மாற்றம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

பொன். முத்துக்குமார்


‘எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ‘
களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்;
‘என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ?
சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ‘
என்றபடி பவ்யமாய் விசாரிப்பார்
கோயிலுக்கு மரம்கொடுக்க
அனுமதியின்றி எங்கள்
கூரைவீட்டுக் கொல்லைக்குள் புகுந்து
மரம் வெட்டிய விவகாரத்தில்
அப்பாவை ‘போடா ‘ என்று விளித்து
என் பதினைந்து வயதில்
என்னிடம் அறைவாங்கி
என்னை உதைத்த
கலியமூர்த்தி;
‘நல்லா யிருக்கியாப்பா ?
அண்ணன் சொன்னான் நீ வந்திருக்கிறதா ‘
என்றபடி ஈரமாய் குசலம் விசாரித்த –
ஓய்வுபெற்றபிறகு
வெறுமையும், தளர்வுமாய்
முன்பற்களிழந்து வலம்வரும் –
கன்னத்திலறைந்து
குவியதூரம் போதித்த
எட்டாம் வகுப்பு ராஜாராமன் சார்
டிகிரி படித்துவிட்டு
ஊர்சுற்றிக்கொண்டிருக்கும்
தன் மகனை நினைவுபடுத்துவார்.
‘கொளத்தங்கர வாத்யார் பையன்;
என்னடா பொடியா எங்க வந்த ? ‘
என்று
நான் டவுசர் நழுவும் வயதில்
டயர் உருட்டிக்கொண்டு போன
அக்பர்பாய்கடையில் விசாரித்த
விடலைகள் தற்போது
புன்னகையோடு வணக்கம்வைத்து
தலையாட்டி
வேகமாய் சைக்கிள் மிதித்துப்போகும்.
யிவ்வளவுக்குமிடையில்
வெளிதேசத்திலிருந்து
வருடங்கள் கடந்து
ஊர்திரும்பியிருக்கும் நான்.

Series Navigation

author

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்

Similar Posts