வன்முறை

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

செல்வநாயகி


****
ஆரம்பித்துவிட்டன பூக்கள்
எப்போதும்போலவும்
இதற்கெனவே காத்திருந்தனவுமாக
எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து
ஒரு சத்தமற்ற மோதலை

பேயாட்டத்தினின்றும்
விடுவித்துவிடும் கவனத்தில்
இடம்மாற்றி வைக்கப்பட்டும்
தப்புவதில்லை பூந்தோட்டம்
பெருங்காற்றின் கைகளில் இருந்து

இயலும்வரை போராடுகின்றன செடிகள்
எதிரெதிராக வளைந்தும்
மற்றொன்றின் நிமிர்தலில் குனிந்தும்
பூக்களின் சேதத்தை
தவிர்த்தலின் பொருட்டு
ஆனாலும்
மோதித் தொலைக்கின்றன பூக்கள்
செடிகள் தன்னிலைக்குத் திரும்புகையிலேனும்

சாதுக்களுக்குள்ளும் நுழைகிறது சிலசமயம்
உபயோகமற்று அழிந்தாலும்
மோதலை வெறுக்காத குரூரம்

உரமிட்டுவிட்டு நீர்பாய்ச்சும்போதும்
களையெடுத்தபின்பு ஓய்வெடுக்கும்போதும்
சிந்தித்தபடியே இருக்கிறான் தோட்டக்காரன்
பூக்கள் மோதமுடியாவண்ணம்
கட்டிவைக்க ஒரு கயிறோ
பூந்தோட்டம் கண்டவுடன்
வேகம் குறைத்துக்கொள்ளும் காற்றோ
வேண்டிப்பெறும் வழியை

அதுவரை தொடர்ந்துகொண்டுதானிருக்கும்
மோதலில் மடிந்துபோதல் பூக்களுக்கும்
சூடிக்கொள்ள நினைக்கும்நாளில்
பூக்கள் இல்லாதுபோதல்
தோட்டக்காரன் மனைவிக்கும்.
****
snayaki@yahoo.com

Series Navigation

author

செல்வநாயகி.

செல்வநாயகி.

Similar Posts