தமிழ்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

புகாரி


(இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும்
கவனியுங்கள். ‘இதயம் ‘ என்று துவங்கி ‘மொழி ‘ என்று முடிகிறது. பின் ‘தமிழ் ‘ என்ற
உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் ‘மொழி ‘ என்னும்
சொல்லிலேயே துவங்கி ‘இதயம் ‘ என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும்
ஆனந்தமாய் நிறைவு செய்கிறது. இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப்
போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில்
சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.)

இதயத்தில் இனிக்கின்ற மொழி – தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் – தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து – தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் – தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் – தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று

பார்வைக்குள் விரிகின்ற வானம் – தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் – தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்

இயற்கைக்குள் முத்தாடும் மழை – தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு – தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு

மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் – தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை – தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்

முயற்சிக்குள் முளைவிடும் சிறகு – தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை – தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட மானம் – தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் – தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்
*
அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation

author

புகாரி

புகாரி

Similar Posts