கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஒரு பட்டாசு வெடிப்பது
போலில்லை மைனா வளர்ப்பது
ஒரு சினிமாவுக்குப் போவது
மாதிரி அல்ல முயல் வளர்ப்பது
நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ்
பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம்
பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா
காண்பது அன்னவா என்ன

இதிகாச நாயகர்கள் யாரும்
எதையும் வளர்த்ததாகத் தெரியவில்லை

மாதவி
கிளி வளர்த்திருப்பாளாய் இருக்கும்

கண்ணகி
என்ன வளர்த்திருக்கக் கூடும்

பாடிக்கொண்டே போன
ஒளவை கவிதைதான் வளர்த்தியிருக்கிறாள்

பாண்டியர்கள்
தமிழும் சைவமும் வளர்த்தார்கள்

தேவாரம் பாடிய மூவர்
திருமூலர் மணிவாசகர்
எல்லோரும் வளர்த்தெடுத்தது
சைவமும் தமிழும்தாம்

சிலம்பில்
வளர்ந்த தமிழ்
சிந்தாமணியில்
வளர்ந்த தமிழ்
ஆதிசங்கத்தில்
திமிர்ந்துநின்ற தமிழ்

ஆண்டாளிடம்
பூத்துப் பொலிந்த தமிழ்

பாரதியிடம்
பொங்கி வந்த தமிழ்
கண்ணதாசனிடம்
களைகட்டி நின்ற தமிழ்

மலைகள் வளர்கின்றன
மான்கள் வளர்கின்றன
முலைகள் வளர்கின்றன
முத்தங்கள் வளர்கின்றன
பிள்ளைகள் வளர்கிறார்கள்
பெண்கள் வளர்கிறார்கள்
கவிஞர்கள் வளர்கிறார்கள்
கலைஞர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்

கண்ணீர்த்துளிகளுக்கும் கவிதைகளுக்கும்
கொஞ்ச சம்பந்தமா பாப்பா

ஒரே ஒரு சாட்சி
பிரமிள்

******************************************************

Series Navigation

author

விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி

Similar Posts