தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


கருவேலம் :
**********************

ஈரப்பதம் உறுஞ்சி
உள் துப்பும் இயந்திரங்கள்..
சமையற்கட்டிலும்..
சயனத்திட்டிலும்..
வரவேற்பறையிலும்..
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

பாலிவினைல் புட்டிகளில்
நன்னீரும்..
டப்பர்வேரில் நல்லுணவும்..
துகளானவை தொண்டைக் குழாய்க்குள்..

ஓசோன் டார்பாலின் கிழிய
கந்தகமாய் தீயும் பூமி..
முடங்கிப் போன முழங்காலாய்..

எஞ்சியவை
இடையறாத இருமலோடு
எண்டோஸ்கோப்பியிலும்
கண்டு பிடிக்க இயலாமல்..

எடுத்து ஊன்றிக் கொண்ட
கருவேலங்களாய்
வேரோடு வெட்டியும் கிளைவிட்டு..

——

பெட்டகம்..
*****************

இரும்புக்கம்பு அடைத்து
இரட்டைப் பூட்டிட்ட
தேக்கு மரக்கதவின் பின்னே

கைமுஷ்டியாய் இறுகின கைப்பிடியோடு
பித்தளைத் தகடு மறைத்த பூட்டோடு
பலவர்ணத்தில் அசைக்க முடியாமல்..

ஒரு காலத்தில் கன்னமிட்ட நீ
உள்ளே வெள்ளைத்துணி சுற்றிய
வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை…

உன்னுரிமையாய் எண்ணி..
களவாட முயன்று…
கை நோக தோற்று…

வங்கி லாக்கருக்குப்பின்
வேண்டுவாரற்று
வெளியில் கிடக்கிறது..

வரும்போதெல்லாம்
முகம் திருப்பிச் செல்லும்
உன்னைக் கண்டு வருத்தமுற்று..

====
எழுத்துவாகனம்..:-
*******************************

ஏறும்வரையில்
தீர்மானிக்கப்படுவதில்லை..
எங்கு எதில் செல்வதென..

ஏறியபின்
சிறகு முளைத்த அன்னமாகவோ..
பிடறி சிலிர்க்கும் சிங்கமாகவோ.,
கொம்பு கிளைத்த எருதாகவோ..

எடுத்துச் செல்கிறது
குவளைகள் கொட்டிய குளத்துக்கோ.,
அரவுகள் நெளியும் காட்டுக்கோ.,
மனிதர்கள் முட்டும் ஜல்லிக்கட்டுக்கோ…

நகர்ந்தோ., சிலிர்த்தோ., பொருதியோ
பரிமாறியதெல்லாம்
பார்வைக்குப் பார்வை
உருமாறுகிறது..

காவியணிந்த நபராகவோ.,
காவியடித்த சுவராகவோ.,
காவி படிந்த பல்லாகவோ..

எந்தத் தேடுதலும் அற்று
பயணித்து முடிகையிலும்
சிதறிக் கிடக்கிறது..

வெள்ளை இறகோடு நீர்ச்சொட்டுக்களும்.,
மஞ்சள் பிடறி முடியோடு பாம்புச் செதில்களும்..
கருன்கொம்பின் வர்ணத்தோடு சரிந்த குடல்களும்..

எச்சப்புள்ளிகள்..
**********************

பறவை எச்சப் புள்ளிகளோடு
நிழலைக் கோலமாக
வரைந்து கொண்டிருந்தது மரம்..

மொட்டை மரங்களிலும்
நீர்ப்பூக்கள்..
உதிர்த்துக் கொண்டிருந்தது மழை..

மண் பாளமாய்
வெடித்திருந்தன…
நீரற்ற மரத்தின் காய்ந்த கிளைகள்..

தானியத் தட்டை
கொத்தும் பறவைகளாய்..
சூரியத்த்ட்டில் கதிரைக்
கொத்திக் கொண்டிருந்தன மரங்கள்..

மஞ்சள் உமியோடு
வெய்யிலைத்
தூற்றிக் கொண்டிருந்தது சூரியன்..

—–
தினசரி..:-
**************

சுமைதாங்கிக் கல்லாகவோ.,
சிலுவைக் கட்டையாகவோ
அலுவலகச் சுமைகள்
அசைய முடியாமல்
அடித்து வைக்க.,

களைத்துக் கைகோர்த்துப்
பின்னே சாய்கிறாய்…
குழந்தையாகும் வேட்கையில்
என் வரவை எதிர்பார்த்து..

உன் பதவி பாவனைகளோடு
கம்பீரத்தையும்., கடுமையையும்
கழற்றி எறிகிறாய்..
உயரப் பறக்கும் மின்விசிறி மீதோ.,
காலடியில் திறக்கும் குப்பைத்தொட்டியிலோ..

மாடிப்படியடியில்
செருப்புப் போடும் ஸ்டாண்டிலோ.,
துவைக்கும் யந்திரத்தின் அழுக்குத் துணிகளோடோ.,
நானும் உரித்துப் போடுகிறேன்.,
என் கோபத்தையும் சலிப்பையும்…

ஊறவைத்த தானியங்களைப் போல
முளைத்துக் கிடக்கிறோம்..
மூழ்கிய அன்பில்….
மறுபடி முளைக்கும்
மற்றொரு நாளை எதிர்நோக்க…

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts