காவல்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

சேவியர்.


சந்துகளுக்குப் பின்
ஓர்
சுடலைமாடன்,
ஆளுயர அரிவாளோடு.

அகல விரித்தக் கண்கள்,
உறைந்த நிலை உதடு,
முறுக்கி இறுக்கிய மீசை,
மடித்துக் கட்டிய
மண் நிற வேட்டி.

சோறுண்ண மறுத்த
மழலை ஒன்றுக்கு
பயமுறுத்தும் உருவமாய்,

கண்ணாமூச்சி ஆடிய
மூன்றாம் வகுப்பு
மாலை நேரங்களில்
ஓளிந்து கொள்ளும் ஓரிடமாய்,

நண்பர் சந்திப்புக்களில்
அடையாளம் சொல்லும்
கலுங்காய்,

ஆற்றுத் தண்ணீரை
இடுப்பில் சுமந்துவரும்
தாமரைகளை
விடலைப்பையன்கள்
வெறித்துப் பார்க்கும் இடமாய்,

அந்த ஒரு சிலையை
ஆளாளுக்கு
அர்த்தப் படுத்தினார்கள்,
தேவைக்கேற்ப
மொழிபெயர்த்தார்கள்.

பட்டம்மா பாட்டி மட்டும்
பல கதை சொல்வாள்,
ஊரைக் காத்த
உருக்கு மனிதன் சுடலையின்,
சுண்டாத அரிவாள் முனை பற்றி.

ஒரு,
வெள்ளிக் கிழமையின்
இருள் பொழுதில்,
ஒரு
பாலியல் பலாத்காரம்
சுடலைச் சிலை மறைவில்
மனிதாபிமானத்தைக் கசக்கிப் போட்டது.

காங்கிரீட் கால்களோடு
அறையப்பட்டிருக்கிறான்
சுடலை
கையில் ஆளுயர வாளோடு.
காவலுக்காய்.

Series Navigation

author

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Similar Posts