கே.ஜே.ரமேஷ்
வியட்னாம் குடியரசின் விடுதலைக்கு வித்திட்ட ஹோ சி மின்னை யாரால் மறக்க முடியும். ஸ்டான்லி கர்நெள கூறியது போல் நாட்டுப்பற்றையும் கம்யூனிசத்தையும் சரியான விகிதத்தில் குழைத்து படு பயங்கரமான கொரில்லா போர் முறையை மிகச் சிறப்பாக கையாண்டவராயிற்றே. அமெரிக்க சரித்திரத்திலேயே அது தனது முதல் தோல்வியை தழுவக் காரணமாயிருந்தவரை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா ?
கிழிந்த ரப்பர் செருப்பணிந்து நைந்த மேல் கோட்டுக்குள் இருந்த அந்த ஒல்லியான உருவம் கருணையும் பணிவுமிக்க ‘அங்கிள் ஹோ ‘வாக மக்களிடம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதை பலரால் நம்பத்தான் முடியவில்லை. 1890ஆம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி பிறந்த ஹோவிற்கு அவரது பெற்றோரால் இடப்பட்ட பெயர் ‘ங்குயென் சின் சுங் ‘ (Nguyen Sinh Cung) என்றும் ‘ங்குயென் டாட் தான்ஹ் ‘ (Nguyen Tat Thanh) என்றும் அறியப்படுகிறது. ஹோ பல புனைப்பெயர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உபயோகித்ததாக தகவல் திரட்டப்பட்டுள்ளன. அதில் முக்கியமான சில பெயர்கள் ‘ங்குயென் வான் பா ‘ (Nguyen Van Ba) மற்றும் ‘ங்குயென் ஐ க்வோக் ‘ (Nguyen AI Quoc). (ஃபான் போய் செள என்ற மற்றொரு விடுதலை வீரரை 10000 ஹாங்காங் டாலருக்கு பிரெஞ்சு அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்ததிலிருந்து ‘ங்குயென் ஐ க்வோக் ‘ என்ற பெயரை உபயோகப்படுத்துவதைக் கைவிட்டார் என்ற ஒரு கூற்றும் நிலவுகிறது !!!)
பிரெஞ்சு ஆதிக்கம் வியட்னாம் நாட்டை 1860ல் கைப்பற்றி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கியது. வியட்னாமிய மக்களுக்கு பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மறுக்கப்பட்டது. அடையாள அட்டையின்றி அவர்கள் இருப்பிடம் விட்டு எங்கு செல்வதற்கும் அனுமதியில்லை. அடிமைகளாக நடத்தப்பட்ட அவர்களுக்கு முறையான கல்வியும் மறுக்கப்பட்டது. எல்லாவித துன்பங்களையும் அனுபவித்த வியட்னாமிய மக்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆனால் அக்கிளர்ச்சி பிரெஞ்சு ஆதிக்கத்தால் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது.
இதற்கிடையில் ஹோ லண்டனிலும் பிரான்ஸிலும் தனது நாட்டு விடுதலைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். 1919ம் ஆண்டு ஒரு அமைதி மாநாட்டுக்காக பிரான்ஸ் வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதியான உட்ரெள வில்சனிடம் வியட்னாமின் விடுதலைக்கான பிரேரணைத் திட்டமொன்றை சமர்ப்பித்தார். ஆனால் அத்திட்டம் நிராகரிக்கப்பட்டதுமல்லாமல் அதை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவேயில்லை. பிறகு 1920ம் ஆண்டு ஹோ பிரெஞ்சு கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ற ஒரு கட்சியை நிறுவி பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழும் மற்ற குழுக்களின் ஆதரவோடு ‘தி பெரையா ‘ (Le Paria) என்ற பத்திரிக்கையை நடத்தினார். (ஆனால் இதற்கு மாறாக ஹோவிற்கு பிரெஞ்ச் மொழியில் போதிய ஆளுமை இல்லை என்று பிரான்ஸில் ஃபோட்டோ கடை நடத்திய ‘ங்குயென் தி த்ரூயென் ‘உம், மாஸ்கோவில் ஹோவுடன் கூடப் படித்த இந்திய கம்யூனிஸ்ட்டான J.H.ராயும் கூறியுள்ளதான தகவலும் வெளியாயின !!!)
