ரிஷி கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ரிஷி


ரிஷி கவிதைகள்

1) ஒற்றுமை

சற்றுமுன்வரை
வெட்டுப்பழி குத்துப்பழி
என்றிருந்தவர்கள்
சடாரெனக் கரங்கோர்த்துப்
பாய்ந்தார்கள்
தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தவனை
பொது எதிரியாக்கி.

*
2) கணக்கு

அவர் ஒன்றைச் செய்தால்
அவர் மட்டுமே
அந்த ஒன்றை மட்டுமே
செய்கிறார்.

இவர் இரண்டைச் செய்தால்
இவர் மட்டுமே
அந்த இரண்டை மட்டுமே
செய்கிறார்.

ஆனால் இன்னொரு இவர் அல்லது
இன்னொரு அவர்
செய்யும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே
பலவாக பலராகப் பல்கிப் பெருகியவாறு….

அறிந்தே செய்யும் கணக்குப்பிழையில்
அழிப்பானுக்கு ஏது வேலை?

*
3)ஆதிக்கவாதியும் அரண்மனைகளும்

நாலாவது தலைமுறையாக நடுத்தரவர்க்கத்தில் பிறப்பு ;
.நேற்றும் நாளையும் அரசுக்கல்லூரியில் தான் படிப்பு.
ஆனாலும் அடித்திழுத்துக்கொண்டுபோய்
நடுச்சந்தியில் நிறுத்தி, ஆதிக்கவாதி என்று
ஊர் கேட்க, உலகு கேட்க, சொல்லிசொல்லிசொல்லி
சவுக்கடி தந்தவாறே சென்று சேர்கிறார் சிலர் –
அப்பாவி உயிர்களை பலிகொடுத்து அமைத்த அடித்தளத்தின் மீது
ஆரோகணித்திருக்கும் தம் அரண்மனைகளுக்கு.

*

4) நாம் சக பயணியர் என்றே நம்பியிருந்தேன்

நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்

எனக்கும் உனக்கும் காலணிகள் இருக்கின்றன ;
சுடுவெயிலைச் சமாளிக்க.
ஆங்காங்கே மரநிழல்களில்
இருக்கைகளும் போடப்பட்டிருக்கும்…
நான் ராமேசுவரத்தைக்கூடப் பார்த்தது கிடையாது.
உனக்கோ நியூஜிலாந்து மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து
மாம்பலத்திற்குச் செல்வதுபோல்….

என்றாலும்,

நாம் சக பயணியர் என்றே
இத்தனை காலமும் நம்பியிருந்தேன்.

நம்மோடு வழியேகும் நாலாயிர லட்சம் பேருக்கு
கொதிக்கக்கொதிக்க வெறுங்கால் நடைப்பயணம்
காலமெல்லாம்.

குற்றவுணர்வோடு கண்களில் நீர்மல்க
“கூட்டுக்களவாணிகள் நாம்”, என்று கூறியவாறு
ஏறிட்டுப்பார்த்தால், நொடியில்
உனக்குரிய குற்றச்சுமையையும், தண்டனைச்சுமையையும்
என் தலையில் இறக்கிவிட்டு
ஆணியடித்து அசையாமலிருக்கச் செய்து
ஒரு சொடுக்கில் தரையிறங்கிய தனிவிமானத்தில்
ஏறிச்சென்றுவிடுகிறாய்

பளு தாங்க முடியாமல்
அடுத்த அடி எடுத்துவைக்க ஆதரவுக் கையின்றித்
திகைத்து நின்றுகொண்டிருக்கும் என்னருகே
நீ குறிபார்த்துச் சுழற்றியெறியும் கையெறிகுண்டில்
எத்தனைக்கெத்தனை நான் ரத்தக்கூழாவேனோ
அத்தனைக்கத்தனை எளிதாய்
சமூகசீர்திருத்தவாதியாகிவிடுகிறாய் நீ!

நாம் சக பயணியர் என்றே இத்தனை காலமும்
நம்பிக்கொண்டிருந்தேன்…

*
5) சொல்லின் ஆன்மா

ஒரு மயிலிறகைப்போல்
அத்தனை மிருதுவான சொல் அது!
விரல்களால் வருடினால் வலிக்குமோவென
உயிரால் நீவித்தரப்பட்டு
பார்த்துப்பார்த்து இடம்பொருத்தப்பட்டு
காலத்திற்குமாய் பத்திரப்படுத்திவைக்கப்பட்டது கவிதையில்.

ஒற்றை மயிலிறகு ஓராயிரம்கண் தோகைவிரித்து
சுற்றிச் சுழன்றாடிய ஆட்டத்தில்
சொக்கி நின்றதென்ன ! சொர்க்கமானதென்ன ! !

சொல்லாட பொருளாட
மயிலாட மழையாட
கானாட கவியாட-

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

மழைபொழிய மனம்வழிய
அலையும், காற்றும் வீச
ஆலோலக்கனவு பேச _

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

கண்ணீரில் மனம் வெளுக்கக்
காற்றானதென்ன ! ஊற்றானதென்ன!.
காலமே தானாகிய மாயம்தான் என்ன!!

தத்தரிகிட தித்தோம் !
தளாங்குதக தித்தோம் ! !

_”கழிசடையே, காலொடித்துவிடுவேன் ஆடினால்”,
எனக் கூவியபடி
கம்பும், கத்தியுமாய் வந்து வழிமறித்துக்
கிழித்தெறிந்தார்கள்,
காறித்துப்பினார்கள்,
தப்பித்தவறியும் பேசிவிடலாகாது எனக்
குரல்வளையைத் திருகி நெறித்தார்கள்,
காலால் மிதித்தார்கள்,
கொளுத்திப் போட்டார்கள்….

என்றும் பழகாத பகை கண்டு
திகைத்து நின்ற கவியை
கைதொட்டு அழைத்துக்
கண்சிமிட்டியது
கவிதையின் ஆன்மாவாகிய
சொல்லின் சொல்!.

Series Navigation

author

ரிஷி

ரிஷி

Similar Posts