பிறவழிப் பாதைகள்

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

கோபால் ராஜாராம்


வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். கொஞ்சம் ஆங்கிலம் நன்றாய் எழுதத் தெரிந்தால் போதும் போலிருக்கிறது என்ற பாணியில். நோபல் பரிசு சாகித்ய அகாதமி தரத்திற்கு வந்து விட்டது என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மை தான் . நோபல் பரிசு என்பது அரசியல் ரீதியாகவும், அப்போதைய உலக நிலவரத்தில் யார் கை ஓங்கியிருக்கிறது என்பதைக் காட்டவும் தான். ஆனால் வி எஸ் நைபாலின் பிரயாணமும் விமர்சனமும் கலந்த புத்தகங்கள் நிச்சயம் நம் பார்வைக்கும் சிந்தனைக்கும் உரியவை தாம். அவருடைய ‘திருவாளர் பிஸ்வாஸிற்கு ஒரு வீடு ‘ என்ற நாவல் மிகச் சிறப்பான ஒரு நாவல். (இந்த நாவலுடன் தொனியிலும் உள்ளடக்கத்திலும் இணை சொல்லக் கூடிய ஒரு சிறப்பான கதை ஜெயந்தனுடையது. கதையின் பெயர் ‘ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது ‘)

டால்ஸ்டாயிற்கும், தாஸ்தாயவஸ்கிக்கும், மாக்சிம் கார்க்கிக்கும், பிரேம் சந்திற்கும், ஜெயகாந்தனுக்கும் , சிவராம காரந்திற்கும், மகாஸ்வேதா தேவிக்கும் கிடைக்காத நோபல் பரிசு வேறு யாருக்குக் கிடைத்தால் என்ன ? கிடைக்காமல் போனால் என்ன ? – என்று ஒரு கண்ணோட்டம் உண்டு. காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. கிஸிங்கர் என்று ஓர் ஆசாமி. இவர் போர்க்குற்றவாளி என்று கைது செய்யப் படாததற்கு ஒரே காரணம் இந்த ஆள் அமெரிக்கர் என்பது தான். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அங்கதம் இறந்து போய் விட்டது (Satire is dead) என்று இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்த போது ‘ நியூயார்க்கர் ‘ ஏட்டில் வந்ததென நினைவு. ஆனால் வி எஸ் நைபாலுக்குக் கிடைத்த நோபல் பரிசைப் பற்றி இப்படிச் சொல்ல முடியாது.

நோபல் பரிசு பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதுவர்களுக்கு அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டவர்களுக்குத் தான் கிடைக்கிறது. அல்லது தம் நாட்டினை விட்டு அரசியல் காரணங்களுக்காக வெளியேறியவர்களுக்கு( ஜோசப் பிராட்ஸ்கி, குவாங் ஜெமின்) அல்லது தம் குழுவின் பிரதிநிதிகள் போன்றோருக்கு (டோனி மாரிஸன் – கறுப்புப் பெண்) கிடைக்கிறது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வின்ஸ்டன் சர்ச்சில் என்ன இலக்கியம் படைத்தார்கள் என்று தெரியவில்லை.

இருப்பினும் அவ்வப்போது குந்தர் கிராஸ், ஆக்டேவியா பாஸ், நாடின் கோர்டிமர் , நகூப் மெஹ்ஃபூஸ், வோலே சோயிங்கா போன்ற தகுதி பெற்ற சிலருக்கும் கிடைத்திருக்கிறது

*******

திராவிட இயக்கங்கள் இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்பது முட்டாள் தனம் என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் அப்துல் ரகுமான். இண்டாம் வலையிதழின் இலக்கிய ஏட்டில் இவர் பேட்டி வெளியாகியுள்ளது.

அப்துல் ரகுமான் இலக்கியம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடைய கவிக்கோ இதழில் பல நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பிறமொழிக் கவிதைகளையும் அவர் அந்த இதழில் தந்திருக்கிறார். ஆனாலும் தற்புகழ்ச்சிக்கும் அவ்வபோது பலியாகி விடுகிறார்.

இந்தப் பேட்டியில் முட்டாள் தனம் என்று திட்டிய அடுத்த வரியிலேயே ஓர் உண்மையைச் சொல்கிறார். ‘திராவிட இயக்கத்தின் நோக்கம் மக்கள் எழுச்சி தான். அதனால் எழுத்தை பிரச்சாரமாகத் தான் பார்த்தார்கள். இது படைப்பாளிகள் இயக்கம் அல்ல. தூய இலக்கிய அளவுகோலை வைத்து இதை அளக்கக் கூடாது ‘ இந்த வார்த்தைகளின் உண்மைப் பொருள் என்ன ? இலக்கிய அளவுகோலை வைத்துப் பார்த்தால் திராவிட இயக்கத்தினர் தேற மாட்டார்கள் என்பது தானே ? இந்தக் கருத்தை அப்துல் ரகுமான் சொன்னால் அவர் கவிக்கோ. இதே கருத்தை மற்றவர்கள் சொன்னால் முட்டாளா ? ‘ ‘அதற்கும் மிஞ்சி .. நான் , வைரமுத்து, தமிழன்பன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகள் தான். இப்படியொரு கருத்தைச் சொல்பவர்கள் மறைமுகமாக எங்கள் முதுகில் குத்துகிற விசயம் தான். இவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை விரும்பாத பிராமணர்களாகவே இருப்பார்கள். ‘

