தன் விரல்களை துண்டித்த சூபி

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மரம் செடி கொடி தாவரங்கள் ஸப்புகளில்
உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன
தக்பீர் கட்டுகையில் பறவைகள்
உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன.
ஆடுமாடு ஒட்டகங்கள்
உன்னைப்போல் ருகூவு செய்கின்றன
உட்கார்ந்திருக்கும் மலைகள்
அத்தஹியாத் செய்யும்
உன்னைப் போல் இருப்பு கொள்கின்றன
தாயின் கருவறை குழந்தை
ஸுஜூது செய்யும்
உன்னைப் போல் வடிவம் கொள்கிறது
எல்லாமாகவும் நீ இருக்கிறாய்
எதுவாக நீ இல்லை

2)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து
அறிந்து கொண்டாய்
எங்கோ எதுவோ எரிகிறது
கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு
எரிகிற ஏதோ ஒன்றை தரிசனம் கொண்டாய்
விரலால் தொட்டு பார்த்தபின்
புரிந்து கொண்டாய்
தீ சுடுமென்றும்
பூ தீயல்ல என்றும்

3)தன்னைக் கிள்ளிப் பார்த்தபோது வலித்தது
பிறரைக் கிள்ளியபோது
அடிக்க வந்தார்கள்
மிருகங்களைக் கிள்ளிப் பார்க்க
கொம்பாலும்
கொம்பற்றும் முட்டித் தள்ளின.
செடிகளைக் கிள்ளிப் பார்க்கையில்
தொட்டாவாடி இலை தன் இதழ்மூடி
வருத்தம் தெரிவித்தது
உயிரைத் தேடி புறப்பட்ட சூபி
தன் விரல்களை
தானே துண்டித்துக் கொண்டான்.

Series Navigation

author

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts