வாஸந்தி
அமிருதா 2
காரணங்களும் காரியங்களும்
தமிழ் பேசாத மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு , அதாவது உணர்வுபூர்வமாக தமது மொழியுடன் தொடர்பு உள்ளவர்களுக்கு, எங்காவது தமிழ் ஓசைக் கேட்டால் அது எப்படிப்பட்டப் பரவசம் என்பது என்னைப்போல பெரும்பாலும் வெளி மாநிலங்களிலேயே வாழ நேர்ந்துவிட்டவர்களுக்குத் தான் புரியும். அதுவும் நம்மை அடையாளம் கண்டு ‘உங்களது சமீபத்திய கட்டுரையைப் படித்தேன்’ என்று வேறு ஒரு புதிய நபர் சொல்லிவிட்டால் கிறக்கமே ஏற்பட்டுவிடும்- ஏதோ அகண்ட உலகத்தின் விருதும் அங்கீகாரமும் கிடைத்ததுபோல.
விக்ரம் சந்திராவின் புத்தகவெளியீட்டில் உமாநாத் என்ற வேலூரைச் சேர்ந்த இளஞர் என்னருகில் வந்து என்னை அடையாளம் கண் டு கொண்டதைத் தெரிவித்துத் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது எனக்கு அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. உமாநாத் சொன்னபடிக்கு இரண்டு நாள் கழித்து என்னை வீட்டில் சந்திக்கவந்தார். உமாநாத் ஒரு ‘ ஸா·ப்ட் வேர் இஞ்சினியர்’. பெங்களூரில் இரண்டு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னார். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்று பேச்சில் தெரிந்தது. தமிழில் உரைநடையில் கவிதை உணர்வுடன் கற்பனைக் காதலிக்கு/ தோழிக்குத் தனது லட்சியங்களை,எதிர்பார்ப்புகளை கடிதங்களாக எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறார். கனவு காணும் இளைஞர் என்று நான் நினைத்தேன். ஏதோ ஒரு தவிப்பில்இருப்பதாகத் தோன்றிற்று. ஒத்த கருத்தை உடைய நண்பர்கள் அவருக்குக் கிடைக்காததே அவருடைய பிரச்சினை என்று புரிந்தது.
மென்பொருள் கணினி உலகத்தில் யாருக்கும் மற்றவர்களுக்காக நேரம் இல்லை என்பது உண்மை. ‘எல்லாரும் மெஷினெப்போல ஆயிட்டாங்க’ என்றார் உமாநாத். அவருடன் இன்னும் மூன்று திருமணமாகாத தமிழ் இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கிறார்கள். தினமும் ஹோட்டலில் சாப்பாடு. ஞாயிறுகளில் மட்டும் எல்லாருமாகச் சேர்ந்து சமைக்க முயற்சிப்பார்கள்.அதுவும் சில நாட்கள் உடல் அலுப்பினால் சரிவராது. ‘எங்களுக்கு ரிலாக்ஸ் செய்வது எப்படின்னே மறந்து போச்சு. ஆபீஸ் லீவுன்னா என்ன செய்யறதுன்னு பசங்க முழிக்கிறாங்க. எல்லாருக்கும் lap top’ தான் தோழன். அது மட்டும் இல்லேன்னா கை ஒடிஞ்ச மாதிரி ஆயிறும். வீட்டிலிருந்தாலும் ஆபீஸ் வேலை பாப்பம்’. அந்த,ச்சூழலில் யாரும் மென்பொருள் உலகத்தைத் தாண்டி எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை, வேறு ரசனைகளில் நாட்டமில்லை என்கிற ஆதங்கம் உமாநாத்தை வாட்டிற்று. பெங்களூரின் புகழ்பெற்ற மலர் பூங்காவான லால் பாக் எங்கிருக்கிறது என்று கூட அவர்களுக்குத் தெரியாது. காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் சென்றால் இரவு ஒன்பது பத்துமணி வரைக்கூட வேலை செய்கிறார்கள். தொழில் நுட்பத்தை அதிகரித்துக்கொள்ள என்னென்ன பரீட்சை எழுதவேண்டுமோ அத்தனைக்கும் அவர்கள் தயார். அதிகபட்சம் வேலை செய்தால் அந்த அளவுக்கு அடுத்த பிரமோஷன் உறுதி ஆகும். அல்லது இன்னும் பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்து வந்ததை விட அதிக ஊதியம் கிடைப்பது அவர்களது ஆசையை விவஸ்தை இல்லாமல் தூண்டிவிடுகிறது.24 ,25 வயதுக்குள் 30,40 ஆயிரம் மாதச் சம்பளம் கிடைக்கிறது. ஸ்கூட்டருக்கு வக்கில்லாமல் வந்தவன், நான்கே மாதத்தில் கார் வாங்கிவிடுகிறான்.சொந்த ஊரில் யோசித்து யோசித்துச் செலவழித்தவன் இங்கு நூறு ரூபாயை ஒரு ரூபாய் போல் விட்டெரிகிறான். கடன் கொடுக்க நூறு வங்கிகள் வா வா என்று அழைப்பதால் கடன் எடுத்து 40 லட்சத்துக்கு பெங்களூரிலேயே ·ப்ளாட் வாங்கிவிடுகிறான். அவனது தாவலுக்கு எல்லையே இல்லாததுபோல் ஆகிவிட்டது. பெங்களூரின் ஆளுமை மாறுவதில் அவனுக்கு அக்கறை இல்லை. அதன் வளர்ச்சியை அவன் உபயோகித்துக் கொள்கிறான்.
சட்டென்று உமாநாத் கேட்டார்– ‘இங்கே இருக்கற லோக்கல் ஆளு, இதை எல்லாம் அவன் கண்முன்னால நடக்கறதைப் பாத்துக் கிட்டிருக்கான். அவன் இருந்த நிலையிலேயே இருக்க ,வெளியிலேந்து வந்த பொடியன்கள் கிடு கிடுன்னு வளந்துகிட்டே போறதைப் பார்க்கறான். அவனுக்கு வயிறு எரியுமா இல்லையா?’
இப்படி ஒரு software இஞ்சினியர் பேசி நான் கேட்டதில்லை.
‘நீங்கள்ளாம் படிச்சுட்டு வந்திருக்கீங்க, அதுக்குத் தகுந்தபடி வேலை கிடைக்கிறது. அதுக்கென்ன செய்யமுடியும்?’ என்றேன் நான்.
‘இவங்க அதைப்பத்தியெல்லாம் யோசிக்க மாட்டாங்க. அடேய், எந்த ஊரிலேந்தோ நம்ம ஊருக்கு வந்தவன், இங்க ஆளவந்தவன் கணக்கா டேராப் போடுறான், நம்ம நிலத்திலே சட்ட திட்டமா உக்காந்துட்டான்னுதான் நினைப்பாங்க. வெளியாள் வந்ததிலேந்து தன் நிம்மதி போச்சுன்னு நினைப்பான். காசை விட்டெரிய ஆளுங்க தயாராயிருக்கும்போது, விலை வாசி விஷம்போல ஏறுது. கறிகாய் விலை,
வீட்டு வாடகை எல்லாம் எக்கச்சக்கமாக எகிறிப்போச்சு.எங்க போனாலும் டிரா·பிக் நெரிசல். இந்த மாதிரி வேற எந்த ஊர்லேயும் நடக்கல்லே.”
உமாநாத்துக்குக் குற்ற உணர்வு இருப்பதுபோல் தோன்றிற்று. ஊர் மாறிப்போனதற்குத் தொழில் வளர்ச்சிதான் காரணம் வேலைக்கு வந்த இளைஞர்கள் இல்லை என்றாலும் கணினி யுகத்து இளைஞர்களின் தார்மீக அளவுகோல்கள் சரிந்து வருவது பற்றி அவர் கவலைப் பட்டதாகப் பட்டது. ‘பணம் பண்ணறதைத்தவிர வேற எந்த லட்சியமும் இல்லாதமாதிரி இருக்கு.ரசனை அழகியல் உணர்வு எல்லாம் செத்துட்டமாதிரி. ஏதோ ஒரு வெறியிலே சுத்திக்கிட்டிருக்காங்க. திடீர்னு இந்தக் software உலகம் கவிழ்ந்து போச்சுன்னா
என்ன ஆகும்?”
எனக்குச் சிரிப்பு வந்தது. இது அதீதமான கவலை என்று தோன்றிற்று. ‘Enjoy while the going is good’ என்பார்கள். வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கேளிக்கைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. முன்பு இந்திய சமூகத்தில் இல்லாத கருத்துச் சுதந்திரம் இளைய தலைமுறைக்கு இருக்கிறது. அத்தைகைய சூழலில் கெட்டசேதியே சொல்லும் ,நினைக்கும் திகில் ஜோதிடர்கள் போல, நவீன நாஸ்ட்ருடாமஸ்ஸாக இளைஞரான உமாநாத் ஆரூடம் சொல்வது எனக்கு வியப்பை அளித்தது.
‘என்ன வேணுமானாலும் நடக்கலாம்’ என்று உமாநாத் தொடர்ந்தார். ‘ பத்து வருஷத்துக்கு முந்தி இப்படி ஒரு மென்பொருள் புரட்சி நடக்கும்னு நாம கற்பனைகூட செய்திருக்கமுடியாது. அது மாதிரி ஒரு நாள் இது புஸ் வாணமாக வெடிச்சு நொறுங்கிப் போனாலும் போகலாம். அந்த மாதிரி ஒரு நிலைமைக்கும் நாம தயாரா இருக்கணும். பங்கு சந்தையிலே விளையாடறமாதிரிதான் இது.’
நான் சற்று நேரம் பேசவில்லை. உமாநாத்தின் பேச்சில் இருந்த கவலையும் பயமும் சற்று மிகையானவை, அவரது வயதுக்கு மீறியவை என்று அப்போது தோன்றினாலும், பிறகு அவரது வார்த்தைகளை அசைபோடுகையில் இத்தனைத் தீவிரமாக அவர் பேசுவதற்கு
அந்த உலகத்தைப் பற்றின நேரிடை அனுபவம் இருப்பதே காரணம் என்று புரிந்தது. மென்பொருள் தொழிலில் உள்ளவர்களுக்கு முப்பது வயதுக்குள் வரும் உடல் கோளாறுகளைப்பற்றி உமாநாத் கவலைப்பட்டார். மணிக்கணக்காகக் கணினியின் முன் உட்காருவதால் வரும் நரம்பு, முதுகெலும்பு உபாதையுடன் வேலை டென்ஷனினால் ரத்த அழுத்தம் தூக்கமின்மை , வேளைகெட்டவே¨ளைச் சாப்பாட்டினால் வயிற்று உபாதை ஆகிய தொல்லைகள் அதிகரித்து வருவதை பெங்களூரின் பல ஆங்கில நாளேடுகள் ஆய்வு செய்து விவரங்களை அளிக்கின்றன.
‘இது எங்க போய் முடியும்னு தெரியல்லே. கண்ணைமூடிக்கிட்டு இலக்கிலாமெ இளைய தலைமுறை போய்கிட்டிருக்கு.நம்மைச் சுத்தி எதிர்மறை உணர்வுகள் அதிகரிக்குது.”
உமாநாத் போல கரிசனப்படும் பத்து இளைஞர்கள் இருந்தால் ஒரு நகரத்துக்கு போதும் என்று நான் நினைத்துக்கொண்டேன். மென்பொருள் கணினி மையங்கள் பெருகும் சாத்தியங்கள் கொண்ட தமிழ் நாடும் வெகு விரைவில் கர்நாடகாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அனுபவிக்க நேரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இப்போதிலிருந்தே முன்யோசனையுடன் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரங்கள் நவீன உலகத்தின் மாற்றங்களுக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ள தொலைநோக்குடன் சரியாகத் திட்டமிடத் தவறுவதாலேயே வெறுப்பும் விரோதங்களும் வளர்கின்றன.
வளரும் நாடுகளும் நகரங்களும் உலகெங்கும் சந்திக்கும் சிக்கல் இது. எந்த அசாதாரண மாற்றமும் கலாச்சார வேர்கள் என்று நாம் நம்பும் ஆதாரங்களை அசைக்க வல்லது. நமது மண் நமது மொழி என்று நாம் பெருமையுடன் பாதுகாப்பதற்கு ஆபத்து என்கிற நினைப்பு மனிதன் நில ஆக்கிரமிப்பைத் தனது பிறப்புரிமையாக நினைக்க ஆரம்பித்த காலம் தொட்டு நம்மை அலைக்கழிப்பது. இதன் பொருட்டு நடந்திருக்கும் எத்தனைப் போர்கள் எத்தனை மரணங்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாகியிருக்கின்றன! ஆனால் விடுதலைப் போராட்ட காலத்தில் நாமெல்லோரும் இந்திய குடிமக்கள் என்று உணர்ச்சிவசப்பட்ட இந்தியர்கள், சுதந்திரம் வந்தபின் இது கன்னட நாடு ,இது மராட்டியம் இது தமிழ் நாடு என்று பிரித்துப் பேச ஆரம்பித்துவிட்டோம். நீருக்காகவும் மண்ணுக்காகவும் கலவரத்தில் ஈடுபடுவது சகஜமாகி வருகிறது.
காய்ந்த சருகுகள் தீப்பற்றுவதுபோல எது சாக்கு என்று பற்றிக்கொள்ள தெருமுனையில் கலவரம் தீவட்டி ஏந்தி காத்து நிற்கிறது. மொழிவாரியாக பூகோள எல்லைகள் வகுக்கப்பட்டதால் வந்த வினை என்று தோன்றுகிறது. அதனாலேயே நமது எல்லைக்குள் வந்த பிற மொழிக்காரன் நம்மைவிட வசதியாக வாழ்கிறான் என்றால் அதை நம்மால் சகித்துக்கொள்ளமுடியாமல் போகிறது.
கர்நாடகத்தில் ஏற்படும் கலவரங்களுக்கெல்லாம் இதுதான் அடிப்படைக்காரணமாகத் தோன்றுகிறது. மொழி அடிப்படைவாதம் கொஞ்சமும் இல்லாமல் இருந்த மாநிலத்தில் சில இலக்கியவாதிகளும் கலைஞர்களும் மொழி வெறியை அவ்வப்போது தூண்டிவிடுவது அவர்களது இயல்புக்கு விரோதமானதாக எனக்குப் படுகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு கன்னட நடிகர் ராஜ்குமார் பெங்களூர் வந்தபோது,இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியையாக சென்னையிலிருந்த என்னை தில்லி தலைமை அலுவலகம் பெங்களூருக்குச் சென்று விவரங்களை ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதும்படி கேட்டுக் கொண்டது. எனக்குக் கன்னடம் பேசவரும் என்பதால் ராஜ் குமாருடன் பிரத்யேக பேட்டி காண சௌகர்யமாக இருக்கும் என்றது. ராஜ்குமார் வந்து இறங்கிய ஜக்கூர் விமான தளத்தில் கூட்டம் முண்டிஅடித்தது. ராஜ் குமார் விமானதிலிருந்து இறங்கியதும்
தரையில் மண்டி இட்டு நிலத்தை முத்தமிட்டார். ‘ ஏ நன்ன கன்னட மாத்தே!’ [ எனது அருமை கன்னட தாயே!] என்று மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார். கன்னடக்காரர்களின் கூட்டம் அதைக்கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டது. நாம் இருப்பது இந்திய மண் என்பதும் ,எல்லோரும் இந்தியர்கள் என்பதும் அடியோடு எல்லோரது பிரக்ஞையிலிருந்தும் விலகி, அந்நியனான தமிழனின் கூடாரத்தில் சிறைபட்டிருந்த ஒரு கன்னடியனின் விடுதலை போல பாவிக்கப்பட்ட அந்த காட்சி மிக அபத்தமாக எனக்குப் பட்டது. என்னுடைய உணர்வுகளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத நிகழ்வாக , கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்திருந்த என்னை அது அந்நியப்படுத்தியது. ராஜ்குமார் அன்று அந்த வார்த்தைகளைச் சொல்லியிராவிட்டால் அவர் இறந்த அன்று கலவரத்தில் ஈடுபட்ட வெறியர்கள் தமிழ் எண்கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில் சகிப்புத்தன்மை என்பது நமக்குப் போய்விட்டது.பன்முகக் கலச்சாரம் கொண்ட நாடு அதில் ஒற்றுமை கண்ட நாடு என்று நாம் பெருமை பட்டதெல்லாம் போய் அதுவே நமக்கு இப்போது சுமையாகப் போய்விட்டது. கன்னடப் படங்கள் ஓடாவிட்டாலும் அவர்கள் கல்விட்டெரிவது தமிழ் படங்கள் ஓடும் அரங்கங்களில். பெங்களூரில் கன்னடியர் சிறுபான்மையினர் என்பதும் தமிழும் ஹந்தியும் தெரிந்தவர்களே பெரும்பானோர் என்பதும் புரிந்துகொள்ளாமல் வரும் ஆத்திரம் அது. கன்னடியரே கன்னடப் படங்கள் பார்ப்பதில்லை என்றால் யாரைக் குறை சொல்லமுடியும்? மற்ற மொழி படங்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என்ற அபத்த கோஷங்களுக்குப் பின் இப்போது கன்னடப் படங்களுக்கு மட்டும் சலுகைக் கட்டண டிக்கெட் வசூலிக்கிறார்கள். இப்பவும் கூட்டம் ஹிந்திக்கும் தமிழுக்கும் தான் !
