விக்ரமாதித்யன் நம்பி
இதோ இங்கே இருக்கிற
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு
இன்னும் போகமுடியவில்லை
திருநாளைப் போவார் கதைபோல
தொடர்கிறது இவன் போவது
இராஜராஜன் கட்டியபிறகு
இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன
ஐயா சொல்லிக்கொடுத்த வழியா
ஐயாவைத் தாண்டி நிற்க வேண்டுமென்ற வெறியா
அப்படியெல்லாம் இருக்காதுதான்
அதுபோல இருந்தால்
அப்பாவை மாதிரியே கட்டியிருக்குமா பிள்ளை
அப்பன் மகன் உறவு
ஆதியிலிருந்தே சிக்கல்தான்
அப்பாக்கள் பிள்ளைகள்மீது
எந்நாளும் ஒரு கண்ணாகவே இருக்கிறார்கள்
பிள்ளைகளோ அப்பாவின் ஆவியை
ஆவாஹனம் செய்துவைத்துக் கொள்கிறார்கள்
பிருகதீஸ்வரரை வந்து வழிபட நாளும்
ஒரு நானூறு பேராவது தேறுவார்கள்
நாதியற்றுப் போய்க் கிடக்கிறதாம்
இராஜேந்திரன் எழுப்பிய கோயில்
படையெடுத்து வெற்றிகொண்ட பின்னே வந்த
பவிகில் நிர்மாணித்த கோயிலது
ஒரு காலத்திய வெற்றிகள்
இன்னொரு காலத்தில் இப்படியாகுமோ
*********************************************************************
புதசுக்கிரயோகம்
ஹர்ஷவர்த்தனன்
நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள்
காலத்தில் தூங்குகிறார்கள்
தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள்
நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள்
ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள்
எப்படியோ வீடு கட்டுகிறார்கள்
மகனைப் பொறியியல் கல்லூரிக்கும்
மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள்
ஓய்வுநாளில் உயர்தர ஓட்டல்களில் குடிக்கிறார்கள்
சேமிப்பு நிறைய இருந்தாக்கால்
சிநேகிதர்களுக்கும் கொஞ்சம் செலவழிக்கிறார்கள்
நடுநடுவே எழுதவும் செய்கிறார்கள்
உண்மையான கவிஞனைக் கண்டதும்
பதைபதைத்துப் போகிறார்கள் குற்றவுணர்வோடே
தருமனையும் துரியோதனனையும் சகுனியையும்
பீஷ்மரையும் விதுரையும் துரோணரையும்
மாயக்கண்ணனே முழுசாய் அறிவான்
**********************************************************************
விக்ரமாதித்யன் கவிதைகள்
இருந்து
செய்யவேண்டிய வேலை
ஓடிக்
கொண்டிருக்க நேர்கிறது
ஓடியாடிப்
பண்ணக்கூடிய காரியம்
இருந்த
இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது
கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில்
கஷ்டமாகவே இருக்கிறது
சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால்
சந்தோஷம்தான்
மழை கொட்டக்கொட்ட
பச்சை போர்த்தும்
மரம் செடிகொடிகள்
நதி நிறைய நிறைய
மேனி காணும்
நஞ்சை பூமி
காசு பணம் சேரச் சேர
கொண்டாட்டம்தான்
ஜனங்களுக்கு
********************************************************
விக்ரமாதித்யன் கவிதை
பாதங்களுக்குக் கீழ்
பூமி
ஏறிட்டுப் பார்த்தால்
வானம்
காற்று
வீசுகிறது
உலைத்தீ
எரிகிறது
கொண்டல்கள்
கொட்டுகின்றன
பூமி
தந்துகொண்டேயிருக்கிறது
சூரியனோ சந்திரனோ
வானத்தில்
நட்சத்திரங்கள் சுடர்விட்டதும்
சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா
நமக்கென்ன
பிரச்னை வேறே
***********************************************************************
விக்ரமாதித்யன் கவிதை
மலை வளரும் என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
கடல்கொண்டது என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள்
நம்பத்தான் வேண்டியிருக்கிறது
தீ அழித்தது எத்தனையோ என்பார்கள்
சூறாவளி இழப்பு என்பார்கள்
தெரியும்
பூமி தருகிறது
தெரியும்
வானம் பொழிகிறது
தெரியும்
தெரியவேயில்லை
தெரியவேயில்லை
தெரியவேயில்லை
எளிய தமிழ்
எப்படி கைகூடிவருகிறது
கவிதை
எப்படி தோன்றுகிறது
பாரதி
எப்படி வாழ்ந்தான்
ஒவ்வொரு காலத்திலும்
ஒரு பாரதி
*********************************************************
விக்ரமாதித்யன் நம்பி கவிதை
பைய பைய
என்கிறாள் பெற்றவள்
தத்தித்தத்தி நடந்துவரும்
குழந்தையைப் பார்த்து
பைய பைய
என்கிறான் கணவன்
சூலிப் பெண்டாட்டி
மாடியிலிருந்து இறங்குகையில்
பைய பைய
என்கிறான் யாரோ ஒருவன்
தடுமாறி நடந்துபோகும்
குடிகாரனைப் பார்த்து
பைய பைய
என்கிறார்கள்
சுமை
இறக்கிவைக்கும்போது
பைய பைய
என்கிறார்கள்
சப்பரத்தை
தூக்குகையில்
தடுக்கி
விழும்போது
பைய பைய என்கிறார்கள்
இறங்குகையில்
தடுமாறினால்
பைய பைய என்கிறார்கள்
காதலில்
பைய பைய இல்லை
காமத்தில்
பைய பைய இல்லவேயில்லை
பைய பைய என்பது
பற்று
பைய பைய என்றால்
பரிவு
வாழ்க்கை பூராவும்
எவ்வளவோ பைய பைய.
