நாகரத்தினம் கிருஷ்ணா
ஒகேனேக்கல் பிரச்சினையைத் தீர்த்தாகிவிட்டது. இதுபோன்ற பிரச்சினைகளில் தேசிய கட்சிகள் மௌனம் சாதிப்பது தெரிந்ததுதான், உண்மையில் அவர்கள் தேசியக் கட்சி என்ற லேபிளில் இயங்குகிற பிரதேச கட்சிகள், மற்றபடி தேசமாவது மண்ணாங்கட்டியாவது. காங்கிரஸ¤ம், பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்டுகளும், மாநில கட்சிகளுக்குப் போட்டியாக: தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடக பாரதிய ஜனதா, கேரள மார்க்ஸிஸ்ட்டென எதிர்காலத்தில் பிரதேச கட்சிகளென்ற கழுதையாகலாம், காலப்போக்கில் சேலம் காங்கிரஸ், பண்ருட்டி பாரதிய ஜனதா, ஊத்துக்குளி மார்க்ஸிஸ்ட் கட்சியென்று கட்டெறும்பாகவும் தேயலாம். நாடு, மக்கள் நலமென்று பேசும்- தேசமுழுதும் அறியப்பட்ட உண்மையான தலைவர்கள் இன்றில்லை. இங்கே நடிகர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். அத்தனை நடிகர்களும் மேடையேறி (ஒக்கனேக்கல்லுக்காக அல்ல பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால்) உண்ணாவிரதமென்று பாவலாபண்ண வழக்கம்போல மரக்கிளைகளிலும் கட்டிடங்களிலும் தொற்றிக்கொண்டு ஒரு கூட்டம். தமிழ் நாட்டின் ஆபத்பாந்தவர்களும், பாந்தவிகளும் நிற்க; நடக்க; மைக் பிடித்து வீரவசனம் பேச; சிலர் கடனேயென்று உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களில் விஸ்தாரமாகக் காட்டினார்கள், நமக்கு வாயெல்லாம் பல்லு, தமிழர்களுக்கு தண்ணீர் காட்டியாகிவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே, கர்நாடகத் தேர்தல் முடியும்வரை ஒக்கனேக்கல் திட்டத்தை அமைதிக்காப்போம் என்ற பெயரில் நிறுத்தியாகிவிட்டது, கர்நாடாகாவில் காங்கிரஸ் ஜெயிக்கணுமில்லையா? என்ன இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தால் சொந்தங்களுக்கு எதிராக மேடையேறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்காதே என்று கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்த்திரை நடிகர்கள் வருந்தும்படி ஆகியிருக்காது, கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்த கையோடு எதுவும் நடக்கலாம், திபெத்தியர்கள் சீனாவிடம் நியாயம் எதிர்பார்ப்பதும், தமிழ்நாடு அண்டை மாநிலங்களில் நியாயம் கேட்பதுமொன்றுதான், கம்யூனிஸ்டு காம்ரேட்டுகளைக் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.
நமது இந்தியத் தோழர்களை கைத் தொலைபேசியில் பிடிக்க முடியுமென்றுதான் நினைக்கிறேன். கியூபா தோழர்களுக்கு கடந்த மாதத்தில்தான் அதற்கான வாய்ப்பினை அளித்திருக்கிறார்கள், பிடல் காஸ்றோவிற்குப் பிறகு பட்டத்திற்கு வந்த அவரது சகோதரர் கருணையோடு பிரச்சினையைப் பரிசீலித்ததாகச் ‘கிரான்மா'(கியூபாவின் அதிகாரபூர்வமான செய்திப் பத்திரிகை)சொல்கிறது. க்யூபாவில் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் அனைவருமே ·பிடல் காஸ்ட்றோவின் பந்து மித்திரர்கள் என்பது ஊரறிந்த சேதி, அவர்களில் ஒரு சிலருடைய வீட்டுப் பிள்ளைகள் க்யூபா கால் பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று அவர்களது பரம வைரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போயிருக்கிறார்கள். மைதானத்தில் வீரர்களின் தலையை எண்ணிப் பார்க்க க்யூபா தரப்பில் விளையாட வந்தவர்களில் பலர் காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அமெரிக்காவின் சாண்ட்விச்சிசிடமும், கொகாகோலாவுக்கும் இனி ஆயுள்பரியந்தம் அடிமை என்று பிதற்றுகிறார்களாம். அமெரிக்கா போன பிள்ளைகளோட போனில் பேசக்கூட நமக்கு முடியலையே என்று தோழர்கள் புலம்ப, ராவுல் (Raul- Fidel Castroவின் சகோதரர்- க்யூபாவின் புதிய அதிபர்) மொபைல் போன் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார் (அரசாங்கத்தின் தயவில் இயங்குகிற தொலைபேசிகள் ஒழுங்காக இயங்காததோடு, ஒட்டுக்கேட்கப்படுகிறதாம்). ·பிடல் காஸ்ட்ரோவுடைய பந்து மித்திரர்கள் தயவில் சாதாரண கியூபா வாசியும் இப்போதைக்கு கைத்தொலைபேசி உபயோகிக்கலாம். வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலாச்சா? வெறுங்கையில் எப்படி முழம்போடுவது? அதற்கு பைசா வேண்டுமே, அமெரிக்காவில் வாழும் க்யூபா மக்கள், உதவத் தீர்மானித்திருக்கிறார்களென்று செய்தி.
மீண்டும் ஒக்கனேக்கல் பிரச்சினைக்கு வருகிறேன், இனித் திட்டம் முழுதாக நிறைவேறுமென்று நினைக்கவில்லை. கர்னாடகமோ தமிழ் நாடோ, இதில் பாதிக்கப்படுவது உண்மையில் அப்பாவி மக்கள். அங்கேயும் பந்த் இங்கேயும் பந்த்; அங்கேயும் ஊர்வலம் இங்கேயும் ஊர்வலம்; அங்கேயும் கல்லெறி, இங்கேயும் கல்லெறி. வி.ஐ.பி.க்களுக்கு கவலைகளில்லை, அவர்கள் பெங்களூரில் இருந்தாலென்ன, சென்னையிலிருந்தாலென்ன- அவர்கள் இந்தியர்கள்- பாதுகாக்கப்படவேண்டியவர்கள். நடுத்தரவர்க்கமும், அன்றாடகாய்ச்சிகளும் தமிழன், தெலுங்கன், மலையாளி, பீகாரி என்கிற பிரதேச அடையாளத்துக்குரியவர்கள், அடுத்தவீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபமென்று தமிழில் பழமொழியுண்டு, புதுமொழி அண்டை மாநிலங்களில் நதிகள் ஓடினா, தமிழனுக்கு இலாபம் வெள்ளம். கர்நாடகத் சட்டசபைதேர்தல் முடிந்தகையோடு, பேச்சுவார்த்தை, நடுவர் மன்றமென தமிழ்க் கிளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன இலவுகள்.
