நடை பாதை

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

ஆனந்தன்


விடியற்காலை
காகங்கள் கரைவதால்
கண் விழிப்பேன்!

அடுத்துக் கடக்கவிருக்கும்
அந்த இரயிலுக்காய்
ஆண்டுகள் பாதி
கருகும் வரை
காத்திருக்க வேண்டும்!

ஓசை எழுப்பி
ஊரையும் எழுப்பி
வேகமாய்ச் செல்லும்
சில இரயில்கள்
என்றும் மதித்ததில்லை
இந்த நிறுத்தத்தை.

நிற்கும் சில இரயில்களிலும்
பயணிகள்
இரங்குவதும் இல்லை
எனக்கு கூலி
கிடைப்பதும் இல்லை!

சச்சரவுகள் செய்து
கூட்டமாய் வரும்
குடும்பங்கள் சில!

படிக்கும் புத்தகத்தில்
பாதி ஆயுளைக் கழிக்கும்
பரம யோகிகள் சிலர்!

ஓடியாடும்
சிறுவர்கள் சிலர்!

உலகை மட்டும் அல்ல;
தன்னை எரிக்கும்
சூரியனையும் மறந்து
மனம் மகிழும்
காதலர்கள் சிலர்!

என்று பலர் காத்திருக்க
எப்பொழுதும்
தாமதமாக வரும் இரயில்
இப் பொழுது மிகவும்
தாமதமாக வருமோ ?

அடுத்து வரும் இரயிலுக்காய்
எட்டிப் பார்த்தேன்
கண் பார்வையின்
எல்லை வரை
எதுவும் தென்படவில்லை !

பிரசவத்திற்காய்,
அந்த இரயிலில் வரும்
என் அருமை
மகளைத் தவிர!

ஆனந்தன்
14th Aug 2002

Series Navigation

author

ஆனந்தன்

ஆனந்தன்

Similar Posts