ஞாபகம்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

தமிழ்மணவாளன்


எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு
நாடகம் பார்க்கச் செல்லும் போது
இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய்.
அழுது கொஞ்ச நேரத்தில்
அப்படியே உறங்கிப் போவேன்.

அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச
‘நல்ல பையன் சொன்னதைக் கேட்பான் ‘
எனச் சொல்வாய் பெருமையாய்.
நாடகம் பார்த்ததிலும் அதிக திருப்தியோடு
தீர்ந்து போகுமென் நாடக ஆசை.

கோபத்தில் அப்பா அடித்துத் துரத்த,
அவர் கடைக்கு போன சமயம்
கொல்லைப் பக்கம் அழைத்து
சாப்பிடச் செய்வாய்.

வார விடுமுறையில் வந்து செல்கையில்
அப்பா கொடுக்கும் அதேயளவு
நீயும் கொடுப்பாய்
‘போதும் போதும் ‘ என்பேன் நான்.
அந்தப் பணம் கொடுப்பதற்காய்
எத்தனைச் சிக்கனமாய்
இருந்தாய் நீ.

ஆயிரமாயிரமாய் சம்பாத்ித்து
அவசியமானவையெல்லாம்
வாங்க செலவு செய்ய முடிகிறது
என்னால் இப்போது.
ஆயினும்
விரல் குவித்து அடுக்கிய
சில்லரைகளைத்
தருவாயே
அந்த இன்பம் எப்போதுமே
சற்றுக் கூடுதல் தான் அம்மா.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

author

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்

Similar Posts