1923ம் ஆண்டு ஹோ மாஸ்கோவிலுள்ள கம்யூனிஸ்ட் இண்டெர்நேஷனல் (கோமிண்டேர்ன்) தலைமையகத்தில் பயிற்சி பெறுவதற்காக சென்றவர் கோமிண்டேர்னின் ஐந்தாவது காங்கிரஸில் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்டு, பின்னர் கோமிண்டேர்னை ஆசியாவில் புரட்சி செய்யுமாறும் தூண்டினார்.
அதற்குப் பிறகு 1924ம் ஆண்டு சீனாவிலுள்ள குவாங்செள மாநிலத்தில் தங்கி, சீனாவின் கம்யூனிஸ்ட்டுக்களின் துணையோடு நாடு கடத்தப்பட்ட வியட்னாமிய மக்களுக்கு கொரில்லா சண்டைப் பயிற்சியும் புரட்சிக்கான செயல்முறைத் திட்டம் பற்றிய பயிற்சியும் அளித்தார். பயிற்சிக்குப்பின் அவர்களைக்கொண்டு RYL (Revolutionary Youth League) என்ற அமைப்பையும் அதற்குட்பட்ட CYL (Communist Youth League) என்ற அமைப்பையும் நிறுவினார். CYLன் தலையாய பணி விடுதலை எழுச்சிக்கான பத்திரிகை ஒன்றை பதிப்பித்து சட்ட விரோதமாக வியட்னாம் நாட்டிற்குள் விநியோகம் செய்வதே. 1926ம் ஆண்டு ஹோ ‘புரட்சிப் பாதை ‘ என்ற புத்தகத்தை எழுதி அதைப் பயிற்சிக்கான நூலாகப் பயன்படுத்தினார். பின்னர் 1927ம் ஆண்டு குவாங்செளவிலிருந்து கம்யூனிஸ்ட்டுக்கள் துரத்தப்பட்டதால் ஹோ சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தார்.
1928லிருந்து 1930 வரையிலான காலகட்டத்தில் ப்ரஸ்ஸெல்ஸ், பாரீஸ், சியாம் (இன்றைய தாய்லாந்து) ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டே விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதில் கடைசி இரண்டு ஆண்டுகள் தென்கிழக்காசிய கோமிண்டேர்ன் பிரதிநிதியாக இருந்தார்.
1929ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக மகா பொருளாதார வீழ்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் வியட்னாமிலும் அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. தொழிலாளர்களின் வருமானம் பாதியாகக் குறைந்தது. வேலையின்மை 33% ஆக உயர்ந்தது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் அதிகரித்தது. ICP (Indochinese Communist Party) என்ற அமைப்பு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய வியட்னாமில் கட்சிக் குழுக்களையும், தொழிலாளர் சங்கங்களையும், விவசாய சங்கங்களையும் தோற்றுவித்தது.
இந்த இயக்கங்கள் சீர்திருத்தங்கள் கோரி போராட்டம் நடத்தத் துவங்கின. கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் கலகங்கள் வெடித்தன. விவசாயிகளும் கிராமவாசிகளும் ICP துணையுடன் சில மாவட்டங்களைத் தங்கள் கைவசம் கொண்டுவந்து ‘சோவியத்ஸ் ‘ எனப்படும் கிராம நிர்வாக சங்கங்களை ஏற்படுத்தினர்.
பதிலடியாக பிரெஞ்சு அரசாங்கம் மிகப்பெரிய அளவில் போர் வீரர்களை அனுப்பி கலகங்களை ஒடுக்கின. சுமார் 1000 கம்யூனிஸ்ட்டுக்களையும் புரட்சியாளர்களையும் கைது செய்தது. சுமார் 400 கைதிகளுக்கு நீீண்ட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டன. புரட்சியாளர்களின் தலைவர்கள் உட்பட சுமார் 80 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹோவிற்கும் in absentiaவில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையில் ஹாங்காங்கில் ஹோ சி மின் ஒருங்கிணைக்கப்பட்ட ICPயின் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அக்கட்சியின் குறிக்கோள் பற்றிய ஆவணத்தை வெளியிட்டார். அதில் முக்கிய குறிக்கோளாக பிரெஞ்சு ஆதிக்கத்தை ஒழிப்பது, வியட்னாமில் மக்களாட்சி மலரச் செய்வது, பொருளாதாரத்தை நாட்டுடைமை ஆக்குவது, பொதுமக்களின் கடன்களை இரத்து செய்வது, நில சீர்திருத்தங்கள் கொண்டுவருவது, 8 மணி நேர வேலை முறையை அமலாக்குவது, எல்லோருக்கும் கல்வி வழங்குவது ஆகியவற்றை முன் வைத்தார். இந்த ஆவணம் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தனக்கு மரண தண்டனை வழங்கியது குறித்து அறிந்த ஹோ ஹாங்காங்கிலேயே தஞ்சம் புகுந்து மீண்டும் கோமிண்டேர்னின் தென்கிழக்காசிய பிரதிநிதியாகத் தொடர்ந்தார். ஹாங்காங்கில் 1931ம் ஆண்டு பிரிட்டிஷ் போலீசாரால் ஹோ சிறை பிடிக்கப்பட்டு பின்னர் 1932ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். அதே சமயம் பிரெஞ்சு ஆதிக்கம் கிட்டத்தட்ட 10000 அரசியல் கைதிகளை வியட்னாமின் சிறைகளில் அடைத்தனர்.
விடுவிக்கப்பட்ட ஹோ அடுத்த சுமார் ஏழு ஆண்டுகள் மாஸ்கோவில் லெனின் இன்ஸ்டிட்யூடில் படித்துக் கொண்டே ஆசிரியராக பணி புரிந்தார். 1938ம் ஆண்டு சீனாவிற்குத் திரும்பிய ஹோ இரண்டாம் சீன ஜப்பானிய போரில் சீன கம்யூனிஸ்ட் போர்ப் படைக்கு ஆலோசகராக இருந்தார்.
1939ம் ஆண்டு ஜெர்மனியும் சோவியத் யூனியனும் ஆக்கிரமிப்பு தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், பிரெஞ்சு கவர்ன்மெண்ட் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் பார்ட்டியை தடை செய்து, ICP உட்பட மற்ற வியட்னாமிய அரசியல் கட்சிகளை சட்ட விரோதமாக அறிவித்தது. இதனால் ICP பிரெஞ்சு ஆதிக்கம் பலவீனமாக இருக்கும் வியட்னாமிய கிராமப்புறப் பகுதிகளில் தன்னுடைய பார்வையை திருப்பியது. இதற்கிடையில் இரண்டாம் உலகப்போர் மூண்டு, ஃபிரான்ஸ் ஜெர்மனியிடம் தோல்வியுற்றது. இதனை ஒரு வாய்ப்பாகக் கருதிய ஹோ 1940ம் ஆண்டு மீண்டும் ICPயுடன் தொடர்பு கொண்டு தன் சகாக்களான ‘வோ ங்குயென் கியாப் ‘ மற்றும் ‘ஃபாம் வான் டுங் ‘ ஆகியவர்களுடன் சேர்ந்து வியட்னாமின் விடுதலைக்கு திட்டங்கள் தீட்டினார். ஆனால் அந்த செப்டம்பர் மாதம் ஜப்பானிய துருப்புகள் வியட்னாமை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றியது. ஆனால் பிரெஞ்சு ஆதிக்கம் ஜப்பானியரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்கள் நிர்வாகம் வியட்னாமில் செயல்பட அனுமதி பெற்று விட்டனர்.
1941ம் ஆண்டு கடந்த 30 வருடங்களில் முதன் முதலாக ஹோ வியட்னாமிற்குள் நுழைந்து விடுதலைப் போராளிக் குழுக்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க முயன்றார். 1945ம் ஆண்டு ஜப்பானிய துருப்புகள் திடாரென்று பிரெஞ்சு ஆதிக்கத்தினிடமிருந்து போர் தளவாடங்களையும் ஆட்சியையும் கைப்பற்றி ஜப்பானுடைய பாதுகாப்பின் கீழ் வியட்னாம் விடுதலையை அறிவித்தது. இதனால் ஊக்கமுற்ற ICP மக்களின் எழுச்சிக்கு திட்டமிட்டு மெதுவாக வடக்குப் பகுதியில் தன்னுடைய ஆட்சியை நிறுவியது. இந்த ஆட்சிக்குத் தலைமை வகித்த ஹோ சுமார் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பகுதியை சுதந்திரப் பிராந்தியமாக அறிவித்தார். அந்தப் பிரதேசத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திடமிருந்த நிலங்களை மக்களுக்கு மறுவிநியோகம் செய்து ஜனநாயக முறையில் சுதந்திரங்களை அளித்தார். பின்னர் ICP தென்வியட்னாமிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பானின் மீது அணுஆயுதப் பிரயோகம் செய்த போது, ஹோ மாபெறும் மக்கள் எழுச்சிக்கு உத்தரவிட்டார். அந்த மாதக் கடைசிக்குள், சைகானைக் கைப்பற்றி, புதிய ஆட்சியை அறிவித்தார். DRV – டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃ வியட்னாம் என்ற அரசாங்கத்தை நிறுவி அதற்கு ஹோ தலைமை வகித்தார். பின்னர் 1969ம் ஆண்டு அவர் இறக்கும் வரை DRVன் ஜனாதிபதியாகவே ஹோ இருந்தார்.