சகிப்புத்தன்மையின்மை என்பது எல்லாமாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ் நாட்டின் கலாச்சார பெருமைக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்தவர் பல வேற்று மொழிக்காரர்கள். கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான திருவைய்யாற்றில் வாழ்ந்த தியாகைய்யர் தெலுங்கர். தெலுங்கிலேயே கீர்த்தனைகள் செய்தாலும் தமிழ் நாட்டின் பாரம்பர்ய பொக்கிஷமாகவே அவைக் கருதப்பட்டு தமிழ் நாட்டு பாடகர்கள் பாடிவருகிறார்கள். வருஷா வருஷம் திருவையாறில் தியாகையரின் ஆராதனை நடக்கிறது. ஆராதனை நடக்கும்போது வருடந்தோரும் தப்பாமல் ஒரு சின்னக் கூட்டம் அங்கு வந்து தெலுங்கிற்கு எதிராகக் கோஷம் போடுகிறது. ஆனால் சங்கீதத்தை ரசிப்பவர்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதால் கலவரம் வெடிக்கவிடுவதில்லை.
தேசிய கீதமாக மிக எழுச்சியூட்டும் பாடலாக விடுதலைப் போராட்டத்தின் போது கருதப்பட்ட, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதி நூற்றாண்டு காணும் வந்தே மாதரம் பாடல் சமீபத்தில் எத்தனைப் பெரிய சர்ச்சையாகிவிட்டது! நூற்றாண்டு தினமான செப்டம்பர் 7 அன்று எல்லா பள்ளிகளிலும் அது பாடப் படவேண்டும் என்று யோசனை இல்லாமல் இந்திய அரசின் கல்வித் துறை ஒரு ஜி.ஓ அனுப்ப அனர்த்தம் ஆயிற்று. இந்திய தேசத்தை ஒரு தாயின் வடிவத்தில், தேவியின் சொரூபமாகப் வந்தேமாதரம் பாடுவதால் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத, அல்லா ஒருவரே வணக்கத்திற்குரியவர் என்று நம்பும் முஸ்லிம் முல்லாக்கள் முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்று தடைவிதித்து ஆட்சேபித்ததில் சர்ச்சை வெடித்தது. பல முஸ்லிம் குழந்தைகள் அதை வெறும் தேசியகீதமாக நினைத்து அழகாகப் பள்ளிகளில் பாடுவதை சில தொலைக்காட்சி சானல்கள் படம்பிடித்துக் காண்பித்தன. தமிழர் ரெஹ்மானின் வந்தே மாதரம் பாடல் அடிக்கடி அன்று ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்தபோதெல்லாம் நெஞ்சு நிமிர்ந்து கண்கள் பனித்தன– காரணம் புரியாமல்.
[தொடரும்]
vaasanthi.sundaram@gmail.com
- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- எங்கள் தேசப்பிதாவே
- எழுத்துப் பட்டறை
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- தைலம்
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- தமிழர் திருமகன் இராமன்
- பூகம்பம்
- அவருடைய புகழுக்குப் பின்னால்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- பொற்கொடியும் பார்ப்பாள்
- நீரால் அமையும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- கவிதை
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதைகள்
- தீபாவளி
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu