தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
இரவு பூராவும் உன்னுடன்
உடலுறவு கொண்டேன்
கடலுக்கு அருகில்
முடங்கிய தீவில்
தீவிரமாகத்
தெவிட்டாத இனிமையில்
இன்பத்துக்கும் தூக்கத்துக்கும்
இடையே !
கனலுக்கும் புனலுக்கும்
இடையே !
ஒருவேளை
கால தாமதமாகிப் போய்
நம்மிருவர்
கனவுகள் இணைந்தனவா ?
மேலே கிளைகள்
காற்றால் தொடுவது போல்
கீழே
சிவப்புக் கிழங்குகள்
வேர்களால்
பிணைத்தது போல்
சேர்ந்தனவா ?
உன் கனவு ஒருவேளை
என் கனவுக்கு
அப்பால் விலகியதா ?
இருட் கடலில் உலாவி
எனைத் தேடி வந்ததுவா ?
முன்னைப் பொழுதில் நீ
இன்னும் பிறக்காத போது
என் கண்கள்
உன்னைக் காணாத போது
உன்னருகில் நான்
உலவி வந்தேன் அறிவாயா ?
நின் விழிகள் தேடின
இப்போது நிகழ்வதை !
உணவு, ஒயின், காதல், கோபம்
எல்லாம்
உன்மீது குவித்தேன் !
ஏனெனில்
என் வாழ்வுக் கொடைகளை
ஏந்திக் கொள்ளும்
பாண்டம் நீ எனக்கு !
இரவு பூராவும் உன்னுடன்
உறவு கொண்டேன்
இறப்பையும், பிறப்பையும் ஏந்தி
இருளில் இந்த உலகம்
உருளும் போது !
திடீரென விழித்து
இரவின் நிழலுக் கிடையில்
என் கரங்கள்
பின்னிக் கொள்ளும்
உன்னிடையை !
இரவுப் பொழுதோ
உறக்கமோ
பிரிக்க முடிய வில்லை
நம்மிருவரை !
உடலுறவு கொண்டேன்
உன்னுடன் !
உறங்கி எழுந்தவுடன்
நின் கனவில் வந்த
வாய் முத்தம்
வையகச் சுவை எனக்கு !
வாழ்வின் ஆழம்
கடற் பாசி
கடல் நீரின் துவர்ப் பானது !
ஏற்றுக் கொண்டேன்
சூழ்கடலி லிருந்து
எழுவது போல் காலைப்
பொழுதில்
எனைத் தேடி வந்த
உனது ஈர வாய்
முத்தத்தை !
+++++++++++++++
பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).
முன்னுரை :
பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.
இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.
1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.
பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.
பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.
1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 24, 2008)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -6
- முடிவை நோக்கி !
- மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4)
- கவிஞனின் மனைவி
- மொழியறியா மொழிபெயர்ப்பாளர்களும், விழிபிதுங்கும் தமிழர்களும்…………
- முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையின் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!
- நினைவுகளின் தடத்தில் (22)
- பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்
- நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’
- அர்த்தம்
- இரண்டு கவிதைகள்
- மணிவிழா
- வி.பி. சிங் மறைந்தார்
- தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் ஆய்விதழ்
- சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு
- “பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு
- இரண்டு கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினாறு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 மாக்சிம் கார்க்கி.
- மினராவில் நட்சத்திரங்கள்
- அண்ணாவின் பெருமை
- வேத வனம் விருட்சம் 12 கவிதை
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- கடைசியாக
- நிலை
- தாகூரின் கீதங்கள் – 57 தொப்புள் கொடி அறுப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>
- கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி