அம்மா

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


ஒவ்வொரு அசைவிலும்
உன்னைப் போலவே நான்
வண்ணமாய் என்மேல்
அப்பிக் கொண்டாயம்மா
அதனால்தான் இரும்பு நான்
துருவாகவில்லை

கேப்பைக்கூழில் மோர் சேர்த்து
கழியைக் காட்டி ஊட்டினாய் அன்று
அறுபது தாண்டியும்
இரும்பாய்க் கிடக்க
அந்தக் கூழ்தான் காரணமாம்
நாடியைப் பாரத்துவிட்டு
நாட்டு வைத்தியர் சொல்கிறார்

நான் கருவான கதையை
முதன்முதலில் கடவுள்
உன்னிடம்தான் சொன்னார்
நான் உருவான கதையை இன்று
கடவுளிடமே சொல்கிறேன்

அன்னை இருப்போர்க்கு
அன்னையர் தினம்
அன்னை இழந்தோர்க்கு?

பறவையாய்ப் பிறந்திருந்தால்
சிறகு பெற்றதும் மறந்து வாழலாம்
மகன் நான் மறப்பதென்பது
மரணத்தில்தானம்மா

சுமையாக இருந்தேன் அன்று
சுமைதாங்கி யானேன் இன்று
அழுதழுது மாய்கிறேன்
எப்படிச் சுமப்பே னென்றல்ல- நீ
எப்படிச் சுமந்தா யென்று

Series Navigation

author

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts