இலையுதிர் காலம்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

வெ. அனந்த நாராயணன்


பெய்து ஓய்ந்த மழையில்
உதிர்ந்து விழுந்த
இலைகள் மேல்
மரங்களின் கண்ணீர்

நாற்பத்தியெட்டு
வருடங்களுக்குமுன்
இதேபோலொரு
மாலையில்
என் அம்மா
என் வருகைக்காகக்
காத்திருந்திருப்பார்

நானில்லாத அந்த
உலகம்
எப்பவும்போல்
அப்பவும்
இயங்கிக்கொண்டுதான்
இருந்திருக்கும்

இந்த ஈரக்காற்றில்
இன்று நான்
என் அப்பாவையும்
தாத்தாவையும்
தேடுவது போல்

நூறு வருடங்களுக்குப் பிறகு
என் கொள்ளுப் பேரன்
இதைப் படித்துவிட்டு
இன்னொரு
நானில்லாத உலகில்
என்னைத் தேடக்கூடும்

அப்பவும்
நானில்லாத அந்த
உலகம்
எப்பவும் போல்
இயங்கிக்கொண்டுதான்
இருக்கும்

— வெ. அனந்த நாராயணன்

Series Navigation

author

வெ. அனந்த நாராயணன்

வெ. அனந்த நாராயணன்

Similar Posts