மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

அ கா பெருமாள்


வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.

அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் ‘ ‘ பெண்ணே நம்பி ஆற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் ‘ ‘ என்றார்

மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 ஆனதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் ‘ ‘பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது ? நான் ஊருக்குப் போகிறேன் ‘ ‘ என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.

நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைகளில் வடவீதியில் உள்ள கடுக்கரைப் பிடாகையைச் சார்ந்த ஒரு கிராமத்துக் காரணவருக்கும் அவரது மருமகனுக்கும் மனஸ்தாபம் வந்தது. மருமகன் மாமாவிடம் கோபம் கொண்டு ஊரைவிட்டுக் கிளம்பி கடுக்கரை மலையைத் தாண்டி வள்ளியூர் வழி கால்போன போக்கில் நடந்து தென்கரையை அடைந்தான். அங்கிரந்த சாஸ்தாவின் கோவிலில் தங்கினான். கோவிலைச் சுற்றி ஓடிய நம்பியாறும் கோவிலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்தது. அதனால் அங்கே தங்கிவிட்டான்.

தென்கரை சாஸ்தா கோவிலில் தவமிருந்த அம்மையடி மறத்தி, நாஞ்சில் நாட்டைவிட்டு வந்த வேளாரிடம் பொதுவான விவரங்கள் பற்றிப் பேசினாள். அவர் அங்கே வந்த காரணத்தையும் அறிந்துகொண்டாள். அவருக்கு வேளாவேளைக்கு சுவையான உணவும் கொடுத்தாள். இருவருக்கும் இடையே இனம் புரியாத அன்பு வளர்ந்தது. அவர்கள் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். இந்த நேரத்தில் அம்மையடி மறத்தியின் முதல் கணவன் வந்தான். தன் மனைவி இன்னொருத்தனுடன் சுகமாய் வாழ்வதைக் கண்டான். இவர்கள் இப்படியே வாழட்டும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு தன் சொந்த ஊருக்குப் போய்விட்டான்.

அம்மையடி மறத்தியும் நாஞ்சில் நாட்டு வேளாளரும் தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ஆண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.

அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் ‘ ‘நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் ‘ ‘ என வாக்களித்தனர்.

அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். ஆனால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.

மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் ‘ ‘ இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் ‘ ‘ என்றான்.

அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ஆரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் ‘ ‘மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் ‘ ‘ என்றார்.

வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ஆரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் ‘ ‘நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? ‘ ‘ எனக் கேட்டான்.

உடனே மாடு மேய்க்கும் சிறுவன் ‘ ‘ நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் ‘ ‘ என்றான்.

சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் ‘ ‘ மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! ‘ ‘ என்றும் கூறினான். பின்னர் ‘ ‘ நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் ‘ ‘ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். ‘ ‘ தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் ‘ ‘ என்றார்.

ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். ஆனால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.

எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.

திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.

தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். ‘ ‘இந்தப் பெரிய ஊர் சிற்றூர் ஆகட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது ‘ ‘ என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.

ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.

இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என ஆசி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.

—-

Series Navigation

author

முனைவர் அ.கா.பெருமாள்

முனைவர் அ.கா.பெருமாள்

Similar Posts