காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் !

ஆண்டாள் (திருப்பாவை)


காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !

எளியவர் பேணிடும் கோமகன்
என் கனவிலே வந்து
எனை மணந்தார் சகோதரி !
முப்பத்து முக்கோடித் தேவரும் ஆடிப்
பாராட்டுவார்
வருகை தந்து விழாவுக்கு !
கருமேனியான்
கனவிலே வந்தான்
எனது மணமக னாக !
தோரணப் பந்தல்
தோன்றிய தென் கனவிலே !
கைத்தலம் பற்றினோம் சகோதரி !
கனவில் மணந்து
பிரபு, எளியவர் தோழன்,
மீராவைச் சயன அறைக்கு
அணைத்துச் செல்வான் !
முற்பிறப்பின் புனிதச் செயல்
நற்பலன் அளிக்கிறது
பிற்பொழுதில் !

ஆயிரம் நன்றி ஜோதிடரே !
கருநிறத் தான் வருகை தனை
அறிவித் தமைக்கு !
மோகத்தில் கண் மூடும்
ஆத்மா சயன அறை
நோக்கி ஏகும் !
ஐம்புலன்கள் தோழிகளாய்
ஒன்று கூடி
ஒப்பிலா இன்பம் அளிக்க
ஓடிச் செல்லும் !
ஒயில் தோற்றம் கண்டதும்
வேதனை தீரும் !
காதல் மோகம் கனிந்து
தாகம் எழும் !
இன்பக் கடலில் மூழ்கும்
என்னுடல் !


(திருத்தம் செய்யப்பட்டது)

காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

யோகியே ! உன் அந்தரங்க
இரகசியத்தை
அறிய முடியாதவள் நான் !
அங்கங்களில் திருநீறு பூசி,
உத்திராட்ச மாலை கழுத்தில் சூடி,
புனித வேடத்தில்
குகையில் அமர்ந்து தவம் செய்தேன் !
கருமேனியான் மீது
காதல் மோகம் ! அந்தோ இல்லை !
மடியாத அவன்
மன அந்தரங் கத்தைத் தொட
முடியாதவள் நான் !
மீராவுக்கு
எதிர்ப்படுவ தெல்லாம்
விதியின் கை
எழுதி வைத்தவை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 12, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts