அம்மா

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

புஹாரி, கனடா


அம்மா…
இந்த உலகம் சிறியது…
உன் பாசம் மட்டுமே
பெரியது…

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்…
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை…

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த
உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது…
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது…

O

பொழுதெல்லாம்
உன்
முத்த மழையில்
என்
உயிரை நனைத்தப்
பாச அருவியே…

நீ
என்றென்றும்
எனக்காகவே
கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று
சொன்னாலும்
என்
எண்ணம் குறுகியது…

என்
கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன்
மேனியைத்
தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே…

நான் வசித்த
முதல் வீடு
உன்
கருவறையல்லவா…!

நான் உண்ட
முதல் உணவு
உன்
இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா…!

நான் கேட்ட
முதல் பாடல்
உன்
ஆத்மா பாடிய
ஆராரோ
ஆரிரரோ வல்லவா…!

நான் கண்ட
முதல் முகம்…
பாசத்தில் பூரித்த
உன்
அழகு முகமல்லவா…!

நான் பேசிய
முதல் வார்த்தை
என்
ஜீவனில் கலந்த
‘அம்மா ‘ வல்லவா…!

நான் சுவாசித்த
முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா…!

O

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே…

என்
பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன்
கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு
வழி சொல்லித்தந்தன…

உனக்காக நான்
என்
உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி
பொக்கிஷங்களில்
ஒரே ஒரு
துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா…!

——————————
buhari2000@hotmail.com

Series Navigation

author

புஹாரி, கனடா

புஹாரி, கனடா

Similar Posts