ஆனால் ஹோவிற்கு அடுத்த தலைவலி ஆரம்பமாயிற்று. ICPன் எதிர்ப்பாளர்கள் அக்கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். அதனால் அவருடைய எதிர்ப்பாளர்களுடன் சமரச முயற்சியாக கூட்டாட்சிக்கு ஒப்புதல் அளித்தார். அதே சமயம் (அக்டோபர் 1945) தெற்குப் பகுதியில் பிரெஞ்சுப் படையினர் சைகானை மீண்டும் தங்கள் வசப்படுத்தி விட்டனர். அடுத்த மூன்று மாதத்திற்குள் தென்வியட்னாமின் பெரும்பாலான இடங்களை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். பின்னர் 1946ம் ஆண்டு வடக்குப் பகுதியிலும் தங்கள் கைவரிசையைக் காண்பித்த போது, ஹோ மறுபடியும் சமரச முயற்சிக்குத் தள்ளப்பட்டார். அதன்படி வடக்கில் ஒரு சிறிய பிரெஞ்சு படையினை தங்க அனுமதித்தால், பிரெஞ்சு அரசாங்கம் DRVஐ அங்கீகரிக்கும் என்பது உடன்பாடு. ஆனால் ஒட்டகத்திற்கு வீட்டைக் கொடுத்த கதையாய் அந்த சிறிய படை வெகு சீக்கிரமே 15000 துருப்புகள் கொண்ட படையாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து வந்த போரில் சுமார் 6000 வியட்னாமிய போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
1949ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தின் ஆதரவோடு தென்வியட்னாமில் ஒரு வியட்னாமிய அரசு – ASV (Associated State of Vietnam) பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த அரசுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கர்கள் தென் வியட்னாமிய வீரர்களுக்கு ஆயுதத் தளவாடங்கள் அனுப்பியதோடல்லாமல், அவர்களுக்கு அதில் பயிற்சியும் அளித்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு சீனா DRVஐ ஆதரித்தது. வெகு விரைவில் ரஷ்யாவும் DRVக்கு தனது ஆதரவை தெரிவித்தது.
1954ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி அன்று ஜெனீவா சமாதான மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தபடி வியட்னாம் நாடு 17வது நேர்க்கோட்டில் இரண்டாக பிளவு பட்டது. மேலும் இரண்டு பிரிவுகளும் மீண்டும் இணையும் பொருட்டு ஒரு பொதுத் தேர்தல் 1956ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தல் நடைபெறவேயில்லை. அதற்குப் பிறகு அமெரிக்கா நடத்திய லீலைகளும் அதன் விளைவாக அது கற்ற பாடங்களும் நாம் அறிந்த சரித்திரமே. 1976ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி வியட்னாமின் இரு பிரிவுகளும் இணைந்து சோசியலிஸ்ட் ரிபப்ளிக் ஆஃ வியட்னாம் ஆனது.
அதீத நாட்டுப்பற்றுடன் தேர்ந்த புரட்சியாளருமான ஹோவின் ஒரே குறிக்கோள் தன் நாட்டின் விடுதலையே. 1946ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கம் இந்தோசைனாவில் இழந்த தனது பேரரசை மீட்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டபோது ஹோ அவர்களிடம் ‘ நாங்கள் கொல்லும் உங்கள் படையின் ஒவ்வொரு வீரருக்கும் பதிலடியாக நீங்கள் எங்களின் 10 பேரைக் கொல்ல முடியும். அப்படியிருந்தும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் ‘ என்று முழங்கினார். அங்கிள் ஹோவின் தீராத விடுதலை தாபத்தைப் பகிர்ந்து கொண்ட அவரது கொரில்லா படை பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட முறையான போர்ப்படையாக செயல் படத்தொடங்கியவுடன் அமெரிக்காவின் தோலில் குத்திய முள்ளாகியது. ஹோவும் அவரது கம்யூனிச ஆதரவாளர்களும் வியட்னாமை ஆள்வதைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா தொடுத்த போரில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அமெரிக்கர்களுக்கு வியட்னாம் போர் மிக நீண்ட ஒன்றாகியது மட்டுமல்லாமல் அவர்கள் வரலாற்றிலேயே முதல் தோல்வியாகவும் அமைந்து விட்டது. அந்தத் தோல்வி உலகத்தில் அவர்களுடைய நிலைப்பற்றியும் அவர்களின் பங்கு பற்றியும் அமெரிக்கர்கள் கொண்ட பார்வையை அவர்களே மாற்றி சரியாக அறிந்துகொள்ள ஒரு தூண்டுகோலாகியது.
