கருணாகரன்
போக மறுத்த வெளிச்சம்
பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது
எங்கும் குழந்தைக் குதூகலத்தின்
மணிகள் மின்ன
அது கொண்டு வந்த பொம்மைகள்
பூமியெங்கும் சித்திரங்களாயின
பெய்யும் நிழலோடு
வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய்
இலைகளினடியிலும் மூலைகள் மறைவிடங்களிலும்
உன் அக்குளிலும்
இறுக மூடப்படாதிருந்த பாத்திரங்களிலும்
எங்கும் நிரம்பியிருந்த தது அலைகளோடும்
நிறங்களோடும்
பாத்திரங்களைத்திறந்த போது
முகத்தில் படர்ந்தது பகலின் வாசனை
உன் அக்குளை முகர்ந்தபோது
ஒளியின் வாசனை அழைத்துச் சென்றது
சூரியனிடமும் அது தன்னுள் நிரப்பிவைத்திருந்த
பாற்கடலிடமும்
போக மறுத்து விளையாடிக் கொண்டிருந்த
வெளிச்சத்தின் மென்குரலைக் கேட்டவேளை
என்னால் நம்ப முடியவில்லை
அதன் ஒளிக்கூருக்கும்
வெம்மைக்கும் இடையில்
இந்த மலர் எவ்விதம் மென்குரலானதென்று
இரவுக்கு அப்பால் விலகிச் செல்லும்
வெளிச்சத்தின் பயணப்பாதையில்
தூவிச் சென்ற துளிகளில்
மிஞ்சிய பகல்
பாடிக் கொண்டிருந்தது குழந்தையின் வேடிக்கை பொங்க
இரவை மெல்ல அவிழ்த்துக் கொண்டிருந்தது
ரகசியமாய் வெளிச்சக்குழந்தை
இன்னும் அதே வேடிக்கையாய்
உறக்கத்தில் வந்த மழை
உறக்கத்தில் வந்த மழை
தங்கியது இலைகளின் மீதும்
நிலத்தினடியிலும் மௌனமாக
தன் இரைச்சலையடக்கிக் கொண்டு
மெல்ல இறங்கியது சிறகுகளோடு
பூமியொரு பாத்திரம்
சிறகுள்ள மழையை
கருணையோடு ஏற்று
தன் மடியில் வைத்துப் பகிர்ந்தளித்தது
தாவரங்களுக்கும் கானுயிர்க்கும்
பிறவுக்கும்
குருதியொழுகும் மரங்கள்
பறக்கத்தொடங்கிய அதிகாலையில்
ஒரு மெல்லிய இருள் கசிந்து கொண்டிருந்தது
வானத்தின் அடிவயிற்றில்
அது நிலம் விட்ட மூச்சு
கொப்பளிக்கும் தனிமைக்குரல்களில்
ஊறிச் சுடரும் பானத்தை
நாங்கள் பருகினோம் மழையை வருடிக்கொண்டு
கைகளிலிருந்து கழன்ற விரல்கள்
மலர்கின்றன மழைத்துளிகளில்
ஒவ்வொரு மழைத்துளியும் ஒவ்வொரு மலர்
வானம் மலர்கள் மிதக்கும்
வாசனை மண்டபமாயிற்று
பனங்கூடலின் மீது தன்னிசையை மீட்டிய மழை
கடலின் வாசனையை
பரப்பியது பனைகளிடம்
பனைகள் ஆடிக்களிக்க அம் மலர்த்துளிகளில்.
சொற்களின் புதைகுழி
நொதித்துத் ததும்பிக் கொண்டிருந்த
நிலத்தில்
வடிந்து கொண்டிருந்த ஊனத்தைப்
பின்தொடர்ந்த குழந்தையொன்று
கண்டது சொற்களின் புதைகுழியை
இரத்தக்கறையும்
துருவும் படிந்திருந்த சொற்களில்
ஒட்டிக்கிடந்த காலத்தின் துகள்களில்
மின்னின கண்ணீர்த்துளிகள்
மெல்ல அந்தக் கண்ணீர்த்துளிகளை
தொட்ட குழந்தை அதிர்ந்தது
உடைந்தொழுகிய அவற்றின் குரலைக் கேட்டு.
நாறும் அந்தச் சொற்களின் துருவை விலக்கிய குழந்தையின் விரல்கள் காயம் பட்டன
காலத்தின் துருவேறிய அந்தச் சொற்களில் இன்னும்
வன்மம் நிறைந்திருந்தது உக்காமலே
எனினும் மெல்ல
அந்தச் சொல்லை எடுத்து அதன் அடையாளத்தைக்
கண்டபோது
அதிகாரம் என்று அது துப்பாக்கி வடிவிலும்
கத்தியின் உருவிலும்
வதையின் ஈனக்குரலோடும்
சிறைக்கூட விலங்குகளின் கனத்தோடும்
இருந்தது.
