பாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் ! >>

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



முகத்தை நோக்காத வேளை
நானுனது பாதங்களைப்
காணுவேன் !
உந்தன் பாதங்களைக்
காதலிக்கிறேன் !
காரணம்
இந்த மண் மீதும்
காற்றின் மூலமும்
கடலின் மேலும்
நடந்து வந்தவை அவை
என்னைக்
கண்டுபிடிக்கும் வரை !

வெண்ணிலவின் வண்ணத்தில்
ஒருநாள் களிமண்ணாய்
கனலாகவோ வினை யாகவோ
உனது விழிகள்
இல்லாது போனால்,
தென்றல் நடைபோல்
உன் தோற்றம் சுறுசுறுப்பாக
நளின மோடு
நகர வில்லை யானால்,
ஆரஞ்சு வண்ண
எச்சரிக்கை யாய் நீ
வாராது போனால்,

மஞ்சல் நிறமில்லாமல்
இலையுதிர் காலத்து
மரக் கொடிகள் மேல் ஏறினால்
குறை நிலவைப் பிசைந்து
வான மெங்கும் அதன்
மாவைத் தெளித்துத்
தயாரித்த ரொட்டி யாய் நீ
இல்லாது போனால்,

அவ்விதம் நான் உன்னைக்
காதல் புரிய மாட்டேன் !
ஆயினும் நானுன்னை
ஆட்கொள்ளும் போது
மண்ணும் மரமும் காலமும்
சூழ்ந்த நீர்மய மான
உனது
உடலுக் குள்ளே
அடங்கி யுள்ள
எல்லா அமைப்புகளும் எனது
ஏற்புடமை பெறும் !

உயிருடன் நான் வாழ்வதற்கு
ஒவ்வொன்றும்
உன்னிடம்
உயிர் பெற்று எழுகின்றன !
நீக்கமற நின்று
அவற்றை யெல்லாம்
நோக்க முடியுது என்னால் !
ஒவ்வொன்றும்
உன் வாழ்வில்
உயிர்த் தெழுவது
தென்படு கிறது எனது
கண்களுக்கு !

பாப்லோ நெருடா Pablo Neruda (1904-1973).

முன்னுரை :

பெர்னாட் ஷா, இரவீந்தரநாத் தாகூர், பேர்ல் எஸ் பெக், ஏர்னஸ்ட் ஹெமிங்வே, போரிஸ் பாஸ்டர்நாக், அலெக்ஸாண்டர் ஸொலினிட்ஸன் ஆகியோரைப் போல இலக்கியத்துக்கு 1971 ஆண்டில் நோபெல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா. அவர் தென்னமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்தவர். “நானொரு ஸ்பானிஷ் கவிஞன். செர்வான்டிஸை விட அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனிடம் நான் கற்றவை அதிகமானவை,” என்று அமெரிக்க விஜயத்தின் போது ஒரு சமயம் பாப்லோ நெருடா கூறினார். ஸ்பெயின் தேசத்து ஓவிய மேதை பாப்லோ பிக்காஸோவுக்கு இணையான இலக்கிய மேதையாகப் போற்றப்படுபவர் பாப்லோ நெருடா. அவர் இலக்கியத் திறமை பெற்றிருந்ததோடு அரசியல் துறைகளிலும் பங்கெடுத்துத் தீவிரமாக பொதுவுடைமைப் புரட்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயற்பெயர் Neftali Ricardo Reyes Basoalto என்பது.

இலக்கிய மேதைகள் பலர் பாப்லோ நெருடாவை இருபதாம் நூற்றாண்டின் உன்னத கவிஞர்களில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவருடைய நூற்றுக் கணக்கான கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவரது கவிதை நடை காம மோகம் பொழியும் காதல் பாக்களாகவோ, மனக்கசப்புக் கவிதைகளாகவோ, வரலாற்றுக் கவிதைகளாகவோ அல்லது அரசியல் கொந்தளிப்புக் கவிதைகளாகவோ விளங்கின, கொலம்பியன் நாவல் மேதை காபிரியல் கார்ஸியா மார்குவிஸ், “20 ஆம் நூற்றாண்டிலே ஒரு மொழியில் உயர்ந்த கவிஞர்,” என்று போற்றியிருக்கிறார். அரசியல் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்கெடுத்த, கவிஞர் பாப்லோ நெருடாக்கு 1971 இல் நோபெல் பரிசு அளிக்கப் பட்டாலும் அது முரண்பட்டது என்று சிலர் கருதுகிறார்.

1945 ஜூலை 15 ஆம் தேதி பிரேஸில் ஸாவ் பௌலோ பகாம்பு திடலில் (Pacaembu Stadium, Sao Paulo, Brazil) 100,000 மக்களுக்கு முன்னால் பொதுவுடமைப் புரட்சிவாதி லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டஸ் சார்பாக கவிஞர் பாப்லோ நெருடா தனது புரட்சிப் பாக்களை வாசித்தார். நோபெல் பரிசு பெற்ற பின் பாப்லோ நெருடா சில்லி பெருவுக்குத் திரும்பிய சமயத்தில் அதன் ஜனாதிபதி ஸல்வடார் அல்லென்டே தேசியத் திடலில் 70,000 பேருக்கு முன்னால் அவரைப் பேசும்படிக் கேட்டுக் கொண்டார்.

பாப்லோ நெருடா தனது வாலிப வயதில் பல அரசாங்க வெளிநாட்டு & உள்நாட்டுப் பதவிகளில் பணியற்றினார். 23 வயதாகும் போது சில்லி அரசாங்கம் அவரைப் பர்மாவின் அரசப் பிரதிநிதியாக நியமித்தது. பிறகு சில்லி பொதுவுடைமைக் கட்சி ஆட்சியில் பாப்லோ நெருடா செனட்டராக வேலை செய்தார். பிறகு கன்ஸர்வேட்டிவ் கட்சி வந்தவுடன் நெருடாவைக் கைது செய்யும்படி ஆணை பிறந்தது. நெருடாவைக் கவர்ந்த பொதுவுடமைத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சித் தளபதி லெனின், அடுத்து வந்த ஸ்டாலின். 1953 இல் ரஷ்யா பாப்லோ நெருடாவுக்கு ஸ்டாலின் பரிசு அளித்தது. சில்லிக்கு ஸல்வடார் அல்லன்டே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸின் அம்பாஸிடராக பாப்லோ நெருடாவை நியமித்தார்.

பாப்லோ நெருடா மூன்று முறை திருமணம் புரிந்து முறிந்துபோய் 1966 இல் சில்லியன் பாடகி மாடில்தே உரூத்தியாவைக் காதலித்து மணந்தார். அவர் எழுதிய “100 காதல் பதினான்கு வரிகள்” (100 Love Sonnets) நூலை மாடில்தே உரூத்தியாவின் மீது கொண்ட காதல் உணர்ச்சியால் படைத்ததாகத் தெரிகிறது. நெருடாவின் முதல் கவிதை நூல் 1933 இல் வெளியானது.

1973 ஆண்டில் பாப்லோ நெருடா இரத்த முறிவு நோயில் (Leukemia) துன்புற்றுக் காலமானார். அவரது இலக்கியப் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. அவரது படைப்புத் தொகுப்புகளான கவிதைகள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கையில் 50 நூல்களுக்கும் மேற்பட்டவை. 20 ஆம் நூற்றாண்டின் உயர்ந்த கவிஞர்கள் வரிசையில் ஓரிடம் பெற்று விட்டவர் பெரு நாட்டின் கவிஞர் பாப்லோ நெருடா.

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts