வெங்கட் சாமிநாதன்
இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக சரிந்துள்ளன. பொதுவாகச் சொல்வார்கள்: எக்காலத்திலும் மூத்த தலைமுறையினர், இளைய தலைமுறையைப் பார்த்து அலுத்துச் சொல்லும் வார்த்தைகள் தான் இவை என்று. அதுவும் உண்மைதான். எந்த சரிவையும் இப்படி நியாயப்படுத்தும் மனங்களுக்கு, நானே கூட ப்ளேட்டோவின் உரையாடல்களிலிருந்து மேற்கோள்களைச் சான்றாகத் தரலாம், நமக்குத் தெரிந்து 2500 வருஷங்களாக இதே கதை தான் என்று சொல்ல. அதுவும் சரிதான்.
உண்மையில் இதெல்லாம் சரிதானா? 70 வருடங்களுக்கு முன், ‘பணம், பணம், நிறையப் பணம்’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரிய மனிதர், சாதனையாளர், பத்திரிகாசிரியராகவும் இருந்தார். அதிலும் வெற்றி பெற்றார். அவரிடம் ஒரு கட்டத்தில் ஒரு யோசனை முன் வைக்கப்பட்ட போது, “பத்திரிகை நடத்துவதிலும் சில தர்மங்கள் உண்டு. அதை எந்த லாபத்திற்காகவும் மீறக்கூடாது,” என்று சொல்லி அந்த யோசனையை மறுத்தார் என்று சொல்லப்பட்டது. வியாபார வெற்றியே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவரிடத்தும் சில தர்மங்கள் வழிகாட்டின. அது ஒரு காலம். எந்நிலையிலும் தர்மங்கள் கைவிடப்படக்கூடாது என்று நினைத்த காலம்.
இன்று புகழிலும், பண சம்பாத்தியத்திலும் வெற்றியின் உச்சியில் இருக்கும் ஒரு எழுத்தாளர், அவரது ரசனைக்கும் கலை உணர்வுகளுக்கும் விரோதமாக, வெகுஜன கவர்ச்சியில் மூழ்கிப் பணமும் பிராபல்யமும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவிக்கே அது பிடிக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்தது. எனினும் அவர் அப்பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் ரசனைக்கே விரோதமான இப்பாதையின் முதல் காலடி வைப்பின் போது, ‘ஏன் இப்படி?’ என்ற கேள்விக்கு, ‘நான் பிழைக்க வேண்டாமா?’ என்பது அவர் பதிலாக இருந்தது. அவர் என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே இதில் நாம் காண்பது இரண்டு தலைமுறைகளுக்கிடையே தோன்றிவிட்ட வாழ்க்கை முரண்களை அல்ல. மதிப்புகளின் பயங்கர சரிவை. ஒரு கால கட்டத்தில், அவர் பிராபல்யம் அடையாத ஆரம்ப வருடங்களில், இந்த பாமரத்தனங்களையும் ஆபாசங்களையும் கேலி செய்தவர் என்பது சொல்லப்பட வேண்டும். அந்தக் கேலிகளின் போது நான் உடனிருந்தவன். அன்று கேலி செய்த விஷங்களே இன்று அவரது வாழ்க்கையின் வெற்றிக்கான லட்சியங்களாகி விட்டன. பணத்துக்காக அவர் பாமரத்தனத்தை மட்டுமல்ல, ஆபாசத்தையும் கைக்கொள்ளும் நிலைக்கு அவர் தன் மனத்தைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரைக் காப்பாற்ற அல்ல. அவரைத் தனித்து சாடுவது நியாயமல்ல. இன்னும் நநூறு ஆயிரம் அவர் போன்ற வெற்றிகள், சிறிது பெரிதுமாக தமிழ் நாட்டில் பெருமிதத்தோடு உலவுகின்றனர். அவர்களையெல்லாம் பெயர் சொல்லாமல் தப்பிக்க விட்டு, இவரை மாத்திரம் சாடுவானேன்?
நம் கண் முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையென சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போல தலையங்கங்கள் எழுதும் முன்னணி பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்த பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜ கம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ·பாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது. சில ·பாஸிஸ நடப்புகளை நியாயப்படுத்தவும் செய்கிறது. தமிழ் நாட்டு பத்திரிகைகள் எல்லாமே இதே குணத்தைத் தான் கொண்டுள்ளன. மாறுவது சிறிய அளவில் தான். குணத்தில் அல்ல.
பத்திரிகை, இலக்கியம் என்று மாத்திரம் இல்லை. வாழ்க்கை முழுதிலுமே மதிப்புகள் சரிந்துள்ளன. ஒரு கலாச்சார சீரழிவு தொடர்ந்து சரிந்தே வந்துள்ளது. என் சிறு வயதில் என் வீட்டுக்கு எதிரில் குடி இருந்தவர் ஒரு தாசில்தார். ஒரு நாள் தாசிலதாரை சந்தோஷப்படுத்தி தனக்கு சாதகமாக காரியம் செய்துகொள்ள, தன் தோட்டத்தில் விளைந்த காய் கறிகளுடன் அவர் வீட்டு முன் நின்றவனிடம் தாசில்தார் சத்தம் போட்டது கேட்டது. ” நீ ஏன் இங்கே வந்தே? சட்டப்படி உன் பக்கம் தான் நியாயம் இருக்கு. அது நடக்கும். என்னை வந்து நீ பாக்கவும் வேண்டாம், இதெல்லாமும் வேண்டாம். எடுத்துண்டு போ முதல்லே.” இந்த வார்த்தைகளை இன்று எங்கும் கேட்க முடியாது. ஒரு பஞ்சாயத்து யூனியன் அடி மட்ட எழுத்தர் தொடங்கி, உச்ச அதிகார பீடம் வரை. எந்த துறையிலும், எந்த மட்டத்திலும். இலக்கியம் கலை எல்லாம் இந்த சமூகத்திலிருந்து எழுபவை தான். இந்த சமூகத்தின் காற்றை சுவாசித்து வாழ்பவை தான்.அரசியலிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஆரம்பித்து, இன்று எல்லாத் துறைகளிலும் இது புற்று நோயாகப் பீடித்துள்ளது.
ஆனால் எல்லோரும் சுவாசிக்கும் காற்று, வாழும் சமூகம் ஒன்றே என்றாலும், வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றல்ல. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சுதந்திர ஜீவன்களாக வாழ்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். இன்றைய தமிழ் இலக்கியத்தின் தொடக்கமே, அன்று பிரிட்டீஷ் ஆதிக்கத்தை எதிராக குரல் எழுப்ப வந்த ஒரு பத்திரிகையில் தான் நிகழ்ந்தது. தமிழ் கவிதையின் புதிய சகாப்தமும் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பிய கவிஞனுடன் தான் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்குப் பின்னும், ஏதோ ஒரு அதிகார பீடத்தின் வாசலில் பல்லிளித்து நின்று காத்திருந்து எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமே வலிந்து தம் எழுத்தையும் சிந்தையையும் அந்த பீடத்தின் பாதங்களில் சமர்ப்பிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இன்று நம்மைச் சுற்றிலும் நிறைய. ஐம்பது வருடங்களுக்கு முன் சிம்மமாக கர்ஜித்த ஒரு எழுத்தாளன் இன்று தானே வலியச் சென்று அதிகாரத்திற்கு தன் அடிபணிந்து மகிழ்ச்சியுடன் அது பற்றிப் பெருமையும் பட்டுக் கொள்கிறான்.
தான் அன்றாடம் வதைபடும் வறுமையின் கொடுமையிலும், ‘என்னை மதியாதவன் வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’ என்று தன் சுய கௌரவ வலியுறுத்தலை வெகு சாதாரணமாக, இயல்பாக அமைதியுடன் வெளியிட்ட எழுத்தாளர்களை நான் அறிவேன். எத்தகைய வீராவேச உரத்த அறைகூவல் ஏதுமன்றியே அவரது சுயகௌரவம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. அத்தைகைய தன் சுயத்துவத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பாற்றிய மனிதரின் செயல் பாட்டில் தான் (சி.சு. செல்லப்பா) தமிழ் தன் கவித்வத்தையும் விமர்சன பிரக்ஞையையும் திரும்பப் பெற்றது கடந்த நூற்றாண்டின் பின் பாதியில்.
இன்று பல திறனுள்ள எழுத்தாளர்கள், அரசியல் அதிகாரங்களை, சினிமா பிரபலங்களை, பத்திரிகை அதிபர்களை, நாடி அவர் தம் குடைக்கீழ் தம்மை பிரஜைகளாக்கிக் கொள்வதில் ஆசை காட்டுகிறார்கள். பிரஜைகளாகி விட்டதில் பெருமை கொள்கிறார்கள். எந்த கலைஞனும், தான் செயல்படும் எதிலும் தன் ஆளுமையை, தாக்கத்தை, பாதிப்பை பதிக்க இயலவில்லை என்றால், மாறாக ஒரு அதிகாரத்தின், பணபலத்தின் நிழலாகத் தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவன் ஒரு சேவகனே, கலைஞன் இல்லை. என் நண்பர் ஒருவர், வெகு தொலைவில் இருப்பவர், தான் செல்லும் பாதையில் கண்ட ஒரு வாசகத்தைச் சொன்னார். ‘எது ஒன்றிற்காவது நீ தலை நிமிர்ந்து நிற்க வில்லையென்றால், பின் எதற்குமே நீ தலை குனிந்து கொண்டுதான் இருப்பாய், கடைசிவரை’ (If you don’t stand up for something in life, then you end up falling for anything)
காலம் மாறி விட்டது. நம் வசதிகள் பெருகி இருக்கின்றன. நம் வெளியீட்டுக் கருவிகள் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன. அன்று சிறு பத்திரிகைகள் தான் கதி என்று இருந்த நிலை போய் இடைநிலை பத்திரிகைகள் நிறைய தோன்றியுள்ளன. இருப்பினும் அவை தாமே தேர்ந்து கொண்ட ஏதோ ஒரு வகையில் குழுமனப்பான்மையோடு தான் செயல்படுகின்றன. தன் குழுவைச் சேராதவனை ஒழிக்க நினைக்கும் அல்லது நிராகரிக்கும். வெகுஜன பத்திரிகைகள் சிலருக்கு இடம் அளிப்பது போல் தோன்றினாலும் அவை தமக்கு ஒரு தனக்கு தகுதியில்லாத ஒரு உயர்ந்த பிம்பத்தை கொடுத்துக்கொள்ளவே அந்த ஒரு சிலரை பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் இவை எதுவும் அதிகாரத்திற்கும் ஆசைகளுக்கும் அடிபணியாதவை அல்ல. ஒரு லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், அதிகார பீடங்களின் புன்முறுவல் கிடைத்தால் போதும். அங்கு இட்டுச் செல்பவர்களுக்கு ப்ரீதியாக நடந்துகொள்வார்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனி ஜமீன்கள். ஆனால் அதிகாரத்திற்கு சலாம் போடும் ஜமீன்கள்.
இது கணிணிகளின் காலமாகி விட்டது. இணைய தளங்களும் கட்டுப்பாடற்ற வெளியீட்டு சாதனங்களாகி உள்ளன. இணைய தளங்களில் எழுதியே தம் பெயரை தமிழ் பேசும் உலகம் பூராவும் தெரியச் செய்துள்ளவர்களும் உள்ளனர். பத்திரிகைகள் சார்ந்தே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லாது போயுள்ளது. இது இன்றைய நிகழ்வுகளில் ஒன்று. இணைய தளங்கள் நிறைய சுதந்திரம் தருகின்றன. பத்திரிகைகள் ஏற்க மறுப்பவற்றை இணைய தளங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இவற்றின் தாக்கம் விரிந்ததும், அதே சமயம் குறுகியதும் கூட.
இவை போக ஒவ்வொருவரும் தமக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் இந்த வலைப்பதிவுகளின் உட்சென்று பார்த்தால், அவற்றின் பதிவாளர்களில் பலர் தம் அந்தரங்க ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, எவ்வளவு அநாகரீக ஆபாசமும் நிறைந்த ஆளுமைகள் அவை என்று காண கஷ்டமாக இருக்கிறது. ‘நிர்வாணமாக தெருவில் நடக்க வெட்கப்படும் ஒருவன் தன்னை ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை” என்று புதுமைப்பித்தன் அன்று சீற்றத்தில் சொன்னதை இன்று இப்பதிவாளர்களின் இயல்பென அலட்டிக்கொள்ளாமல் சொல்லலாம். இதைத் தான் மதிப்புகளின் சரிவு என்றேன். தொழில் நுட்பங்களும், வசதிகளும் மனித ஆளுமையை உருவாக்குவதில்லை. மனித ஆளுமைதான் அதன் குணத்தில் தொழில் நுட்பத்தையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கலாச்சார சீரழிவு காலத்தில், தொழில் நுட்ப தேர்ச்சி மதிப்புகளின் சரிவோடு வந்து சேர்ந்துள்ளது. சுதந்திரமும் வசதிகளும் ஒருவனின் அதம குணத்தை வெளிப்படுத்தவே வழிசெய்கிறது.
நான் தடித்த கரிய வண்ணத்தில் சித்திரம் தீட்டுவதாகத் தோன்றக் கூடும். இவையெல்லாம் உண்மைதான் என்ற போதிலும், அன்று அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறையையும் மீறி சுதந்திர குரல்கள் எழுந்தது போல, என்றும் எதுவும் முழுதுமாக இருள் படிந்ததாக இருந்ததுமில்லை. மின்னும் தாரகைகள் எப்போதும் எந்நிலையிலும் காட்சி தரும். கொஞ்சம் பழகிவிட்டால் இருளிலும் கண்கள் பார்வை இழப்பதில்லை. முன்னர் வெகு ஜன சாம்ராட்டுகளாக இருந்தவர்களின் எழுத்தை, இன்று இருபது வயதேயான ஒரு இளம் எழுத்தாளன் கூட, எழுத்து என்று மதிக்க மாட்டான். அந்த சாம்ராட்டுகளுக்கு இல்லாத தேர்ச்சியும் எழுத்து வன்மையும் இன்று தன் முதல் காலடி எடுத்து வைப்பவனுக்குக்கூட இருப்பதைக் காண்கிறோம். அன்று சிறுகதையோ, நாவலோ அதன் மொழியும் உருவமும் எழுதும் திறனும் நம் முன்னோடிகள் பயிற்சியினால் பெற்றது இன்றைய எழுத்தாளனுக்கு பிதிரார்ஜிதமாக வந்தடைந்துள்ளது. இதன் சிறந்த பங்களிப்புகள் நிறைய பேரிடமிருந்து வந்துள்ளன. யூமா வாசுகி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், உமா மகேஸ்வரி, இமையம், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், சோ.தருமன் என இப்படி நிறைய அவரவர் மொழியோடு, உலகங்களோடு, பார்வையோடு தமிழுக்கு வந்துள்ளனர். கடந்த இருபதாண்டுகளின் தமிழ்ச் சிறுகதையில் இருபது பேரைத் தொகுக்க நான் கேட்கப் பட்டபோது, இருபதுக்குள் அத்தொகுப்பை அடக்குவது எனக்கு சிரமமாக இருந்தது.
- நாடற்றவன் பேசிக்கொண்டிருக்கிறான்
- நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (இலையுதிர் காலம்) கவிதை -2 (பாகம் -3)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியைத் திருத்த வேண்டுமா ? (கட்டுரை 54 பாகம் -1)
- “தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”
- எளிமையும் வலிமையும் : தேவதச்சனின் “யாருமற்ற நிழல்”
- இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”
- திரு. அப்துல் கையூம் “இடைவேளை” சுகமாகவும் நகையாகவும் இருந்தது
- ” இடை ” பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்
- இணையப்பயிலரங்கு
- அறிவோர் கூடல் நிகழ்வு
- அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா
- கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்
- தீர்ப்பு எழுதும் கலம்கள்
- நெருடல்கள்
- வேத வனம் விருட்சம் 25
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -3
- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு”
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா
- இணையம் தரும் முத்தமிழ் அமிழ்தம்
- தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )
- கவலைகிடமான மொழிகளின் நிலை
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)
- சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- விடுபட்டவை
- முகமூடி
- நானும் முட்டாள் தான்
- சொல்லி முடியாதது
- தமிழ்!
- வேண்டும் சரித்திரம்