அருணகிரி
“The Islamic mind is where the current battle will be fought, and this is why it will be a long war”.
– M.J.AKBAR in “Shades of the Swords”
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு: உடனடி விளைவுகள்
மசூதி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியில் வந்ததும் சவுதி அரசு முதல் வேலையாக வெளியுலகுக்கான எல்லா தகவல் தொடர்பு வசதிகளையும் துண்டித்தது. இது பல தவறான யூகங்களுக்கும் பூசல்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமானது.
மெக்கா முற்றுகைக்கு இரு வாரம் முன்புதான் ஈரானில் கொமேனி அரசு அமெரிக்கத்தூதரக மக்களைச் சிறைப்பிடித்திருந்தது. அமெரிக்கர்கள் சவுதியில் இருப்பதற்கும் ஈரான் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அன்றைய அமெரிக்காவிற்கு சவுதி வஹாபிக்களும், சுன்னிக்களும் மிதவாதிகளாக்வும், (ஈரான் சம்பவங்களின் அடிப்படையில்) ஷியாக்களே தீவிரவாத வில்லன்களாகவும் தெரிந்தனர். இந்நிலையில் நட்பு நாடான சவுதி அரசையும் சங்கடத்துக்குள்ளாகும் விதத்தில் அமெரிக்க அரசு தன்னிடமிருந்த அரைகுறைத் தகவ்ல்களின் அடிப்படையில் மெக்கா ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விஷயத்தையும் இதற்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவசரப்பட்டு வெளியிட்டது. ஈரானை தேவையில்லாமல் இதில் தொடர்புபடுத்தியது மட்டுமன்றி அன்றைய கார்ட்டர் அரசு அவசர அவசரமாக அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றை சவுதியை நோக்கி அனுப்பி வைத்தது.
சதாமின் வில்லத்தனத்தை வைத்து பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருந்ததாக வந்த செய்திகளை தயாராக நம்பி ஈராக் படையெடுப்பை நிகழ்த்திய மேற்கின் அதே தராசுதான் அன்று கொமேனி தலைமையிலான ஈரானை எடைபோடவும் உபயோகப்படுத்தப்பட்டது. அமெரிக்க தூதரக ஊழியர்களைச் சிறைவைத்த கொமேனியின் ஈரான் மேற்குலகின் அன்றைய வில்லன். அமெரிக்க நட்பு நாடான சவுதியில் நடந்த மசூதி ஆக்கிரமிப்பையும் கொமேனியின் ஈரானையும் உடனடியாக முடிச்சுப்போடுவதில் அமெரிக்க நட்பு அரசுகளுக்கோ, ஊடகங்களுக்கோ எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை. நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மெக்கா மசூதி இரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இதனை பிரிட்டனும், இஸ்ரேல் அரசும் ஆதரித்தன. இவையனைத்தையும் அன்றைய சோவியத் யூனியன் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. காதும் காதும் வைத்தாற்போல முற்றுகை விஷயத்தை முடிக்க நினைத்த சவுதி அரசுக்கு இது பெரும் எரிச்சலைத் தந்தது. ஈரானின் வில்லத்தனத்தை நம்பத் தயாராக இருந்த மேற்குலகைப் போலவே, அமெரிக்க-இஸ்ரேல் வில்லத்தனத்தை நம்ப மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளும் தயாராகவே இருந்தன. இதனைச் சரியாகக் கணித்திருந்த அயதுல்லா கொமேனி இந்தச் செய்தியை முதலில் வெளியிட்ட அமெரிக்க அரசுதான் இஸ்ரேல் துணையுடன் இந்த ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகித்திருக்க வேண்டும் என்று ஒரே போடாகப் போட்டு பதிலடி கொடுத்தார். அவ்வளவுதான், உலகெங்கும் பற்றிக்கொண்டது ஒரு பெரும் கலவரத் தீ.
பரவிய இஸ்லாமியக் கலவரங்கள்:
பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பத்தொன்பது வயது அமெரிக்க தூதரக பாதுகாப்பு வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் அமெரிக்க தூதரகத்தின் மேல் பறந்து விட்டு அமைதியாக திரும்பிச் சென்று விட்டது. ராணுவமோ போலீஸோ உதவிக்கு வராத நிலையில் அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் இரும்பு அறைக்குள் ஒளிந்து கொள்ள, தூதரகமே கொளுத்தப்பட்டது. பல மணிநேரம் புகையிலும், தகிக்கும் அனலிலும் சூழ்ந்த நிலையில் இரும்பு அறையில் தவித்த தூதரக ஊழியர்கள் இன்னும் சில மணிநேரங்களில் உயிரோடு வெந்து சாகும் நிலையில் இரவு கவிழ்ந்தது; சூறையாடிய களைப்பில் வெறிக் கும்பல் கலைந்து செல்ல, தூதரக ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளி வந்து உயிர் பிழைத்தனர்.
பாகிஸ்தான் மட்டுமல்லாமல், பங்களாதேஷ் டாக்காவிலும் இந்தியாவிலும் மதவெறிக்கும்பல் கலவரத்தில் இறங்கியது. இந்தியாவில் கல்கத்தாவில் அமெரிக்க அலுவலகம் தாக்கப்பட்டது. கடைகள் நொறுக்கப்பட்டு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. ஆனால் ஹைதராபாத்தில் நடந்த கலவரங்கள் கிலாபத் இயக்கக் கலவரங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்தன.
கண்மூடித்தனமான வஹாபிய வெறுப்பின் உச்சகட்டமாக மக்கா மசூதி ஆக்கிரமிப்ப்ற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்துக்கள்மீது ஹைதராபாதில் கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. வெள்ளிக்கிழமை நமாஸ் முடித்து விட்டு வந்தால் கலவரம் என்ற வகையில் வெள்ளிக்கிழமை கலவரங்கள் ஹைதராபாத்தில் வாடிக்கையாகிப்போனது இந்த கலவரத்திற்குப் பிறகுதான். சுதந்திரத்திற்குப்பின் தடை செய்யப்பட்டு 1957 தடை விலக்கப்பட்ட எம்.ஐ.எம் (Majlis-e-Ittehadul Muslimeen) என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சி இந்தக் கலவரங்களில் முன்னணி வகித்தது. மதக்கலவரங்களைத் தொடர் உரமாக்கி பின்னாளில் இக்கட்சி பெரும் வளர்ச்சி கண்டது (2). இந்த எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத் வந்தபோது அவரை நாற்காலிகளால் தாக்கியது நினைவிருக்கலாம். இதைத்தொடர்ந்து அவருக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல்களால் அவர் ஒளிந்தும், இடம் பல மாறியும், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட்டே வெளியேறி வேற்று நாட்டிலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கொமேனி கொளுத்திப்போட்ட நெருப்பு துருக்கியிலும் பரவியது. வட்டிகனின் அன்றைய புதிய போப் இரண்டாம் ஜான் பால் துருக்கியின் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு துருக்கிக்கு வரும் திட்டம் இருந்தது. காபா முற்றுகை பல இஸ்லாமிஸ்டுகளை கடுங்கோபத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் போப்பின் வருகை இந்த வெறுப்பு நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது போலானது. கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருந்த மெஹ்மத் அலி ஆகா என்பவன் சிறையிலிருந்து தப்பினான். போப்பின் வருகை விலக்கிக்கொள்ளப்படவில்லையெனில், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டான். 18 மாதங்களுக்குப்பின் ரோம் நகரில் போப் இரண்டாம் ஜான் பால் சுடப்பட்டார். மெஹ்மத் அலி ஆகா சுட்ட மூன்று குண்டுகளில் ஒன்று போப்பின் வயிற்றைத் துளைத்து, அவரை சாவின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.
இதற்குள் ஜுஹைமான் குறித்த விவரங்களை அறிந்து கொண்ட சவுதி அரேபிய அரசு, மெக்கா முற்றுகையில் ஷியாக்களுக்கோ, வேற்று நாட்டாருக்கோ எந்த பங்குமில்லை என அறிவிக்க பல நாடுகள் பெருமூச்சு விட்டன. ஆனாலும் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்படுவது நின்றபாடில்லை. குவைத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது லிபியாவில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.
அடுத்து: மசூதிப்போர்
(தொடரும்)
arunagiri_123@yahoo.com
- அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு
- தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !
- மகா அண்ணா!
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது
- விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
- நினைவுகளின் தடத்தில் – (18)
- தமிழ் விடு தூது – 1
- பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்
- வேத வனம் விருட்சம் 4
- கடிதம்
- இலக்கியப் போட்டி 2008
- மூன்று
- விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)
- இந்த நூற்றாண்டின் மகள்.
- மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
- சிதறும் பிம்பங்கள்..!
- உறுத்தல்…!
- தீராத கேள்விக் கரையோரம் பிலால்
- பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
- ஹைக்கூ – துளிப்பாக்கள்
- “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”