************************************************************
விக்ரமாதித்யன் நம்பி கவிதை
காற்றாடி
எப்படி சுற்றுகிறது
எனக்குத் தெரியாது
மின்சாரம்
எப்படி வெளிச்சம் தருகிறது
எனக்குத் தெரியாது
தண்ணீரிலிருந்து
எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது
பேருந்து
எப்படி ஓடுகிறது
எனக்குத் தெரியாது
விமானம்
எப்படி பறக்கிறது
எனக்குத் தெரியாது
பாலியஸ்டர்
எப்படி நெய்கிறார்கள்
எனக்குத் தெரியாது
வீரிய வித்துகள்
எப்படி கண்டுபிடித்தார்கள்
எனக்குத் தெரியாது
ஃப்ளாட்கள்
எப்படி தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது
போட்டோ
எப்படி எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது
ஓவர் ப்ரிட்ஜ்
எவன் மூளையில் தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது
என்னதான் தெரியும்
வார்த்தைகளைக் கோத்து
வக்கனையாய் வடிவாய்
கவிதை எழுதமட்டுமே தெரியும்
*****************************************************************************
அறிந்தது
அறியாதது
விக்ரமாதித்யன் நம்பி
எங்கள் ஊரில்
இருக்கையில்தான்
இயல்பாய் இருக்க முடிகிறது
அதுவும் எங்கள் தெருவில்தான்
இன்னும்
தன்மையாய் இருக்கிறேன்
அதிலும் எங்கள் வீட்டில்
இருக்கும் பொழுதுதான்
சகஜமாய் இருப்பதே
இலக்கிய கூட்டங்களில்
காண்கிற விக்ரமாதித்யன் வேறு
இங்கே இருக்கும்
இவன் தனி
உளரில் வீட்டில்
பார்க்க வரும் நண்பர்களுக்குத் தெரியும்
குறிப்பாக
வித்யாஷங்கர்
திருமேனி
மகரந்தன்
ஆதவன்
லக்ஷ்மி மணிவண்ணன்
சங்கர ராம சுப்ரமண்யன்
பாலை நிலவன்
அனைவருமே அறிவார்கள்
வீட்டுக்கே வராதவர்களுக்கு
விளங்கிக் கொள்ள முடியாது
போதையிலேயே பார்த்த பிம்பம்
படிந்துவிட்டதற்கு என்ன செய்ய
சாதாரணமாய் இருக்கும் கவியை
சாதாரணமாய் காண ஒரு முறை
வந்து செல்லுங்களேன் நண்பர்களே
சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று
சந்திக்க வேண்டும் தோழர்களே
இவன்
அப்படி சந்தித்திருக்கிறான்
ஜெயகாந்தன்
கண்ணதாசன்
லா.ச. ராமாமிர்தம்
கி. ராஜநாராயணன்
கி.சு. செல்லப்பா
க. நா. சு.
சுந்தர ராமசாமி
அசோகமித்திரன்
நகுலன்
இப்படி
நிறைய சிங்கங்களை.
*********************************************************************
திருப்புன்கூர் நந்தி
விக்ரமாதித்யன் நம்பி
எந்தப் பக்கமாய் விலகியிருக்கும்
இடதுபுறமா வலதுபுறமா எப்படி
இருந்த இடத்திலிருந்து எழுந்து
இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ
நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த
குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது
ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து
நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று
ஆதிநாயகன்தான் அடிமனசில்
ஏது நினைத்திருப்பான்
தீண்டாமை கொடிதென்றே எண்ணியிருப்பார்
திருநாளைப் போவார்தான் தீர்மானமாய்
கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சட்டென்று எழும்பி நகர்ந்து வலதுபுறமாய்
உட்கார்ந்திருக்கிறது பெரியஉருவம் பிரயாசைப்பட்ட வருத்தத்தில் நாக்குத்துருத்தி
திருப்புன்கூரில் மட்டுமல்ல
தேசமெங்கும் நந்தன் சிவன் நந்தி
***************************************************************************
***************************************************************************
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- மனித நல்லிணக்கம்.
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- யானை பிழைத்த வேல்
- பாரதி நினைவு நாள்
- பாரதி, மகாகவி: வரலாறு
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- கபிலர் பாறை
- ஆதாரம்
- ஏ ! பாரதி
- காகம்.
- அரவம்.
- கவிதைகள்
- கவிதைகள்
- புதசுக்கிரயோகம்
- கங்கைகொண்டசோழபுரம்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- தேர்க்கவிதை
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வைர வியாபாரமும் வன்முறையும்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- நட்பு
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- காதல் மாயம்
- அம்மண தேசம்
- மேல் நாட்டு மோகம்
- வினைத்தொகை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- விடியும்! – (26)
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- என்ன உலகமோ
- கால் கொலுசு
- உள்வீடு
- யெளவனம்
- காபியிலும் ஆணாதிக்கம்
- இணையம்
- என் புத்திக்குள்
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- முரசொலி மாறன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு