கவிதை….

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


‘அனைவரும் கவிஞர்களே ‘ -என எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் மக்கள் தொகையைக்காட்டிலும் கவிஞர்களின் தொகையே அதிகமென கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னதாகவும் ஞாபகம்.

அதெப்படி அனைவரும் கவிஞர்களாக இருக்கமுடியும்! என்ற கேள்வியும் எழுகிறது.

அனைவரும் கவிஞரென்றால் நூலகங்களைக் கவிதை நூல்களே ஆக்கிரமித்திருக்கும்.

கவிதைநூல்களை வைப்பதற்கே தனி நூல்நிலையம் தேவைப்பட்டிருக்கும்.

அந்த நூல்நிலையமும் போதாது என்ற நிலை உருவாகியிருக்கும்.

கவிதை எழுதியதால்தான் ஒருவரைக் கவிஞரென்று அழைக்கிறோம்; அடையாளப்படுத்துகிறோம். இல்லையெனில் எல்லோரையும் எப்படி

கவிஞரென்று அழைக்கமுடியும் ?

யார் கவிஞர் ?

யார் கவிஞரில்லை ? என்பதை அவரவர் காட்டுகின்ற ஈடுபாட்டைவைத்து;கவிதை வெளிப்பாட்டை வைத்து முடிவுசெய்கிறோம்.

இந்த ஈடுபாடு என்பது கவிதை ஈடுபாடு அல்லது இலக்கிய ஈடுபாடு.

கவிதை ஈடுபாடு என்பதுகூட கவிதை எழுதும் ஈடுபாடாக இருக்கலாம் அல்லது கவிதையைச்சுவைக்கும் ஈடுபாடாக இருக்கலாம்.

இரண்டும் இல்லாத நிலையில் அவர்களைக் கவிஞரென்று அடையாளப்படுத்துவது கடினம்.

இந்த நிலையில் ‘ அனைவரும் கவிஞர்களே ‘ என்ற கூற்றை எப்படி ஏற்கமுடியும் ?

கவிதையை எழுதிக்காட்டாமலும் ;பாடிக்காட்டாமலும் வாழ்கிறவர்களைக் கவிஞர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

ஆனால்….எழுதிக்காட்டாவிட்டாலும், பாடிக்காட்டாவிட்டாலும், கவிதை உணர்வோடு;ரசனையோடு வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்க்கவிதை என்ற தோற்றம் இதயம் சார்ந்ததாக இருப்பதைவிட இலக்கணம் சார்ந்ததாக அமைந்ததால் பலரும் தங்களுக்குள் நிகழும்

கவிதை உணர்வை; கவிதைக்கனத்தை;கவிதை எழுச்சியை;கவிதை உந்துதலை வெளிக்காட்டமுடியாமல் இருந்துவிட்டார்கள்;

இறந்துவிட்டார்கள்;

இருந்துவிடுகிறார்கள்.

கவிதைக்கு இலக்கணம் தடையல்ல.

உணர்வின் ஓட்டம்தான் கவிதை. மொழியும் சிந்தனையும் கைகூடி அழகாக ஒரு வடிவம் கண்டால் அதுதான் கவிதை என்ற வழிகாட்டுதல்

வந்தபிறகு எல்லாரும் கவிதை எழுத வந்தார்கள்; வருகிறார்கள்.

கவிதையைப்பெற்றெடுக்க எளிய வழியையும் ,சுதந்தர உணர்வையும், உரிமத்தையும் வழங்கிய பிறகும்கூட எல்லாரும் கவிதை எழுதவில்லை.

அதிகமானோர் எழுதினார்களே ஒழிய அனைவரும் எழுதவில்லை.

பார்ப்பது;படிப்பது;ரசிப்பது என்ற அளவிலேயே கவிதா உணர்வை அடக்கம் செய்துவிட்டார்கள்.

எழுதத்தூண்டிய உணர்வுகளை அடக்கிப்போட்டுத் தானும் அடக்கமானவர்கள் எத்தனையோபேர்.

வாழ்க்கை… கவிதைடுமீறுநுசூனீயூல்ஷ, வாழ்தலை முன்னிலைப்படுத்துகிறபோது; சூழல் தருகிற நெருக்கடியில் திசைமாறும்போது கவிதை காணாமற்போவது இயற்கை.

அப்படிக் கவிதைமட்டும் காணாமற்போகவில்லை…கவிஞர்களும் காணாமற்போய்விட்டார்கள்.

அதே வழியை; அதே தடத்தைப் பின்பற்றாமல் …புயலை,பூகம்பத்தை வரவேற்று எதிர்நிலையில் பயணம் செய்தவர்கள் ‘கவிஞர்கள் பிறக்கிறார்கள் ‘

என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்களாகிவிடுகிறார்கள்.

சூழலும் வாய்ப்பும் கைபிடித்து எழுது என்றதும் எழுதியவர்கள் ‘கவிஞர்கள் உருவாகிறார்கள் ‘ என்ற கூற்றுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

‘கவிஞர்கள் உருவாதில்லை பிறக்கிறார்கள் ‘ என்பதும்

‘கவிஞர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள் ‘ என்பதும் இப்படித்தான்….

