கள்ளுக்கொட்டில்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

குரும்பையூர் பொன் சிவராசா


தம்பற்றை கள்ளுக்கொட்டிலிலை

சரியான சனக்கூட்டம்

இளையவர் பெரியவர் இளந்தாரிப் பெடியன்கள்

எல்லோரும் இங்கு சரிசமன் தான்

சமத்துவம் என்பது

சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதும் இங்கேதான்

தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள

தடுத்திடுவார் சிலபேரை முத்தண்ணை

தடுத்த அந்தச் சில பேரிடமே

கையேந்திக் கள்ளுக் குடிப்பார் அந்தண்ணை

பகுத்தறிவென்பது கள்ளிலிருந்துதானோ பிறக்கிறது

ஆண்கள் மட்டும்தான்

இங்கே அனுமதிக்கப் படுவதனால்

எல்லோரும் இங்கே மன்னர் தான்

ராணி இல்லாத ராயாக்கள்

இவர்கள் பாடு கொன்டாட்டம் தான் இங்கு

வீட்டில் வாயே திறக்காத முத்தண்ணை

இங்கே வந்துவிட்டால் முழுநேரப் பேச்சாளர்

அரசியலில் இருந்து தன் வீட்டு அந்தரங்கம் வரை

அவிட்டு விடுவார் அருமையாக முத்தண்ணை

கேட்போரெல்லாம் மெய்மறந்து

சொக்கித்துப் போய்விடுவார்

வீட்டிலே மனிசிக்குப் பயந்த முத்தண்ணை

கள்ளைக் கொஞ்சம் அடித்ததுமே

முழு வீரனாய் மாறிடுவார்

இண்டைக்கு வீட்டை போய்

அவளின்ரை வாயை அடக்கிறேன் பார் என்பார்

ஊத்தடா இன்னொண்டு என்று சொல்லி

அவர் குடிக்கும் அழகே ஓர் தனி அழகு

அக்கம் பக்கத்தார் ஆரேனும் இருக்கினமா

ஆழ்ந்து பார்த்துத்தான்

வீராப்புப் பேசிடுவார் முத்தண்ணை

அரசியல் விவாதமெல்லாம் இங்கேதான்

அக்கு வேறு ஆணி வேறாய் அலசி ஆராய்வார்

அமெரிக்காவில் ஆட்சியை மாற்றக் கூட

இங்கே திட்டங்கள் தீட்டிடுவார்

கள்ளுக்கொட்டிலிலே அரசியல் பேசிய முத்தண்ணை

பெற்றதோ அரசாங்கத்தில் மந்திரிப் பதவி

அனைத்தின் வளர்ச்சிக்கும்

கள்ளுக் கொட்டில்தான் ஆதாரம்

என்பதே அவரின் வாதம்

Five Star Hotel இலை விஸ்க்கி குடித்தாலும்

பிளாவிலே கள்ளை எடுத்து

குவிந்திருக்கும் எறும்பு பூச்சிகளை

அலாக்காக தட்டி எறிந்து விட்டு

அதை உறிஞ்சிக் குடிக்கும் இன்பம்

எங்கே வருமென்பார் முத்தண்ணை

கலம்பிலும் காமட்சி கள்ளுக் கடையை

திறந்து வைத்தே புகழ் ஏணியின்

உச்சிக்கே போய் விட்டார் இந்தண்ணை

சுவீடனுக்கு வந்த அண்ணர்

கள்ளுக் கொட்டிலைக் காணாது

கலங்கியே போய்விட்டார்

கடைசிக் காலத்தில் கள்ளில்லாமல்

காலம் தள்ளுவதெப்படி என்றே

சோர்ந்துவிட்ட முத்தண்ணைக்கு

கனடாவில் கள்ளுக் கடை திறந்த செய்தி

இன்பத்தை அளித்திடவே

அங்கே மாற்றிவிட்டார் தம் இருப்பிடத்தை

“கள்ளில்லா வாழ்வு பாழ்

கள்ளுக் கொட்டில் இல்லாத நாடு பாழ்”

இதுவே முத்தண்ணையின் தத்துவம்.


ponnsivraj@bredband.net

Series Navigation

author

குரும்பையூர் பொன் சிவராசா

குரும்பையூர் பொன் சிவராசா

Similar Posts