கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி



என் …!

பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.

சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.

சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.

மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.

என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.

என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.


இயல்பு…!

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.


இருப்பு…!

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?


பிரிவின் சாசனம்…!

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

இன்முகம்…!

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.



கண்டதும் காணாததும்…!

சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.

எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.


மனக்குழந்தை…!

இடுப்பை விட்டு
இறங்க மறுத்து
அடம்பிடிக்கும்
குழந்தையாய்

எப்போதும்
எதையாவது
எழுதச் சொல்லி
நச்சரித்துக்கொண்டிருக்கிறது
என்
மனக்குழந்தை.



சொல்லுதல்…..!

சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.

சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.

சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.

சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.

இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.


ஹைக்கூ

அறுநூறு மைல் வேகத்திலும்
ஆழ்ந்த உறக்கம்.
விமானப் பயணம்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

author

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Similar Posts