செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


இப்போது இந்தக் காதலர் தினத்தில்

நீ கேட்க வந்த
ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது
இப்போதும் நன்றாக என் நினைவில்.
சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச்
சொல்லும் எவ்வொரு ஆலோசனையும்
கேட்பவர்க்கு பொருந்துமா என்று.
இப்போது இந்த காதலர் தினத்தில்
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
என்னை இல்லா விட்டாலும்
என் ஆலோசனையையாவது.

o
காத்திருந்த வேளை

இறுக்கமான உடைகளின் சிரமத்துடன்
திரும்பத் திரும்ப கோர்த்துக்கொண்டிருந்தாள்
தன் கால்களை அம்மா
ஒரு அதீத சுவாரசியத்துடன் அவைகளை
பிரித்துப் போட்டு விளையாடிக்கொண்டிருந்த
அவள் பையனை
எதிர்ப்புற பார்வையாளனாய்
பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை
எவ்விதம் போட்டுக் கொண்டிருந்தேன்
என்பதுதான்
எவ்வளவு யோசித்தும்
நினைவுக்கு வரவில்லை.

o
தொடர்ச்சி

இன்று வந்து சேர்ந்த
மனங்கவர்ந்த கவியின்
புதுவெளியீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று படித்து பக்க அடையாளம் வைத்துவிட்டு
வந்த புத்தக வரிகளின் தொடர்ச்சியாய்
என்பதை எழுதும் இந்தக் கணத்தில்
இன்னொரு மனங்கவர்ந்த
புத்தகத்தை பிரித்துக் கொண்டிருக்கிறேன்.

o

Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts