அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

புகாரி


எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்
அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்
O
அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்
என்
இனிய கவிஞனே
கவியரசனே
கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்
ஆனால்
நீ இறந்தநாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது
O
ம்ம்ம்
எப்படி மறப்பது
அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..
O
அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்
உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..
இதோ என் கண்ணீர்:

O
ஞாானத்
தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது
வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு
மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது
மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா
ஆனால்
இதை நீ
இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான்
எண்ணியிருக்கவில்லையே
கவிதேவனே
உன்
வலக்கர விரல்கள் று
ம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே
உன்
பாதம்பட்ட
இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்
நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே
மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே
உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என்
கையெழுத்தைத் தவிர
என்
காதல் கடிதங்களில்
உன்
கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன
கண்ணதாசா
என்
உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே
உன்
செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ
என்ன செய்தாய்
அழுதாயா
இல்லை
நீ
அழுதிருக்கமாட்டாய்
அந்த
அகோர ராகத்திற்கும்
ஓர்
அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்
நீ
இருந்தது
கொஞ்ச நாள்
இயற்றியது
எத்தனை கோடி
நிறுத்தப்படாத
இந்த
என் அழுகை
உன்
சமாதியைக் கரைத்து
உன்னை
வெளிக்கொண்டு வருமா
O
என்
இனிய கவிஞனே
கவியரசனே
கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்
உன்
பிறந்தநாளுக்கு
நீ
இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..
—-
கண்ணதாசன்: ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981
*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

author

புகாரி

புகாரி

Similar Posts