ஒரு கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையென்றால் ‘அவன் சாதி அப்படித்தான் , இவன் சாதிக் குணம் இப்படித்தான் ‘என்று சொல்லிவிட்டால் அது இலக்கிய விமர்சனப் பார்வையாக் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தமிழில் இருப்பது மிகவும் வருந்தத் தக்க விஷயம்.. இதே பேட்டியில் ‘சிற்பி, தமிழன்பன், இன்குலாப், அபி, அறிவுமதி, மு மேத்தா இப்படி பலரை முக்கியமான கவிஞராகச் சொல்லலாம். ‘ என்கிறார் அப்துல் ரகுமான்.. ஆறு பேர்களில் சரிபாதி மூன்று பேர் முஸ்லீம்கள். முஸ்லீம் இன்னொரு முஸ்லீம் மேல் கொண்டுள்ள அபிமானம் என்று , இதே போன்ற வாதத்தை வைத்து, அப்துல் ரகுமானின் பட்டியலை நாம் புரிந்து கொண்டால் அது அப்துல் ரகுமானின் நிலைபாட்டைச் சரியாய்ப் புரிந்து கொண்டதாய் ஆகுமா ?

இது ஒரு பக்கமிருக்க, கருணாநிதிக்கு வேண்டியவர் என்ற தகுதியை விட்டுப் பார்த்தால், அப்துல் ரகுமானின் எழுத்தில் எந்த திராவிட இயக்கப் பண்புகளின் அடையாளம் எங்கே, எப்படிக் கிடைக்கின்றன ? அவர் எழுத்து ஒரு புறம் கலீல் கிப்ரானையும் இன்னொரு புறம், மிகை வார்த்தைகள் புழங்கும் வைரமுத்துவையும் நினைவு படுத்துகின்றன. வேதாந்தம், வேத வரிகள், சூஃபிகள், இறையியல் , ஞானிகள் என்றல்லவா அப்துல் ரகுமானின் கவிதைகள்/கட்டுரைகள் பேசுகின்றன ? இதில் எது திராவிட இயக்கக் கொள்கை அல்லது குணாம்சம் ?

ஒரே ஒரு விதத்தில் அவர் திராவிட இயக்கத்தவர் தான் என்று சொல்ல வேண்டும் . விடாப்பிடியாய் ‘கவிக்கோ ‘ பட்டத்தைச் சுமந்து கொண்டிருப்பதைத் தான் சொல்கிறேன். நாவலர், கலைஞர் , புரட்சித் தலைவர் என்று அர்த்தமில்லாத கிரீடங்களைச் சூட்டிக் கொள்ளும் ஆசையின் வெளிப்பாடு. ஏற்கனவே ‘பெருங்கவிக்கோ ‘ என்று ஒரு ஆசாமி தன்னை அழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரிகிறது. அப்துல் ரகுமான் தன் தனித்துவம் காட்ட ‘சிறு கவிக்கோ ‘ என்று அழைக்கப் பட விரும்புவாரா என்று தெரியவில்லை.

*****

சொல் புதிது ஜ்ஊலை செப்டம்பர் இதழ் பார்க்கக் கிடைத்தது.

வெங்கட் சாமிநாதனின் அட்டைப் படத்தில் . வெ சா பற்றி விரிவான நல்ல கட்டுரை ஒன்றை எம் வேத சகாய குமார் எழுதியுள்ளார். மிகக் காத்திரமான இலக்கியத் தொகுப்பாக இந்த இதழ் உருவாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விமர்சனத்துறையில் பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார். அதனால் நிறையக் கல்லடி பட்டவர். அப்படி அவர் மீது கல் எறிந்தவர்கள் கூடத் தம்மையறியாமலேயே அவரின் கருத்துகளின் அடியொற்றிச் செயலாற்றுவதும், எழுதுவதும் நிகழ்ந்து வருகிறது. நாட்டார் கலையைப் பற்றி சிறப்பான கட்டுரையை இதில் வழங்கியிருக்கிறார். நாட்டார் கலையினைப் பொதுவாக , செவ்வியல் கலைக்கு எதிராக நிறுத்தும் பார்வைக்கு மாறாக இரண்டு கலைகளுக்கும் உள்ள பொதுச் சரடை அவர் இனங்காணுகிறார். பொதுவாக சிறு பத்திரிகைகளில் அறிவியல் ஆய்வுகளைக் கண்டுகொள்வதில்லை. ‘சொல் புதிது ‘ இதழ் அப்படியல்ல. மரபியல் ஆய்விலும், உயிரியலின் தத்துவம் பற்றியும் கவனம் சொள்கிறது.

