துணை

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

திருமாவளவன்


இந்த வேடிக்கை தொடங்கி
இரண்டு நாட்கள் தான் ஆகிறது
முதல் நாள் காலை
தக்கத் திமிக்கிட
என்றொரு கவிதை தாளம் மீட்டி
தத்தித் திரிய
குந்தியிருந்து மெல்லப்பதுக்கி
குறித்துக் கொள்ள
பால்கனி ஓரம் ஒதுங்கிய போதில்
தற்செயலாக கண்ணில் வீழ்ந்தது
செரி மரக்கிளைகளில் அங்கும் இங்கும்
தத்தியபடியே இருந்தன
இரண்டும்
தொலைந்த பொருளொன்றைதேடுதல்
அன்றில்
இழந்த சோகத்தில் மாளுதல்
கூடும் என்றுணர்ந்தேன்
நேற்றுக்காலை
நேரத்தோடு வந்தன மீள
மெல்ல மிக ஆறுதலாக
தாவும் ஒவ்வொரு கொம்பரிலும்
ஓய்ந்து இளைப்பாறி
இணையோடு அலகோடு அலகையிணைத்து
கோதிப் பிணைக்து
காதல் பேசி
மாலை வரையிலும் மகிழ்வோடிருந்தன
இன்று காலை
குதூகலக் கூச்சல் குலந்ததென்
தூக்கம்
அடிக்கடி போவதும் மீள்வதுமாக
புல்லுக் கீற்றை ஒவ்வொன்றாக
மூக்கில் சுமந்து கொணர்ந்து
சமைக்கத் தொடங்கிற்று
வல்லன பரப்பி
இடையிடை இடையினம் சொருகி
உள்ளே மெல்லனெ தூவ
நேர்த்தியாய் இழைந்தது கூடு
கைதேர் தச்சனின் லாவகந் தோற்க
எத்தனை நுணுக்கம்
இத்தனை அநுபவம் வாய்க்க
எத்தனை காலத் தலைமுறை முயற்சி
இப்பொதெனக்கு
பறவைகளோடு காலங்கழிப்பது
இனிதாயிருக்கிறது

Series Navigation

author

திருமாவளவன்

திருமாவளவன்

Similar Posts