இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


எப்படி இருந்திருக்கக்கூடும்?…

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு
புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து
முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும்
இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலக
அடுக்குமாடி கட்டிடத்தின்
அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்
மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்
அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்
அவனின் காலைப்பொழுது?


தானாய் விழும் அருவி…

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்
களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.

நெடுநாள் கழித்துப் பார்க்கும்
நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றே
புறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்ட
நடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு
உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடு
மடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி
அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோ
கேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணி
கைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய்
தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.


Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts