5 கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

தேனம்மை லஷ்மணன்


1. மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பது

பெண் என்பது
அந்தரங்கம் மறைக்கும்
உள்ளாடையாகவும்

ஆண் என்பது
கௌரவத்துக்குரிய
பொன்னாடையாகவும்..

கால்மிதியாகவும்
கொடிக் கம்பமாகவும்
கற்பிதப் பெருமையாய்..

— கவிதை தேனம்மைலெக்ஷ்மணன்

============================================

2. சாயம்..
***************

கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..

பிறப்பு., வளர்ப்பு., வாழ்வு., வளர்ச்சி.,
விருப்பு சார்ந்துதான்
சாயங்கள் நம்மேல்
சவாரி செய்ய அனுமதிக்கிறோம்..

நம் சொந்த நிறமென்னும்
இயற்கைச் சாயம் தவிர
அனைத்தும் அழிந்துவிடும்..

சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
தேய்மானம் பொறுத்தோ.,
யாருக்கும் தெளிவு படுத்தும்
அவசியம் இல்லாமல்..

=====================================

3… சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..

=============================

4… மக்கள்..
***************

எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை
மத குருமார்களிடமிருந்தும்
நிதிச் சீட்டுக்களிலிருந்தும்..

===================================

5.. வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..
பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து..

Series Navigation

author

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்

Similar Posts