மதம், மொழியென்று பிரிவினைகொண்ட மக்களிடையே பிரச்சினைகள் மேற்கத்திய நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய உதாரணம் பெல்ஜியம். இங்கே மூன்று பிரதேசங்கள்:1. டச்சு மொழி பேசும் ·பிளேமிஷ் மக்களைக்கொண்ட ·பிளாண்டெர்ஸ் பிரதேசம் 2. பிரெஞ்சுமொழி பேசும் மக்களினத்தைக்கொண்ட வலோனிய பிரதேசம், இங்கே ஜெர்மானிய மொழி பேசும் சிறுபான்மையினருமுண்டு 3. பிரெஞ்சு- டச்சுமொழிகளென்று இரண்டையும் பேசும் மக்கள் கலந்து வசிக்கிற, பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல் பிரதேசம். ·பிளாண்டெர்ஸ், வலோனியா ஆகிய இரண்டு பிரதேசங்களிலும், இனம் மொழி அடிப்படையிலான தனித் தனி அரசாங்கங்கள் இருக்க, மத்தியில் கூட்டாட்சி. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ·பிளேமிஷ் மக்கள் பெரும்பானமையினராக இருந்தபோதிலும், பிரெஞ்ச் பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே அவர்கள் இருந்துவந்தனர். இருபதாம் நூற்றாண்டிலிருந்து விழித்துக்கொண்ட ·பிளேமிஷ்மக்கள், தங்கள் மொழி தங்கள் இனம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 1962, 1970 மற்றும் 1980ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசன சட்டதிருத்தங்கள், மொழிவாரி அடிப்படையிலான பிரதேசங்கள் அமையக் காரணமாயின.
இன்றைக்குப் பெல்ஜியத்தில் ஓரளவு இந்தியாவை ஞாபகபடுத்தும் நிர்வாக அமைப்பு. இதில் பிரச்சினை என்னவென்றால், தேசிய சிந்தனைகொண்ட கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்துவிட்டன. அந்தந்த பிரதேசங்களிலும் மொழி, இனவாத கட்சிகளே தேர்தலில் வெற்றி பெறுகின்றன. அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறுவதில்லை. 1958லிருந்தே மத்தியில் கூட்டணி ஆட்சி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குத் தங்கள் தங்கள் பிரதேச நலமே பிரதானம். எப்பொழுது வேண்டுமானாலும் அரசாங்கத்திற்குத் தரும் ஆதரவைக் கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொள்ளலாம் என்ற நிலை. பலமுறை நெருக்கடிக்கு ஆளாகி உரியகாலத்திற்கு முன்பே அரசாங்கம் பதவி விலகியிருக்கிறது. இறுதியாக நடந்து முடிந்த மத்திய பிரதிநிதித்துவ சபையில் ·பிளாண்டர்ஸ் பிரதேசத்து அடிப்படைவாதக் கட்சியான CD&V வெற்றிபெற்றது, கட்சித்தலைவர் ஈவ் லெட்டெர்ம் கொஞ்சம் சா·ப்ட்டான வட்டாள் நாகராஜ், அடித்து நொறுக்கும் வழக்கமெல்லாம் அவருக்கில்லை. ஆனால் வடக்கு(பெல்ஜியத்தின் வடபகுதியிலுள்ள பிரெஞ்சு பேசும் வலோனியா பிரதேசம்)வளர்கிறது தெற்கு(பெல்ஜியத்தின் தென்பகுதியிலுள்ள ·பிளாண்டெர்ஸ் பிரதேசம்) தேய்கிறதென்ற திராவிட பாரம்பரியம். ·பிளாண்டர்ஸ் பிரதேசத்தைப் பெல்ஜியத்திடமிருந்து பிரித்தாக வேண்டுமென்று குரல் கொடுத்தவர், அவர் கட்சி ஆளுகின்ற ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்தில், டச்சு மொழி தெரியாதென்றால் உள்ளெ நுழைய முடியாது, அதாவது இந்தியாவில் கன்னடம் மட்டுமே தெரிந்த ஆசாமி சென்னையில் வசிக்க முடியும் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த ஒருவர், பெங்களூருவில் வாடகைக்கு வீடுபிடிக்கலாம், ஆனால் பெல்ஜியத்தில் பிரெஞ்சும்- டச்சும் அரசாங்க மொழிகளென்றாலும், ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்திற்குள் டச்சுமொழி தெரியாதவர்களுக்கு இடமில்லையென ஈவ் லெட்டர்ம் கட்சியினர் ஆளும் ·பிளாண்டர்ஸ் பிரதேச இனவாத அரசாங்கம் அறிவித்திருந்தது.