கவிதைகள் வழக்கமான தமிழ்ச் சிறு பத்திரிகைக் கவிதைகள். ஆன்மீக, மற்றும் சாமியார்கள் பற்றிய வரைவுகள் சற்றுத் தூக்கலாக இருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் உறுத்தல். இது வேறு சில வாசகர்களுக்கு அர்த்தமாகலாம். ஹரப்பா கலாசாரம் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் பலவீனம் என்று தோன்றுகிறது. டேவிட் ஃப்ராலி போன்ற ஆய்வாளர்களைச் சிறப்பானவர்களாய் ஆய்வுலகம் காண்பதில்லை. ‘கண்ணன் பெருந்தூது ‘ என்ற மாதவையாவின் கதை ( மாதவையர் என்பது தான் சரி என்ற குறிப்புடன்) வெளியாகியுள்ளது. இந்தக் கதைதான் முதல் தமிழ்ச் சிறுகதை (அச்சில் வந்த ?) என்று வேத சகாய குமார் தெரிவிக்கிறார். இதற்கு என்ன எதிர்வினைகள் வரும் என்று இனித்தான் பார்க்க வேண்டும்.

ஆனி ப்ரூ என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் கதையும், இரா முருகனின் கதையும், சக்கரியாவின் கதையும், அ முத்துலிங்கத்தின் கதையும், சக்கரியாவின் கதையும் , கோகுலக் கண்ணனின் கதையும் ஒவ்வொன்றும் சிறப்பான தனித்துவம் பெற்றவை.

இதழ் வேண்டுவோருக்கு முகவரி : அருண்மொழி நங்கை , தலைமை தபால் நிலையம், தக்கலை 629175 . மின்னஞ்சல் முகவரி : soll_pudhidhu@hotmail.com

*****

மேற்கண்ட ‘சொல் புதிது ‘ இதழுடன் ஒப்பிடும் போது ‘ காலச் சுவடு-இதழ் 38 சோனியாய்க் காட்சி அளிக்கிறது.

சாகித்ய அகதமிக்குப் பரிந்துரைக்கப் பட்ட பெயர்கள்-மற்றும் செயல்கள் யாருடைய காதில் விழும் என்று தெரியவில்லை. அமெரிக்கப் பயங்கர வாதம் பற்றி கண்ணனும் சேரனும் எழுதியுள்ளார்கள். ‘ உலக வர்த்தக மையம் கம்பீரமான அழகிய கட்டடம் மட்டுமல்ல, அது அமெரிக்காவின் ஆண்குறி. ‘ என்ற (பின் நவீனத்துவப் புரிதலை ? ?) முன் வைக்கிறார் கண்ணன் . அப்படியென்றால் பின் லேடன் ஆஃப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள குகைகள் எதைக் குறிக்கின்றன ? ஆகாய விமானங்கள் பெண்டகன் கட்டடத்தை உடைத்துத் தகர்த்து அதனுள் நுழைந்ததை எப்படிப் புரிந்து கொள்ளலாம் ? இப்படி சமூக நிகழ்வுகளை பாலியல் குறியீடுகளாய் விளக்க முற்படுகிற செயல் , இப்போது செலாவணியில் இல்லாத ஒன்று.

சேரன் போர்க்காலம் என்ற சாக்கில் மனித உரிமைகள் நசுக்கப் படுவது பற்றி எழுதியுள்ளார். கோகுலக் கண்ணனின் கதை ஒன்று உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பாவத்திற்காக எப்படி ஒரு தொகுதி மக்கள் – தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள் என்று ஒரு கட்டுரை உள்ளது. சாதி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஓர் இயக்கம் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் தமிழ் நாட்டில் நடந்த பின்பும் கூட அடிப்படை அரசியல் உரிமைகள் கூட மறுக்கப் பட்டு தலித்கள் நிற்கிறார்கள்.

புதுமைப் பித்தன் பெயரை உபயோகிப்பது தொடர்பாகவும், இளைய பாரதி பிரசுரித்த புதுமைப் பித்தன் கடிதங்கள் புத்தகம் தொடர்பாகவும் ஒரு சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று காலச்சுவடில் வெளியாகிய ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது. ‘புதுமைப் பித்தன் பதிப்பகம் ‘ என்ற பெயரில் வெளியான நூல்களைத் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை என்று தினகரி அவர்கள் விட்டுக் கொடுத்திருப்பது பாராட்ட வேண்டிய செயல்.

காலச் சுவடு வலைப்பக்கத்திலும் காணக் கிடைக்கிறது. www.kalachuvadu.com இதன் முகவரி.

முகவரி : 669 கே பி சாலை, நாகர் கோவில் 629001. மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com

****

இப்படி தனிப் பட்ட முறையில் ஒவ்வொரு இதழுக்கும் எழுதிப் பெறும் பொறுமை இல்லாதவர்கள் புத்தக விற்பனையாளர் மற்றும் எழுத்தாள நண்பர் திலிப் குமாருக்கு எழுதலாம். மின்னஞ்சல் முகவரி: dilipbooks@eth.net

****

நவம்பர் 15, 2001

Series Navigation

author

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்

Similar Posts