இன்னொரு சொல்லை எடுத்த குழந்தையின் உடல் நடுங்கியது
அதனுள்ளிருந்த மின்னலைகள் தாக்கி
போர் என்ற அந்தச் சொல்லில் ஏராளம் ஏராளம் உயிர்களின்
முனகலொலி அதிர்ந்து கொண்டேயிருந்தது.
பிறகவை ஒவ்வொரு கண்ணாக
பெருகிக் கொண்டிருந்தன
குழந்தை அந்தச் சொல்லை
உதறியெறிந்தது
ஆனால் அந்தச் சொல் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டது
அப்படியே அது
அதைச்சுற்றி விரிந்து தன்னுள் இழுத்தது குழந்தையை
குருதியொழுக தவழ்ந்து வந்த குழந்தை
இப்போது தன்கையில் அகப்பட்ட சொற்களை எல்லாம்
விலக்கி
வெளியே வந்தது
என்றபோதும் புதைகுழியிலிருந்த சொற்களெல்லாம்
குழந்தையைப்பின் தொடர்ந்தன
வலையில் வரியும் படையின் அணிவகுப்பாய்
இன்னும் குழந்தையைத் தோற்கடிக்கும்
அத்தனை சொற்களும்
ஒரு கண்ணியில் பொருந்திக்கிடந்தன
வெடிகுண்டுகளின் ரகசியங்களுடன்
குழந்தையைப்பின் தொடர்ந்த
அந்தப் புதைகுழியின் நிழலில்
மறைந்திருந்தன
இன்னும் சிறை விலங்கு
புலனாய்வு மற்றும் அரசியல்
படை மறுமலர்ச்சி
சுதந்திரம் ஜனநாயம் விடுதலை தேசியம்
அன்பு கருணை பகை கோபம் பரஸ்பரம் என்று ஏராளம்
எதிரர்த்தச் சொற்கள்.
திறந்த புதைகுழியை யாராவது மூடுங்கள்
என்ற குழந்தையின் கேவல் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
எல்லோருடைய புலன்களையும் ஊடுருவிச் செல்லும்
நுண்துளைப் பெருக்கியினூடாக.
கண்ணழிந்த நிலத்தில்
கண்ணழிந்த நிலத்தில்
முளைகளின் ஒலியெழுந்தபோது
தாழ்ந்த மரக்கிளைகளிலிருந்து விழுந்தது
உறங்காச் சூரியன்
கூடுடைந்து
எழுந்த முளைகளின் பேரலை
பரந்தது வௌ;வேறு
திணைகளில்
உருக்குலையும் காலையில்
துருவேறிய மலர்களை
எடு;த்துச் சென்றார் கடவுள்
பதற்றத்துடன் விரைந்து
சந்தையிலிருந்து திரும்பிய
பெண்ணிடம்
தன்னை அறிமுகப்படுத்திய கடவுள்
கேட்டார் இரண்டு காசுகளை கடனாக
பசி தணிந்த பிறகு காத்திருந்த
கடவுளை ஏற்றிச் செல்லவில்லை
எந்தப் பேருந்தும்.
யாரும் பேசாமற் சென்றபோது
தனித்த கடவுள்
வாழ்ந்து விட்டுப்போங்கள் என்றார்
துருவேறிய மலர்கள்
கல்லாய் இறுகி மலைப்பாதமாகின
அதுவே கடவுளின் பாதம்
என்றாள் கடன் கொடுத்த பெண்.
கண்ணழிந்த நிலத்தில்
இப்போதிருந்தன
அந்தப் பெண்ணின் ஒரு சோடிக்கண்கள்
நெருப்புமிழ்ந்தபடி.
அதனுள்ளிருந்தது ஒரு பாற்குடம்
அவளிதயத்தின் வடிவில்.
poompoom2007@gmail.com
கருணாகரன்
- கவிதைகள்
- பெண் விடுதலைச் சிந்தனையில் தமிழ் இதழ்கள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- Last kilo Byte – 10
- சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை
- பாரதியாரது தத்துவ மரபு
- அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..
- திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)
- தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”
- காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !
- தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !
- ஊழிக் கூத்து
- சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)
- எழுதுகோல் தெய்வமா?
- தில்லைச் சிற்றம்பல மேடையில் ஏறியது தமிழ்! …மார்ச் 2 அன்று!
- அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்
- காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- மக்கள் சக்தி இயக்கம் – மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4
- பக்தி நிலை வரும்போது__-
- என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்
- ரோபோக்களின் ஆசீர்வாதம்
- அன்புள்ள அப்பாவுக்கு !
- அடகுக் கடை
- கனவு மெய்ப்பட வேண்டும்!
- அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
- கைவளைக்கும் இல்லை கனிவு!
- முறிப்புக் கிராமம்
- கவிதைகள்
- கூவத்தமிழன் கூவுகிறேன்!
- நிலவுக்கும்…….