தாஜ் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

தாஜ்



பிழை

மோசமான கவிதையிது
பிரசுரத்திற்கு உதவாது.
அடித்தல் திருத்தலாய்
கறுப்பு மை மொழுகலாய்
எழுதும்போதே தெரிகிறது
எல்லாம் காலத்தின் விரயம்.
கற்றுத் தந்த காலமே
காற்றின் சுழிப்பில்
அபகரித்து விடலாம்.
நானேகூட செய்யலாம்தான்
கிழித்து வீசிவிட நாழியாகாது
அத்தனைக்கு கேவலாமாயிது.
படிக்கக் கிடைத்தவர்கள்தான்
சொல்லனும்
எனக்கிது வாழ்க்கை
பிறருக்கது நான்.

(கணையாழி, ஜூலை – 1996)


கவிதை தோழிக்கு இன்றைப்பற்றியும்
தும்பி விட்டுச் சென்ற எச்சத்தைப் பற்றியும்.

கோடை தணிகிறது
முகம் ஜில்லிட
காற்று எழுதிச் சென்ற
செய்தியை வாசிக்கும் முன்
முத்து முத்தாய் தொடர்ந்தது
மழையின் விளக்கம்.

காலடியில் மேவும் ஈரம்
நடையை மாற்றிவிட்டது.
தெளிந்த வானமும்
உறுத்தா வெளியுமாய்
வேர்வையின்
நாற்றமுமில்லை.

செடி கொடி மரங்கள்
பூரணத்தை நோக்க
செழிப்பின் வண்ணமயம்.
என் வீட்டுத் தோட்டத்திலும்
குதூகலத்தின் கூறுகள்.
தவழ்ந்து வந்த சுகந்தத்தில்
மொட்டவிழப் பூத்து நின்றேன்.
வட்டமிட்ட தும்பி ஒன்று
இதழோரம் அமர்ந்து
மகரந்தத்தின் எச்சத்தை
விட்டுச் சென்றது.


– தாஜ்
satajdeen@gmail.com
www.tamailpukkal.blogspot.com

Series Navigation

author

தாஜ்

தாஜ்

Similar Posts