கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

வாஸந்தி


அப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஹேமா மாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவியே பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். மும்பை அப்போது பம்பாயாக இருந்தது. அதன் புகழ்மிக்க மெஹ்பூப் ஸ்டூடியோவில் மாலை 4 மணிக்கு ஷ¥ட்டிங்கின் இடையில் ஸ்ரீதேவியை பேட்டி காணலாம் என்று சொன்னார்கள்.ஸ்ரீதேவி என்றதும் நானும் வரேன் என்று படையாகக் கிளம்பிய உறவுக்காரப் பையன்களை தடுத்துவிட்டுக் கிளம்புவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. பகைவனையும் வீழ்த்தும் அழகிய தொடைகள் கொண்டவர் என்ற புகழ் ஸ்ரீதேவிக்கு இருந்தது. ரேகாவைப்பார்க்கும்போதாவது கண்டிப்பா கூட்டிண்டு போணும் என்று பேரம் பேசினார்கள். அது நடக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்ததால் சரி என்று ஒப்புக்கொண்டேன். தினமும் காலையில் எழுந்ததும் வெங்கடேஷ சுப்ரபாதம் சொல்வதுபோல ரேகாவின் செயலருக்கு ·போன் செய்வதும் அவர் ரேகாவை கிறுக்கு பைத்தியம் என்று திட்டுவதும், ‘எனக்கே டைம் குடுக்கமாட்டா அவ;எப்ப வேற வேலைகிடைக்கும்னு காத்திண்டிருக்கேன், நன்னிகெட்ட ஜென்மம் இது’ என்று சொல்வதும் தமாஷாக இருக்கும். அந்தத் தமாஷ¤க்காகவே தினமும் அவருக்கு ஒரு ·போன் போடுவேன். ரேகா அவரைப் பணியிலிருந்து நீக்கி விட்டைருந்தார் என்றும் வேறு செயலர் நியமிக்கப்படவில்லை என்றும் பிறகு தெரிந்து கொண்டேன் . எனக்கு ரேகாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அப்போது ரேகா முன்னணி நடிகை மட்டுமில்லை, புகழ் உச்சியில் இருந்த அமித்தாப் பச்சனுடன் தனக்கு நெறுக்கமான உறவு என்றும் அவர் தனது காதலர் என்றும்
பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். திருமணமாகாமலே குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பம் என்று பேட்டிகளில் சொல்லிவந்தார். அந்தச் செயலரைப்போலவே பம்பாய் பத்திரிக்கையாளர் பலரும் அது ஒரு கிறுக்கு என்றார்கள். ஆனால் ரேகா என்றவுடன் பொதுவான பிரமிப்பு எல்லாருக்கும் இருந்தது. தமிழ் நாட்டிலிருந்து முதல் முதலில் பாலிவுட்டில் வேலைத் தேடி அவர் வந்தபோது, அவரது குண்டான உருவத்தையும்,[அவரது இடை 40 அங்குலம் என்று சொல்வார்கள்] உடல் கருமையையும் மோசமான ஹிந்தி உச்சரிப்பயும் கேலி செய்து எல்லோரும் ஒதுக்கினார்கள். பாலிவுட்டில் அவருக்கு இடமே இல்லை என்றார்கள். ஆச்சரியமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ரேகா தனது சுழியைத் தலைகீழாக மாற்றிக் கொண்டார். சுய முயற்சியால், சாமர்த்தியமான உழைப்பால். கடுமையாக உடற் பயிற்சி செய்து உடலை செதுக்கிய சிற்பம் போல் ஆக்கிகொண்டிருந்தார். ஐரோப்பிய, அமெரிக்க ஒப்பனை ரகஸ்யங்களைக்கற்று சொக்கவைக்கும் அழகியாகக் காட்சியளித்தார். அவரது கண்களும் அடர்த்தியான தலைமுடியும் பளபளத்த சருமமும் சராசரி இந்திய யுவதிகளின் ஏக்கமாக மாறின. ஹிந்தியை வட இந்தியர்கள் போல் சுத்தமான உச்சரிப்பில் பேசினார். மிக அமரிக்கையான் ஆழமான நடிப்பாற்றல் பெற்றார். இவை எல்லாவற்றையும் அவர் தன் சொந்த முயற்சியால் சாதித்திருந்தார் என்பது தான் எல்லோருடைய பிரமிப்புக்கும் காரணம். தடாலடியான மரபை எதிர்க்கும் அவரது பேச்சும் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாயின. ஆனால் அவரை பேட்டி காண்பது துர்லபம் என்று எனக்குப் புரிந்து போயிற்று.
மெஹ்பூப் ஸ்டூடியோ அத்தனைப் பழசாக, தூசும் சுன்னமிழந்த சுவர்களுமாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் விட்டலாச்சரியார் படங்களில் வரும் மர்ம மாளிகைகள் போல ப்ரும்மாண்ட கூடங்களும் வாசலுக்குள் வாசலாக விரிந்து மாடிகளும் படிகளுமாக இருந்தது.நான் அங்கு போய் சேர்ந்தபோது ஸ்ரீதேவி ஒப்பனையில் இருப்பதாகவும் நான் அவரது அறைக்கு வரலாம் என்றும் சொன்னார்கள். ஸ்ரீதேவி என்னை வெகு மரியாதையுடன் உள்ளே வந்து அமரச்சொன்னார். அவர் அவ்வளவு அழகாக உயரமாக ஸ்லிம்மாக இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஸ்மார்ட்டாக இருப்பார் என்றும் நினைக்காதது எனது
தவறு. பொம்மை மாதிரி இருப்பார் அதிகம் பேசமாட்டார் என்று எங்கோ படித்திருந்தேன். அவரது தம்பியோ அல்லது வேறு நெறுங்கிய உறவினரோ , ஒரு இளைஞன் அவர் தெலுங்கில் சரமாரியாக தொடுத்த பணிகளுக்கும் கட்டளைகளுக்கும் மெல்லிய ஆமோதிக்கும் குரலில் பதில் சொன்னான். ஸ்ரீதேவியின் குரல் மென்மையாக ஆனால் கண்டிப்பாக இருந்தது. மிக நல்ல மானேஜர் போல் ஒரே சமயத்தில் பல விஷயங்களில் அவர் கவனம் செலுத்தியபடி இடையில் என்னுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். சாதாரணமாக நடிகை என்றால் அவருக்கு உதவியாக அவருடைய அம்மாவோ அக்காவோ
அல்லது வேறு ஒரு முதிய மாதோ துணையாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஸ்ரீதேவிக்கு துணை யாரும் தேவைப் படவில்லை என்று தோன்றிற்று. அவர் ஒரு ராணியைப் போல கம்பீரமாகத் தோற்றமளித்தார். ஹீர் ராஞ்சா காதல் படச் சூட்டிங்கிற்காக அவர் அணிந்திருந்த உடையினால் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ. ஆனால் அவர் பரபரவென்று சூட்டிங்கிற்குத் தாயாராகும் விதத்தில் ஒரு
ப்ரொ·பஷனலின் நேர்த்தியான திறமை இருந்தது. கீழ் தளத்தில் சூட்டிங்கிற்குக் கூப்பிட ஆள் வந்ததும் ‘ரெடி’ என்று புன்னகைத்து விநாடிபிசகாமல் கிளம்பி என்னைப் பார்த்து ,’நீங்களும் வாருங்கள். இடையில் ப்ரேக்கின் போது பேட்டியைத் தொடரலாம்’ என்றார். அவர் கீழே ஸ்பாட்டுக்குச் செல்லும் வழியில் நிறைய பேர் அவரைப் பார்க்கக் காத்திருந்தார்கள். சூட்டிங் ஆரம்பித்தது. கப்சிப்பென்று அமைதி அமர்ந்தது. சற்று முன் வரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதேவியின் முகம் காமிராவின் முன் அசாதாரண மாற்றம் கண்டது. சோகம் துக்கம் , உதடு துடிக்க இரண்டு வரி டயலாக். குபுக்கென்று கண்களில் நீர் வந்தது. நான் திகைத்துப் போனேன். அது எப்படி சாத்தியம்? நான் அவரைப்பற்றி சினிமா ரிப்போர்டர்கள் எழுதியதைப் படித்திருக்கிறேன்.
பொம்மைபோல இருக்கும் ஸ்ரீதேவி காமராவின்முன் நம்பமுடியாதபடிக்கு உயிர் பெறுவதை எல்லோரும் குறிப்பிடுவது மிகையானது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது வார்த்தைப் பிசகாத உண்மை என்று நேரில் கண்டேன். கட் கட் என்று ஷாட் முடிந்து இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் அவரால் அந்த சோகத்துக்கும் கண்ணீருக்கும் தாவ முடிந்தது.அது கொஞ்சமும் செயற்கையாக இருக்கவில்லை. க்ளிஸ்ரின் கூட அவர் உபயோகிக்கவில்லை . பிறகு எதுவுமே நடக்காததுபோல் என்னுடன் வந்து அமர்ந்து
சிரித்துப்பேச முடிந்தது. என்னால் நம்பமுடியவில்லை. அது எப்படி சாத்தியம், உணர்வு ரீதியாக பாதிக்காதா என்று கேட்டேன். ‘எதற்கு பாதிக்கவேண்டும் , நடிப்பது எனது தொழில்’ என்றார் சாதாரணமாக. நான் நடிகை சாவித்திரியைப் பற்றி குறிப்பிட்டேன். பாச மலர் கடைசி சீன் சூட்டிங் முடிந்தபிறகு ஒரு வாரத்திற்கு மேல் அவர் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்டுப் படுத்திருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
‘சாவித்ரி அம்மா மிகப் பெரிய நடிகை. எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நடிப்பும் மற்ற தொழில் போலத்தான்னு நாம எடுத்துக்கல்லேன்னா ரொம்ப கஷ்டப் படுவோம் என்று நான் நினைக்கிறேன். ஒரே சமயத்திலே இரண்டு மூணு படம் சூட்டிங் செய்யவேண்டியிருக்கும். எல்லா பாத்திரங்களுடய உணர்வுச் சுமைகளையும் நாம தூக்கிக்கிட்டு படுக்கப் போனோம்னா நிம்மதியே போயிடும். இங்கிருந்து கிளம்பின உடனே நான் இந்த சூட்டிங்கைப் பத்தி மறந்துடுவேன்.’
தமிழ் சரளமாக வந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவது இன்னும் சரளம் என்று ஆங்கிலத்தில் பேசினார். சூட்டிங் யூனிட்டில் இருந்தவர்கள் சற்று எட்டி நின்று மிக மரியாதையுடனேயே அவரை நடத்தியதை கவனித்தேன். அவரது சுய நம்பிக்கையும் நிர்வாகத் திறமையுமே வட இந்தியாவில் அவரைக் கொடிகட்டிப் பறக்க வைத்ததாகத் தோன்றிற்று. அகில இந்தியப் புகழ் கிடைக்கும் என்று என்றாவது நினைத்திருந்தாரா? ‘இல்லை’ என்று அழகாகப் புன்னகைத்தார். ‘ ஆனா அது சுலபமாகக் கிடைக்கவில்லை. நிறைய உழைக்கணும். இருந்தும் இந்தப் புகழ் எல்லாமே சொற்ப காலத்துக்குதான்னும் நினைவிருக்கு. Enjoy while the going is good!” அந்த அழகிய தலைக்குள் விவேகமும் குடிகொண்டிருந்தது. ஹீர் ராஞ்சா படம் வெளி வந்ததும் மிகப் பெரிய ஹிட்டாயிற்று.
மெஹ்பூப் ஸ்டூடியோ பாழடைந்த கட்டிடமாகத் தெரிந்தாலும் மிக உயிர்ப்புடன் கூடிய ஒரு உலகம் அங்கு இயங்குவதை என்னால் உணரமுடிந்தது. பலதளங்களில் பலவிதமான செட்டுகள் தயார் நிலையில் இருந்தன. நூற்றுக்கணக்கான ஆட்கள் அங்குமிங்கும் நடந்தபடிஅல்லது ஓடியபடி ஏதோ பணியில் இருந்தார்கள். மும்பை நகர வளர்ச்சியுடன் மிக அழுத்தமாகப் பிணைந்திருந்த உலகம் அது. கள்ளக்கடத்தலும் நிழல் உலகமும் மும்பையின் அங்கமாகிப் போனது போல சினிமாவும் ஒரு அங்கம். இரண்டுமே மும்பையுடன் ஒட்டிய நிஜ உலகங்கள் – புற உலகம் அவற்றை நிழல்கள் என்று சொன்னாலும். அதனுடன் ஒட்டாத சாமான்ய பிரஜைகள் மும்பையின் ஓட்டத்துடன் ஓட்டமாக ஓடினார்கள். கள்ளக்கடத்தல் காரர்கள், நிழல் உலக தாதாக்கள் பட உலகத்துடன் தங்களை லாகவமாக இணைத்துக் கொண்டது மிக இயல்பாக நடந்தது. மும்பையின் வரலாற்றையே மாற்றியது.
இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மாற்றம் கண்டு தங்கக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மும்பையின் நிழல் உலக வரலாற்றில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று யாரும் ஊகித்திருக்கவில்லை. தங்கக் கடத்தலுக்கு இப்போது ஏதும் அர்த்தமில்லாமல் போனதால் கடத்தல் காரர்கள் பணம் பண்ண வேறு மார்க்கங்களைத் தேட ஆரம்பித்தார்கள். அந்த கால கட்டத்தில் தான் ஹாஜி மஸ்தானின் அடியாட்களாக முன்பு இருந்த தாவுத் இப்ரஹீம், சோட்டா ஷக்கீல்,சோட்டா ராஜன் போன்றோர் ‘தலை எடுக்க’ ஆரம்பித்தார்கள். பெருமளவில் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது அப்போதுதான். வழக்கம்போல் போதைபொருள் கடத்தல் தொடர்ந்தது.பாலிவுட்டின் ஷோலே போன்ற படங்கள் பெரும் வெற்றிப்படங்களாக வெளிவர ஆரம்பித்தபோது, படம் பண்ணுவது பெரும் செலவு கொண்டதாக மாறும் அறிகுறி தெரிந்ததும் நிழல் உலகம் கப்பென்று மும்பை பட உலகத்தைக்கவ்வியது.
நிழல் உலகம் பட உலகத்தின் ·பைனான்ஷியராக மாறியது. யார் தந்த பணமாக இருந்தால் என்ன என்று கண்ணைமூடிக்கொண்டு பாலிவுட் அந்த வலையில் சிக்கியது. நிழல் உலகத்தின் செயல்பாடுகள் நிழலின் தன்மை கொண்டதாக இருந்ததில் ,அவர்களுக்காக வேலை செய்தவர்கள் பினாமிகளாக இருந்ததில், நிஜமான தாதாக்களைக் கையும் களவுமாகப் பிடிக்கமுடியவில்லை. அவர்களைக் காட்டிக்கொடுக்கும் தைர்யம் அடியாட்களுக்கு இருக்காது. பின்னவர்களது ‘விசுவாசத்துக்காக’, தங்களுக்கு பதிலாக ஜெயில் வாசமும் உதையும் வாங்குவதற்காக அவர்களது குடும்பங்களை தாதாக்கள் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். மும்பை போலீஸ¤க்கும் தாதாக்களுடன் ரகசிய புரிதல் இருந்ததால் தாதாக்கள் கௌரவப் போர்வை போர்த்திவளைய வந்தார்கள். அதனாலேயே நிழல் உலகத்துப் பணம் மட்டும்தான் நமக்கு தொடர்பு மற்றதில் நமக்கு சம்பந்தமில்லை என்ற சமாதானத்துடன் சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் வெகுளித்தனமாக இருந்ததில் வியப்பில்லை. துபாயில் சாம்ராஜ்யம் வைத்திருந்த தாவூத் அழைத்த விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டார்கள். எப்படியாவது தங்கள் பணிக்குப் பணம் கிடைத்தால் போதும் என்ற
நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருந்திருக்கவேண்டும். அதற்கு எப்படிப்பட்ட ஆபத்தான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்யக்கூட நேரமில்லாத ஓட்டத்தில் அவர்கள் இருந்திருக்கவேண்டும். நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், கதைப் போக்கை மாற்றுவதிலும் விநியோக உரிமையிலும் நிழல் உலகம் தலையிட ஆரம்பித்ததும் இணங்காவிட்டால் அச்சுறுத்தல் வருவதும் சில கொலைகள் கொலை முயற்சிகள் என்று ஆரம்பமானதும்தான் திடுக்கிட ஆரம்பித்து பாலிவுட். உண்மையில் நிழல் உலகம் வேறு தளத்திற்குத் தாவிக்கொண்டிருந்தது.