மத்திய பிரதிநிதித்துவ சபைக்கான தேர்தல் வந்தது, அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சி என்ற வகையில் பெல்ஜிய நாட்டை ஆளுவதற்கான வாய்ப்பு CD&V க்கும் கட்சியின் தலைவரான ஈவ் லெட்டர்முக்கும் வாய்த்ததென்றாலும், அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிரிகளிடம் கைகோர்க்கவேண்டிய கட்டாயம், அரிசி ஆழாக்கிலிருந்தாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டுமில்லையா? பிரெஞ்சு பேசும் வலோனியப் பிரதேசத்தினரோ கதவடைத்தனர். அரசியல் சாசன விதிப்படி அமையவிருக்கும் அரசாங்கத்தையும் தடுக்கவும் முடியாது, இருதரப்பாருக்குமிடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. கடந்த ஒன்பதுமாதங்களில் இரண்டு முறை ஈவ் லெட்டர்ம் தலைமையிலான கூட்டணி அரசு, பால்காய்ச்சிய கையோடு பதவி விலகிவிட்டது. மூன்றாவது முறையாக அவரை ஆட்சி அமைக்கும்படி பெல்ஜியப் பேரரசின்(?) மன்னர் இரண்டாம் அல்பெர் கேட்டுக்கொள்ள, ஈவ் லெட்டர்மை பிரதமராகக்க்கொண்ட கூட்டணி அரசு பதவி ஏற்றிருக்கிறது. ஈவ் லெட்டர்மின் கடிவாளம், அவரது கட்சியின் கையிலிருக்கிறது. அவர்கள் பெல்ஜிய மத்திய அரசு, ·பிளாண்டர்ஸ் பிரதேசத்திற்கு இதுவரை இழைத்த அநீதிகளை நேர்செய்ய சலுகைகள் எதிர்பார்க்கிறார்கள், அதற்காகத்தான் எங்கள் கட்சியின் தலைவரைப் (ஈவ் லெட்டர்ம்) பிரதமர் பொறுப்பேற்க அனுமதித்திருக்கிறோம் என்கிறார்கள், இயாலாதெனில் ·பிளாண்டர்ஸ் தனிநாடாகப் பிரிந்தாகவேண்டும் என்கிறார்கள். ஈவ் லெட்டெர்ம் எதிர்ப்பாளர்கள் மத்திய கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்பதற்குமுன்பு பெல்ஜியத்தின் தேசியகீதத்தைத் அவர் பிழையின்றி பாடட்டும் என்கிறார்கள். பிரெஞ்சு மொழியிலிருக்கிற தேசிய கீதத்தைப் பிழையின்றி பாடுவதற்கு அவருக்கு வரவில்லையாம். அவரோ பெல்ஜியத்தின் தேசியகீதத்தை எங்கள் டச்சு மொழியில் பிழையின்றி பாட வலோனிய பிரெஞ்சு மக்கள் முன்வருவார்களென்றால், நானும் பிரெஞ்சு மொழியிற் பிழையின்றி பாடத் தயாரென்று அறிவித்திருக்கிறார்.
ஒக்கனேக்கலுக்கும், பெல்ஜியத்துக்கும் என்ன சம்பந்தமென்று கேட்கறீங்க, அப்படித்தானே? வெள்ளைக்காரன் தங்கள் மக்கள் நலனிற்காக, சொந்த நலனை அவசியமெனில் விட்டுக்கொடுப்பான். நாம எப்படி? அதை நீங்கதான் சொல்லணும்.
nakrish2003@yahoo.fr
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- காலம் மாறிப்போச்சு:
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- பார்வை
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- பட்ட கடன்
- தேடல்
- நினைவுகளின் தடத்தில் (9)
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- வார்த்தை மே-2008 இதழில்
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- ஒரு ரொட்டித்துண்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- கருணாகரன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- இல்லத்தின் அமைப்பியல் விதி !