இரண்டாயிரமாம் ஆண்டில்,

கண்ணதாசன் பிறந்த நாளில்,

கம்போங்கிளாம் சமூகமன்றத்தில்,

‘கடற்கரைச்சாலைக் கவிமாலை ‘ என்று தொடங்கிய கவிஞர்களின் சந்திப்பு…சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிவரலாறு. அங்கே பிறவிக்கவிஞர்களும்,பிறந்து உருவானக் கவிஞர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.

சந்திப்பின் விளைவு கவிதை விளைச்சலைப்பெருக்கிவிட்டது.

கவிதை அறுவடை அமோகமாகிவிட்டது.

அதற்குப்பின் யார் பிறந்தார்கள் ?

யார் பிறந்து உருவானார்கள் ? என்ற அடையாளம் அழிந்துவிட்டது.

கவிதை….கவிதையாகிவிட்டது.

இப்போது அங்கு எல்லோரும் கவிஞர்கள்.

காரணம் அவர்கள் அடிப்படையில் சிந்திக்கிறார்கள்.

சிந்தித்ததை அப்படியே எழுதாமல் அசைபோட்டு அசைபோட்டு கவிதை மணத்துடனும்;கவிதை மனத்துடனும் எழுதினார்கள்.

எண்ணம் கவிதையானது.

கவிதை வண்ணமானது.

இப்படிக் கவிமாலை ஒரு தளமாக இருந்து கவிதைக்கு வழிவிட்டதில் கவிதையும் கவிஞர்களும் நமக்குக் கிடைத்தார்கள்.

இதன் மூலம் எழுதும் காலமும்,எழுதவைக்கும் காலமும் ா அனைவரும் கவிஞர்களே ா என்பதை நிலைநாட்டுகிறது.

கவிமாலைக்கு வந்து கவிஞர்களாக நம்மைப் பிரமிக்கவைத்தவர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது.

தமிழுக்குக் கவிஞர்களின் வரவு என்பது தமிழ்மொழியின் நிலை உயர்வு என்பதைத்தான் காட்டும்.

காரணம் மொழி அழகாக இருக்குமிடம் கவிதைதான்.

அழகாக இருக்க யாருக்கு விருப்பமில்லை ?

மொழிக்கும் அந்த விருப்பம் அதிகம் இருக்குமில்லையா ?

மொழி அழகாக இருப்பதும், மொழியை அழகாக வைத்திருப்பதும் கவிதைதான்.

ாஇவர்கள்தாம் கவிஞர்கள்ா என்றிருந்த நிலைமாறி ; நிலையைமாற்றி ாஇவ்வளவுப்பேரும் கவிஞர்கள்ா என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்;உருவாகியிருக்கிறது.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் வேறுபடுகிறார்கள்.

அந்த ஒவ்வொருகோணமும் ஆரோகணமாக இருக்கிறது. அதாவது ஆரோக்கியமாக இருக்கிறது,புதுமையாக இருக்கிறது.

ஒருகவிதை எழுத வருகிற கவிஞர் ,ஏதோ …எதையோ… என்று எழுதாமல்…கவிதை உணர்வைச்சுமந்து தவிப்பதையே

கவிதையாக எழுதுகிறார்.

முதலில்,கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

அது

அவரை எழுதச்சொல்லி உந்தித்தள்ளுகிறது.

உந்தித்தள்ளும்போதே ஒரு உத்வேகமும் பிறக்கிறது.

ஆனால், அதை அவசர கோலமாய் அள்ளித்தெளித்துவிடக்கூடாதே என்ற கரிசனமும் பிறக்கிறது.

அதன்வழி ஒரு நிதானமும் கிடைக்கிறது.

இந்த நிலையில் அது எப்படி ? எங்கே ? எப்போது ? என்ற தவிப்போடு ‘ உயிரைச் சுடுகிறது

உறக்கம் தொலைக்கிறது ‘ என்ற தத்தளிக்கும் நிலையை

கவிஞர் கலைச்செல்வி வைத்தியநாதன் அழகாக, ஓசை ஒழுங்காக எழுதிக்காட்டுகிறார்.

எழுதுவதற்குமுன்… மனமே சொல்வதாக ‘ புடம்போட்ட பின்னாலே

பொங்கிவழி என்கிறது ‘ என்று எழுதுகிறார்.

ஒரு கவிதைத்தோன்றிய கணம்;கனம் ,எழுத விழையும் அவசரம்;ஆவேசம்,தடுத்து நிறுத்தும் மனம்.. இவற்றுடன் ஒரு நல்ல கவிதைக்காகத்

தவிப்பதைக் கவிதையாக எழுதியிருக்கிறார் படியுங்கள்.

‘ உள்ளுக்குள் இருக்கிறது

ஓயாமல் உருள்கிறது

உந்தித் தள்ளிடத்தான்

உத்வேகம் பிறக்கிறது

முயற்சிச் செய்திடநான்

முழுமூச்சாய் இறங்கையிலே

ாஅடக்கு!.அடக்கு!ா..மனதில்

அசரீரி கேட்கிறது

அடக்கினாலும் அவஸ்தை

அடுத்தநாளே தொடர்கிறது

அசரவில்லை அசரீரி

ாஅவசரம்ஏன் ?ா என்கிறது

ஆவேசம் அதிலில்லை

அக்கறைதான் தெரிகிறது

ாபுடம்போட்ட பின்னாலே

பொங்கிவழிா என்கிறது

உள்ளபடிச் சொல்வதென்றால்

உறுதியாக நானறியேன்

எப்போது…எங்கே..

எப்படிஎன் கவிதை

எந்தவிதம் வெளிவருமோ

உள்ளூக்குள் இருக்கிறது

ஓயாமல் உருள்கிறது

உயிரைச் சுடுகிறது

உறக்கம் தொலைக்கிறது ‘

இங்கே ஓர் உணர்வு கவிதையாகியிருக்கிறது. சிலி நாட்டுக்கவிஞர் நோபல் பரிசுபெற்ற பாப்லோ நெரூடாவுக்கும் இதே அவஸ்தை ஏற்பட்டிருக்கிறது. அவர் முதலில் எழுதியது கட்டுரைதான்.சரியாகப் படிக்கக்கூடத்தெரியாத வயதில் ஒருநாள்

ஒரு கொந்தளிப்பான உணர்வு. சில சொற்கள் ,அறிமுகமில்லாத சொற்கள் அவருள் தோன்றின.அதற்குமுன் அனுபவித்திராத

உணர்வை அனுபவித்த நெரூடா தனக்குள் தோன்றிய சொற்களை ஒரு காகிதத்தில் எழுதிவைக்கிறார். அதுதான் அவருடைய

முதல் கவிதை பிறந்த விதம். கலைச்செல்விக்கும் நெரூடாவுக்கும் ஏற்பட்ட அனுபவம் ஒன்றுதான். அதாவது அவஸ்தை இருவருக்கும் ஒன்றுதான்.கலைச்செல்வி உணர்வை கவிதையாக்கியிருக்கிறார். நெரூடா, உணர்வுடன் தோன்றிய சொற்களை

எழுதி கவிதையாக்கியிருக்கிறார்.

இருவருக்கும் அடிப்படை உணர்வால் விளைந்த உள்ளக்கொந்தளிப்பு.

கொந்தளிப்பில் உணர்வும் சொற்களும் இரட்டைக்குழந்தைகள் ஆகின்றன.

கவிதை எழுத நினைக்கிறவர்கள் நினைத்ததும் எழுதக்கூடாது.

நினைத்ததையெல்லாம் எழுதக்கூடாது.

‘புடம்போட்ட பின்னாலே பொங்கிவழி.. ‘ என்பதிலிருந்து அது புரியும் என்று நினைக்கிறேன்.

இந்த இடத்தில் அண்மையில் நான் படித்ததைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘ நல்ல கவிதைகளை எழுதுவதற்கு மிகவும் கடினமான உழைப்புத்தேவை.

கவிதை எழுதுவதைவிட ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். ‘ இப்படிச்சொன்னவரை நான் மறந்து

விட்டேன்.ஆனால் அவரின் கூற்று முற்றும் பொருந்தும்.

கவிதை என்று ஒரு தலைப்பின் கீழ் எழுதுவது ஓர் இயல்பு.

ஒரு பொருள் பற்றிய பல்வேறு பார்வையோடு எழுதுவது ஒரு முறை.

ஒரு பொருள் பற்றிய புதிய கற்பனைகளைக்காட்டுவது வழக்கம்.

ஒரு பொருள்பற்றிப் பாடும்போது வெவ்வேறு பொருள்பற்றியும் பாடுவது தவிர்க்கமுடியாதது.

ஆனால்…கவிதை எழுதும் அவ்ஸ்தையை;வலியை;வேதனையை;தவிப்பை;தத்தளிப்பை வெளிப்படுத்துவதே ஒரு கவிதையாவது புதுமை.

இதைத்தான் கவிஞர்களும் பிரசவ வேதனை என்கிறார்களோ!

அண்மையில் நானும் ஒரு கவிதை படித்தேன்.

அதன் தலைப்பு ‘தாக நிலா ‘.

நிலாவை வருணிக்கும் கவிதையல்ல அது.

நிலாவை எப்படி எழுதுவது என்பதுபற்றிய கவலை.

இங்கு எது கவிதையாகிறது ?

எழுதுமுறையே கவிதையாகிறது ‘.உணர்வின் முடிவுதான் கவிதை ‘ என்ற ஆங்கிலக்கூற்றை இது மெய்ப்பிக்கிறது.

அதாவது பிரசவமே கவிதையாகிறது.

ஒரு நல்ல பிரசவம் கவிதை என்பதில் என்ன ஐயம் ?

—-

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

pichinikkaduelango@yahoo.com

Series Navigation

author

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts