கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

ந. அனுராதா


கனவில் நீந்தும் கள்வன்
கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்

என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.

நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.

ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்

ஒருவரோடு ஒருவர் பேசாமல்

என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது

உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய‌

என் பனி மெல்ல உருகி முத்தாக‌
ஊர்வலத்துக்காய்

ஏந்தும் தோளுக்காய் பசியுடன்…

இமை மீறி நீந்தும் நீருடன்…



விரையும் குதிரை

இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன‌
நினைவு எறும்புகள்

ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.

நடக்கும் போதே தூங்கிப்போன
குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட உன் ஞாபக எச்சங்கள்

உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்

கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்
உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்

விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்


anuradan@gmail.com

Series Navigation

author

ந. அனுராதா

ந. அனுராதா

Similar Posts