விடுபட்டவை

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஸ்ருதி ரமணி


சொல்ல நினைப்பவையெல்லாமும்
சொல்லும்படியாகவா இருக்கிறது?
சொல்ல நினைத்தவையெல்லாம்
சொல்லத்தக்கவைதானா?
சொல்லத்தக்கவையெல்லாம்
சொல்லப்பட்டு விட்டதா?
சொல்லப்பட்டவையெல்லாம் – அதன்
தகுதியை அடைந்தனவா?
தரம் தாழ்ந்தனவா?
சொன்னவைகள்
சொல்லியிருக்க வேண்டாமென்றும்
சொல்லாதவைகள்
சொல்லியிருக்கலாமோ என்றும்
தொக்கித்தான் நிற்கின்றன இன்றும்!
சொல்லி மகிழ்ந்தவன் யார்?
சொல்லாமல் வருந்தியவன் யார்?
சொல்லி அடைந்த லாபமும்
சொல்லாமல் விட்ட நஷ்டமும்
இன்னும்
அப்படியே நிற்கின்றன!
எல்லாவற்றையும்
காலம் புரட்டிப்போடும்
கட்டாயமாய்!
அதனதன் வழியில்
அவையவைகள்!
யாருக்கு யார் குறுக்கே!

———————-

Series Navigation

author

ஸ்ருதி ரமணி

ஸ்ருதி ரமணி

Similar Posts