விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

வ.ந.கிரிதரன் –


விரிந்திருக்குமிந்த வான்
என் நெஞ்சினில்
இனம்புரியாததொரு களிப்பினை
விடைதெரியா பல்
வினாக்களை எழுப்பிட
எப்பொழுதுமே தவறியதில்லை.
சூழல் தெரியா
மலை முகட்டில் அல்லதோர்
குன்றில்
அல்லது உயர்வானதொரு புல்வெளியில்
அண்ணாந்து படுத்திருந்து
வான் பார்த்தல்
எப்பொழுதுமே மகிழ்ச்சிக்குரியதொரு
விடயமாகத் தானிருந்து வருகிறது.
இந்த வெளி
தத்துவஞானிகள் எப்பொழுதும்
தத்துவங்களைத்
தர்க்கிப்பதற்குப் பெரிதும்
உதவியாக இருந்திருக்கின்றது.
அன்றைய அறிவியல் அறிஞர்கள்
தொடக்கம்
இன்றைய நியூட்டன், ஐன்ஸ்டைன் என்று
சிந்தனையைத் தூண்டியதில்
அளப்பரியதொரு பங்கு இதற்குண்டு.
விரிந்திருக்கும் சடவெளி
அதில்
உயிர்த்துடிப்புடன் வளையவரும்
பொருளின் பின்னணியில்
பெரும் அர்த்தத்துடன் விரிந்து
கிடக்கும்.
மிகப் பெரியதொரு
‘பிர(ம்)மா ‘ண்டமானதொரு
மேடையின் பின்னணியாய்.
இதன் பின்னணியில்
உயிர்களின் நடனம் நடிப்பு
எல்லாமே வெகு நேர்த்தியாக
இயல்பாக, அற்புதமாக
இருக்கிறது.
ஒருவரை ஒருவர்
கொன்று தம் இருப்பை
உறுதி செய்வதில்
எல்லோருமே
எல்லாமே
உண(ர்)வாக இருக்கின்றார்கள்.
இருக்கின்றன.
சின்னஞ்சிறிய அழகானதொரு குருவி
தன் குஞ்சிற்கு
உணவாக ஊர்ந்து செல்லுமொரு
உயிரினைப் பிடித்து வருகிறது
எந்தவித மன உறுத்தலுமில்லாமல்.
ஊர்ந்திடும் உயிருக்கு உள்ள
இருக்கக் கூடிய பந்த
பாசங்களைப் பற்றிய
எந்தவிதத் துயரங்களோ
சோகங்களோ
கழிவிரக்கமோ
இல்லாமல்.
தனியாக மானொன்றினை அல்லது
வரிக்குதிரையினைத் துரத்தும்
புலியோ அல்லது சிங்கமோ
அந்த மானின், அந்தக் குதிரையின்
அவற்றின் வருகையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்
அவற்றின் குட்டிகள் அல்லது அவற்றின்
காதலர்கள் இருக்கக் கூடிய
சாத்தியங்களைப் பற்றியெல்லாம்
சிந்திக்காமல் துரத்துகின்றன
புசிப்பதை மட்டும்
நினைவில் வைத்துப்
பெரும் பசியுடன்.
ஆனால் முதலை, காட்டு நாய்
போன்ற சில
கொல்லுவதில் கூடக் கொடூரமானவை.
சிறுகச் சிறுகக் குழுவெனக்
கூடி கொல்லும் இவற்றின் செயல்
கொல்லப் படுவதன்
உணர்வுகளைக் கொஞ்சமேனும்
கவனத்திலெடுக்காமல்
புரியப் படுகின்றது.
தனது குழுவில் ராஜாவாக ஆதிக்கம்
செலுத்திக் கொண்டிருந்த
வரிக் குதிரையொன்றை
அல்லது
காட்டெருமையினை
அல்லது
மானொன்றினை இவை
கீழ்த்தரமாகக் கொல்லுகின்றன
எந்தவித இரக்கமும்
இல்லாமல்.
உயிர் அளவில் சிறிதாயினும்
அல்லது
உருவில் பெரிதாயினும்
டிஎன்ஏயின்
சில வித்தியாசங்கள்
போதுமானவையாக
இருக்கின்றன
அடிப்படை இயல்பினை
மாற்றுவதற்கு.
உண(ர்)வு
உயிர்களின் இருப்பிற்கு
உயிராகவே
இருக்கின்றது.
விரிந்திருக்கும் வெளிப்
படுதாவில்
வரைந்திருக்கும் ஒவியமாய்
சுடர்கள், உயிர்கள்
அனைத்துமே எழில் கொண்டு
ஒளிர்ந்து. கருவாக,
உருவாக, உதித்து
உலருமொரு இருப்பு
இங்கிருப்பதன் அடிப்படை
இரகசியமென்ன ?
உயிரற்ற கதிர்
அதன் ஒளி, அதன் துகள்
உயிரின் அடிப்படையாய்
உள்ளதொரு விந்தை.
விளங்காத விந்தை. வியப்பு
கொள்ளும் நம் சிந்தை.
***
ngiri2704@rogers.com

Series Navigation

author

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

Similar Posts