ஹோவின் மிக முக்கியமான பங்களிப்பு வியட்னாமியர்களிடம் ஆதிக்கத்திற்கெதிராக போராடும் குணாதிசயத்தை வளர்த்தது தான். 1960களில் அமெரிக்கர்களுக்கெதிரான போர் வலுவடைந்த போது அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சன் வியட்னாமால் தனது பதவிக்கே ஆபத்து என்று புரிந்து கொண்டார். அதனால் 1965ம் ஆண்டு பலாத்காரத்தை விடுத்து, இராஜதந்திரத்தைக் கடைபிடிக்க விரும்பி ஹோவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஹோ அவரது அழைப்பை நிராகரிக்க மாட்டார் என்று தீவிரமாக நம்பவும் செய்தார். ஆனால் எந்த வித சமரசமும் வியட்னாமை இரு கூறுகளாக நிரந்தரமாக பிரித்து விடும் என்றும் பின்னர் தன்னுடைய கனவான ஒருங்கிணைந்த நாட்டை எப்போதுமே பார்க்க இயலாது என்பதையும் ஹோ நன்றாகவே அறிந்திருந்தார். அதனால் ஜான்சனின் சமரச உடன்பாட்டிற்கு ஹோ இசையவேயில்லை.
ஹோவின் நம்பிக்கைகளையும் உறுதியையும் எந்த ஒரு சூழ்நிலையும் குலைக்க முடியவில்லை. நாடு இரண்டு பட்ட போதும், மில்லியன் கணக்கான மக்கள் மடிந்த போதும் விடுதலைக்கான குறிக்கோளிலிருந்து மாறவேயில்லை. தனது 79வது வயதில் 1969ம் ஆண்டு செப்டம்பர் 2ம் நாள் ஹோ தனது கடைசி மூச்சை விட்டார். அவரது ஆதரவாளர்கள் மாஸ்கோவில் இருக்கும் லெனின் கல்லறை போன்றே பளிங்கினால் ஆன கல்லறையில் ஹோவின் பதப்படுத்தப் பட்ட உடலை பாதுகாத்தனர். அவர் இறந்து ஆறு வருடங்கள் கழித்து அவரது வீரர்கள் வெற்றி வாகை சூடி வியட்னாமை ஒருங்கிணைந்த நாடாக அறிவித்தார்கள். அவரது நினைவாக சைகான் ‘ஹோ சி மின் ‘ சிடியென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஹோ தனது உயிலில் தான் இறந்த பிறகு தனது உடலை எரித்து அதன் சாம்பலை ஒரு பாண்டத்தில் வியட்னாமின் மூன்று மலை உச்சியில் புதைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரது சீடர்கள் அவருக்கு துரோகம் இழைத்துவிட்டனர்!!!
கே.ஜே.ரமேஷ்
kalelno5@yahoo.com
- ‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு
- ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை
- பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு
- வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்
- விஷ்வதுளசி -இணையாத உறவுகள்
- சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘
- எழுநிலை மாடம்
- கவிதை….
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-4
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2
- கடிதம் – ஏப்ரல் 1, 2005
- நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?
- யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்
- வலி
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
- விடியலை நோக்கி
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
- சடச்சான்
- புஷ்பராஜன் நூல் வெளியீடு
- பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்
- பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)
- தொலைக் கடத்தி
- வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- து ணை -பகுதி 8 / குறுநாவல்
- தேன்கூடு
- வேஷங்கள்
- விடுதலை
- மா..மு..லி
- அகத்தின் அழகு
- அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்
- முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
- பாப்லோ நெருதாவின் துரோகம்
- ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை
- அதீத வாழ்வு
- றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்
- வம்ச விலக்கு
- நிழல்களைத் தேடி …. (2)
- கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
- கவிதைகள்
- பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்
- உயிரே
- குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…