கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ந. அனுராதா




என் காதல் காடு

இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்

தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு ம‌ட்டும்
காத்துக்கொண்டு இருக்கிற‌து மிச்ச‌மான‌ வ‌லியோடு

கான‌க‌த்தின் ந‌டுவில் ஓர் ஒற்றைக்குர‌ல்
தின‌ந்தோறும் பாடுகிற‌து
கேட்ப‌வ‌ர் இல்லாம‌ல்

க‌ட்டிய‌ணைத்து முத்த‌ம‌ழை பொழிந்து
சூடு த‌ணிவித்த‌ என் உட‌ல்கூடு
த‌ன்னைத்தானே கொளுத்திக்கொள்கிற‌து

த‌ன் ர‌த்த‌ம் சுவைக்கும்
ப‌சித்த‌ நாயாய்



எனக்கான‌ கேள்விகள்

விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.

மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்

வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.

நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.

நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க

உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது

மோன தவம் மரத்தடியில்

எதிர்வரும்
வேட்டுவ அம்பு நோக்கி


anuradan@gmail.com

Series Navigation

author

ந. அனுராதா

ந. அனுராதா

Similar Posts