கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

உஷாதீபன்


“தவறியவர்களுக்கு”

வேலை கிடைக்கும் முன்
வேலை வேலை என்று அலைந்தோம்
கிடைக்குமோ கிடைக்காதோ என்று
ஏங்கினோம்
கிடைக்காமலே போய் விடுமோ என்று
பயந்தோம்
ஓடி ஓடி விண்ணப்பங்கள்
வாங்கினோம்
தேடித் தேடித்
தேர்வுகள் எழுதினோம்
தேறினாலும் நழுவிடுமோ
என்று அஞ்சினோம்
விரட்டி விரட்டி
நேர்முகம் கண்டு
இன்று
கைப்பிடியில் ஒரு
அச்சாணி
கால் பதித்து நிற்கும்
தடம்
எல்லாம் சரி!
காலக் கணக்கை
அறுதியிட்டதுபோல்
கடமைகளையும் உணர்ந்தோமா?
சார்! இந்த ரிப்போர்ட்டை
மானேஜர்
ரெடி பண்ணச் சொன்னாரு
இன்னைக்கே அனுப்பணுமாம்!
அட! வையப்பா!!
அதுக்கென்ன இப்ப அவசரம்?
அவருக்கு வேறே வேலையில்லை?
எங்கிருந்து வந்தது
இந்த மெத்தனம்?


பிறகு பார்ப்போம்…

வந்திருக்கிறார்
போய்ப் பார்ப்போம்
நண்பர் சொன்னார்
நறுக்காக…!
எதற்கு? என்ற
என்னின் கேள்விக்கு -ஒரு
அறிமுகம்தான்
நம்மை
அறியவைக்க என்றார்
வேடிக்கைதான்
அவரை நான்
அறிந்தது -அவரின்
எழுத்தின் பேரில்
பிறகென்ன நேரில்?
அதுபோல்
என்னை அவர்
அறிவதும்
அறிய வேண்டியதும் – என்
எழுத்தின் மூலம்தானே?
என்ன போய்ப் பார்ப்பது?
பேசட்டும் என் எழுத்து
பேசப்படட்டும் முதலில்
பிறகு பார்ப்போம்
நேரின் தேவையை!


தெரிந்ததுபோல்
காட்டிக் கொள்வதில்
இருக்கும் அவஸ்தை
‘தெரியாது’ என்று
சொல்லி விடுவதில்
இருக்கும்
அறியாமையைவிட
உயர்ந்ததாயின்
அந்த
அறியாமைதான்
எனக்கு
கௌரவம்!!



ushadeepan@rediffmail.com

Series Navigation

author

உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts