எனக்கு வேண்டும் வரம்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

புகாரி


————————

வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – யாவும்
வேண்டும் வேண்டும்
வேண்டுமடா – உள்ளம்
வேண்டும் போதே வேண்டுமடா

எல்லைக் கோடுகள்
அழிந்திடணும் – அதையென்
சின்னக் காலால்
அழித்திடணும் -உலகை
ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும்
பறவைகளாய் – மனிதன்
காலடி உலவும்
நிலைவேண்டும் – சிறுமைக்
கட்டுகள் அறுந்து விழவேண்டும்

(வேண்டும்….)

தலைவன் ஒருவன்
வரவேண்டும் – வெற்றித்
தகுதி கருணை
எனவேண்டும் – நின்று
தங்கும் நேர்மை பெறவேண்டும்

அழியும் அகிலம்
தொடவேண்டும் – எங்கும்
அன்புப் பயிர்கள்
நடவேண்டும் – வஞ்சம்
அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

(வேண்டும்….)

காலை எழுந்து
பறந்திடணும் – பத்துக்
கோள்கள் கண்டு
திரும்பிடணும் – அந்தி
கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத்
தழுவிடணும் – அன்புக்
கவியால் கைகள்
குலுக்கிடணும் – உள்ளக்
கனவைக் கேட்டு களித்திடணும்

(வேண்டும்….)

மதங்கள் யாவும்
இணைந்திடணும் – செல்லும்
மார்க்கம் ஒன்றாய்
மலர்ந்திடணும் – தெய்வம்
மனிதம் கண்டு தொழுதிடணும்

உதவும் உள்ளம்
எழவேண்டும் – இந்த
வரங்கள் அருளும்
வலுவேண்டும் – என்றன்
வார்த்தை விண்ணை உழவேண்டும்
*
அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

author

புகாரி

புகாரி

Similar Posts