நிழல் உலகத்தில் அதுவரை தொழில் போட்டி இருந்ததே தவிர மதம் சம்பந்தமான வேற்றுமை இருக்கவில்லை. மதம் நுழையவும் அதன் வினையாக பயங்கர விளைவை ஏற்படுத்துவதற்குமான காரணிகளை மும்பை அரசியலே தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்தது. பம்பாயில் சினிமா உலகம், நிழல் உலக ங்களுக்கு சம்பந்த மில்லாத ஒரு அரசியல் இயக்கம் , தீவிர மண்ணின் மைந்தர் கோஷம் கொண்ட, இந்துத்வ போர்வை உடுத்திய சிவ சேனை இயக்கம் அதி வேகமாக வளர்ந்து வந்தது. தூங்கிக் கொண்டிருந்த புலி திடீரென்று விழித்தவுடன் தான் தேடிப் பிடித்து வைத்திருந்த இறை திருடு போனதாக உணர்ந்து சிலிர்த்துச் சீறுவதுபோல தென்னிந்தியர்களும் முக்கியமாகப் பெருவாரியாக டைப்பிஸ்டுகளாகவும் க்ளார்க்குகளாகவும் உள்ளே நுழைந்த தமிழர்கள் நகரத்தின் வெள்ளைக்காலர் உத்தியோகங்களையெல்லாம் கபளீகரம் செய்துவிட்டதைப் புலி, பால் தாக்கரே என்ற சிவசேனைப் புலி கண்டு அசூயைக்கொண்டது. ரியல் எஸ்டேட்டில் தாதாக்களின் ஆக்கிரமிப்பு அதிகரிக்க, நிலங்களையெல்லாம் முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று ஆத்திரப்பட்டது. கர்ஜனையே தாக்கரேயின் அரசியல் வியூகம்–“தமிழர்களை விரட்டு! முஸ்லிம்களை விரட்டு பாகிஸ்தானுக்கு. Hang them! தூக்கிலிடு அவர்களை! வீர சிவாஜியின் மரபில் வந்தவன் நீ. வரலாற்றை மறக்காதே. முஸல்மான் நமது பரம்பரை வைரி…”

ஒரு தீப்பொறிக்காகக் காத்திருக்கிறார்கள் மும்பை மக்கள். சமன்பாடுகள் அற்ற பொருளாதார வளர்ச்சியில் மத்திய வர்க்கத்தில் இயலாமை ஏமாற்றம் ,போதாமை என்ற உணர்வுகள் கோபமாக உருவாகிக்கொண்டிருக்கிருக்கின்றன. சிவ சேனை மூலம் சுரணை மீண்டது போல மராட்டியர்கள் பிரிவினைவாதம் பேச ஆரம்பித்தார்கள். அதுவரை இல்லாத மத அடிப்படைவாதம் தலைதூக்கியது.
மதத்தை முன்னிறுத்திப் பிரிவினை பேசும் அரசியலை நிழல் உலகம் அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. அரசியல்வாதிகளுக்கும் நிழல் உலகத்தின் உதவி தேவைப்பட்டது. ஆனால் மும்பையின் அசல் பிளவு மும்பைக்கு வடக்கே பல நூறு மைல்களுக்கப்பால் அயோத்தியில் டிசெம்பர்மாத குளிர் நாள் ஒன்றின் பகல் நேரத்தில் இந்து வெறிக்கும்பல் ஒன்று ஒரு மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியபோது,
மும்பை நிழல் உலகம் இந்து முஸ்லிம் என்று பிளவு பட்டது மட்டுமல்ல, சக்திவாய்ந்த முஸ்லிம் தாதாக்கள்
தங்கள் மதத்தின் ரட்சகர்களாக மாறினார்கள். சர்வதேச அளவில் இயங்கிய முஸ்லிம் மத அடிபடைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்களானார்கள். மசூதி இடிப்பிற்குபின் மும்பையில் சிவ சேனையரால் தூண்டிவிடப்பட்ட இனக்கலவரத்துக்கு பதிலடியாக யாருமே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தாவூத் இப்ரஹாம் குழுவைச் சேர்ந்தவர்கள் மும்பைமுழுவதும் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்தி பயங்கரவாதத்தின் முதல் நேரிடை அனுபவத்தை மும்பைக்கு அளித்தார்கள்.
தொடர்குண்டு வெடிப்புக்குப் பின் நகரத்தின் வரலாறு மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். போலீஸ் நிரந்தர பழிக்குள்ளானது. முஸ்லிம் பிரஜைகள்
பாதுகாப்பற்றுப் போனதாக உணர ஆரம்பித்தது அப்போதுதான். புகழின் உச்சியில் இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டைருப்பதாகக் கைதானதும் பாலிவுட்டைமட்டுமல்ல நாட்டையே உலுக்கியதும் அப்போதுதான். பலர் தேசத் துரோகிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டார்கள்.
தேசத் துரோகம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்கிற பூர்வாங்க விசாரணையில் நாம் ஈடுபடவேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் பல அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பிரசங்கங்களும் முழக்கங்களும் செயல்பாடுகளும் தேச விரோதமானவை. அவர்களுக்குத் தொலைநோக்கு பார்வை இல்லாதது அவர்களைப் பொறுப்பற்ற பிரஜைகளாக ஆக்குவதாக நினைக்கிறேன். தேசத்துரோகம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation

author

வாஸந்தி

வாஸந்தி

Similar Posts