பட்டன. அம்மூவரையும் பாராட்டி முறையே பேராசிரியர் ம.பெ.சீனிவாசன், திரு.அழகியபெரியவன், திரு. ஜெயந்தன் ஆகியோர் உரையாற்றினர். விவாதங்களில் வந்த கருத்துக்களைத் தொகுத்து திரு. தியாகு அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.

கருத்தரங்கினைப் பாராட்டியும், தங்கள் கருத்துக்களை வழங்கியும், கவிஞர் தமிழன்பன் அவர்களும், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் திருமதி சாந்தா தத் (ஹைதராபாத்) அவர்களும் நிறைவு செய்தனர்.

முழுநாளும் அனைவரின் பங்கேற்புடன் நடந்த பேரவை, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும், மொழிபெயர்ப்பாளர்-பதிப்பாளர் இடையே னல்லுறவையும் உறுதி செய்தது.

தீர்மானங்கள்

—-

1/மொழிபெயர்ப்பாளர்களுக்கு நூலின் பதிப்புரிமை வழங்கப்பட வேண்டும்.

2/சாகித்திய அகாதெமி விருது பெறும் பிற மொழி நூல்கள் தமிழிலும், தமிழ் நூல்கள் பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட நடவடிக்கை தேவை.

3/ தமிழகப் பல்கலைக் கழகங்களில் மொழிபெயர்ப்புக்கென தனிப்புலம் அமைக்கப்பட வேண்டும்.

4/பல்கலைக் கழக அனைத்துத் துறைகளிலும் மொழிபெயர்ப்புக்கென தனி ‘இருக்கைகள் ‘ நிறுவப்பட வேண்டும்.

5/தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு குறித்த ஆய்வு மற்றும் உயராய்வு செய்திட மாணவர்களைப் பல்கலைக் கழகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

6/ தமிழ் நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்த்திட மொழிபெயர்ப்பாளர்கள் முன்வர வேண்டும்.

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

author

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts