நரேந்திரன்.
சமீபத்தில் படித்தவற்றில் Jeffery Robinson என்பவர் எழுதிய The Merger என்னைக் கவர்ந்த ஒன்று. கொஞ்சம் information overdose அதிகம் இருந்தாலும், இண்டர்நேஷனல் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் இயங்கும் விதம் பற்றியும் மிகக் கவனமாக அதேசமயம் சுவாரசியம் குறையாமல் எழுதப்பட்ட புத்தகம் இது. புத்தகம் எழுத அமெரிக்க எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும், உழைப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. The Merger-லும் அந்த உழைப்பு தெரிகிறது.
குளோபல் எகானமி பற்றி ஆதரவு/எதிர்ப்பு அணிகள் தங்களுக்குள் மல்லுக்கட்டி, பல்லுடைத்து வரும் வேளையில், சத்தமில்லாமல் குளோபல் எகானமி சித்தாந்தத்தை இண்டர்நேஷனல் மாஃபியா தள்ளிக் கொண்டு போய்விட்டது என்கிறார் ஜெஃப்ரி. அவரின் கூற்றுப்படி, மாஃபியாக்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு செய்யும் சித்துவேலைகளால் பாதிக்கப்படாத இடமே இந்தப் பூவுலகில் இல்லை எனும்படிக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் மாஃபியா மயம். மூன்றாம் உலகநாடுகள் சிலவற்றின் அரசாங்கங்களை ஆக்க அல்லது அழிக்கும் வல்லமை பொருந்தியவையாக மாறிவிட்டன மாஃபியாக்கள் இன்றைக்கு என அறிகையில் ‘இது எங்கு போய் முடியுமோ ? ‘ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. தென்னமெரிக்க நாடுகளின் பல அரசுகள் மாஃபியாகளை எதிர்த்து ஒன்றுமே செய்ய இயலானவையாக இருக்கின்றன அல்லது மாஃபியாக்களாலேயே ஆளப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
மனிதர்கள், குதிரைகளை விட வேகமாக ஒடும் இயந்திரங்களைச் செய்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகின. இரயில் வண்டிகளை விட வேகமாக ஓடும் இயந்திரங்களைக் கண்டுபிடிக்க நூறு வருடங்களுக்கும் குறைவான வருடங்களே ஆகியது. அங்கிருந்து, சப்தத்தை விட வேகமாக நகரும் கருவிகளைக் கண்டுபிடிக்க இருபது அல்லது முப்பது வருடங்களே பிடித்தது எனலாம்.
இன்றைக்கு சாட்டிலைட்டுகளும், ஃபாக்ஸ், செல்ஃபோன், இண்டர்நெட் இணைப்புகள், இ-மெயில் போன்றவை நமது குரலையும், படங்களையும், நமது சிந்தனைகளையும், பணத்தையும் இன்னும் பலவற்றையும் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி வைக்க ஒரு சில நொடிகளே போதுமானதாக இருக்கிறது. உலகம் ஒரு சிறிய கம்ப்யூட்டர் மானிட்டருக்குள் அடங்கி, மனிதர்களால் உருவாக்கப் பட்ட செயற்கை உலக எல்லைகளைக் காணாமற் போகச் செய்து விட்டது டெக்னாலஜி. இந்த நூற்றாண்டு முடிவதற்குள் ஒரு நாட்டின் எல்லை என்பது கேலிக்குரியதாக மாறிப் போகலாம். சென்று போன வரலாற்றைப் பற்றிச் சொல்வதற்காகவோ அல்லது வெறும் அடையாளக் குறியீடாகவோ உலக எல்லைகள் மாறிவிடும் சாத்தியம் அதிகம். இண்டர் நேஷனல் கிரிமினல்கள் எனப்படும் transnational organized criminal-களினால் அந்த எல்லைகள் ஏற்கனவே தகர்க்கப்பட்டு விட்டது என்பதற்குப் பலமான பல ஆதாரங்களை எடுத்து வைக்கிறார் ஜெஃப்ரி.
ஜப்பனிய யகூசா, சீன ட்ரையாட்ஸ், வலிமைவாய்ந்த தென்னமெரிக்க டிரக் கார்டெல்கள், இத்தாலிய மாஃபியாக்கள், ரஷ்ய, நைஜீரிய மாஃபியாக்கள், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள்…. என அவர்களின் உலகம் பல்கிப் பரந்து வளர்ந்திருக்கிறது.
உலகில் கோகைன் எனப்படும் போதைப் பொருள் ஏற்றுமதி செய்யுவதில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன இலத்தீன் அமெரிக்க நாடுகள். இது கொலம்பியா நாட்டின் மொத்த GDPயில் 8 சதவீதம். ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் இந்த போதை மருந்து தயாரித்துக் கடத்தும் வேலையில் இருக்கிறார்கள்.
மிகவும் அச்சமளிக்கும் ஒரு விஷயம், மாஃபியாக்களுக்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு. ஆந்த்ராக்ஸிலிருந்து அணுகுண்டு வரை எல்லா ஆயுதங்களும் சர்வ சாதாரணமாக மாஃபியாக்களினால் விற்கப்படுகிறது. 911க்கு பிறகு கிரேக்க கிரிமினல்கள் ஏறக்குறைய ஐந்து டன் கதிர்வீச்சுள்ள ஸிர்க்கோனியத்தை (zirconium) கடத்தி வந்து நியூர்க்கில் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஸிர்க்கோனியம் அணுகுண்டு தயாரிக்கும் ரியாக்டர்களுக்குத் தேவையானதொரு வேதிப்பொருள். அதனுடன் சேர்ந்து புளூட்டோனியமும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் அமெரிக்கர்கள்.
மாஃபியாக்களின் பணபலத்தைக் கண்டு நடுங்காத உலக நாடுகளே இல்லை. 1995-இல் ஜப்பானின் டோக்கியோ நகரத்து ரயில் சப்-வேயில் நடந்த விஷவாயுத் தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவும்-ஸ்ஷின்ரிகோ (Aum-Shinrikyo) என்ற அமைப்பு நடத்திய அந்தத் தாக்குதலில் பனிரெண்டு பேருக்கும் மேலாக மரித்துப் போனார்கள். மேலும் ஐந்தாயிரம் பேருக்கு விஷ வாயுவினால் பாதிக்கப் பட்டார்கள். பிற்பாடு நடத்திய விசாரனையில் அந்த அமைப்பிற்குச் சொந்தமான ஏறக்குறைய ஒரு பில்லியல் டாலர்கள் ரகசிய ஸ்விஸ் வங்கிக் கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஏராளமான தங்கக் கட்டிகள், பணம், சொத்துக்கள் அவர்களுக்கு இருந்தது. டோக்கியோவில் மிகப்பெரிய கெமிக்கல் ஃபாக்டரி இருந்ததுவும், ஆஸ்திரேலியாவில் இருந்த அவர்களின் பண்ணையில் ஆடுகளுக்கு விஷவாயு செலுத்தி சோதனை செய்ததும் தெரியவந்தது. அதைவிட பெரிய ஆச்சரியம், டோக்கியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்ததுதான்.
சோவியத் யூனியன் சிதறிய பிறகு, வேலை இல்லாமல், வருமானமில்லாமல் வாடிய ரஷ்யர்கள்தான் இன்றைய சூப்பர் மாஃபியாக்கள். இன்றைக்கு ரஷ்யா ஒரு முழுமையான மாஃபியா நாடு. அங்கு அரசாங்கம் நடப்பது பெயரளவிற்குதான். 40 சதவீதத்திற்கும் மேலான தனியார் தொழிற்சாலைகளூம், 60 சதவீத அரசாங்கத் தொழிற்சாலைகளும், 90 சதவீத வங்கிகளும் மாஃபியாவின் கையில் இருக்கின்றன. கறுப்புச் சந்தையில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் ஏறக்குறைய 18 பில்லியன் டாலர்கள். வருடா வருடம் அது கூடிக் கொண்டே போகிறது.அவர்களின்றி ஒரு அணுவும் அசையாது அங்கே. குவிந்து கிடக்கும் அணு விஞ்ஞானிகளையும், கணிப்பொறி நிபுணர்களையும், கே.ஜி.பியின் மிச்ச மீதங்களையும் உலகம் அச்சத்துடனும், கவலையுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
****
அமெரிக்காவில் ஒவ்வொரு நாற்பந்தைந்து செகண்டிற்கும் ஒரு அடையாளத் திருட்டு நடக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அடையாளத் திருட்டு என்பது எந்தவிதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் சோஷியல் செக்யூரிட்டி எண்ணாக இருக்கலாம் அல்லது வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களாக இருக்கலாம் அல்லது உங்களின் பாஸ்போர்ட் போன்றவையாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அடையாளத் திருட்டின் முக்கிய நோக்கம் முறையற்ற வகையில் பணம் சம்பாதிப்பது.
சில மாஃபியா ஸ்டைல் சுருட்டல்கள் மிக ஆச்சரியமானவை. ஜெஃப்ரியின் ஆய்வின்படி, மாஃபியா தொடர்புள்ள, அமெரிக்காவில் புதிதாகக் குடியேறிய ஒவ்வொரு பிறநாட்டவரும் ஒவ்வொரு விதமான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு மோசடி எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம்,
கோவிந்தா அமெரிக்காவில் வசிப்பவர். நல்ல உத்தியோகத்திலிருப்பவர். எதையும் அளந்து செலவு செய்யும் ஆசாமி. மாதா மாதம் கிரெடிட் கார்ட் பில்லைத் தவறாமல் கட்டுகிற அவரின் மேல் நம்பிக்கை கொண்டு $20,000 டாலர் வரை வாங்கும் சக்தியுள்ள ஒரு கிரெடிட் அட்டையை அவருக்கு அளித்திருக்கிறது அவரின் வங்கி. அப்படியாகப் பட்ட கோவிந்தா ஒருநாள் மதுக்கடைக்குப் போகிறார். மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாட ஒயின் வாங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோமே.
தேவையான ஒயின் பாட்டில்களை வாங்கிக் கொண்டு, கவுண்டரில் இருக்கும் வியட்நாமியனிடம் தன்னுடைய கிரெடிட் கார்டைத் தருகிறார். வியட்நாமியன் கிரெடிட் கார்ட் ரீடரின் மேல் அதை உரசுகிறான். ஏதோ சத்தம் கேட்டு அந்தப் பக்கம் திரும்பும் ஒரு நொடியில், திருவாளர் கோவிந்தாவின் கிரெடிட் கார் மீண்டுமொருமுறை உரசப்படுகிறது. இப்போது உரசியது கவுண்டரின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கார்ட் ரீடரில். இதையறியாத நமது கோவிந்தா ரசீதில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்குப் போய், டின்னர் சாப்பிட்டு உறங்கப் போவதற்குள் நெற்றி நிறைய நாமத்தை பட்டையாகக் குழப்பி சாத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் பில் வரும் வரை அல்லது வேறொரு இடத்தில் கிரெடிட் கார்டைக் கொடுத்து பேந்தப் பேந்த விழிக்கும் வரை கோவிந்தாவின் கிரெடிட் கார்ட் உண்மையிலேயே கோவிந்தா ஆனதை அறிய வாய்ப்பில்லை.
இதற்கிடையில், அவரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹாங்காங்கிற்கு இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து, மேற்கூறிய அதே வழியில் சேகரிக்கப்பட்ட பல நூறு கிரெடிட் கார்டுகளின் தகவல்களுடன் சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். மீண்டும் இ-மெயில் மூலமாக.
அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாக, புத்தம் புதிய கிரெடிட் கார்ட்கள் – நமது கோவிந்தாவின் கார்டுடன் சேர்த்து – மிக நூதனமான முறையில் இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். பத்து பாக்கெட்கள் கொண்ட ஒரு சிகரெட் பெட்டியின் (carton) கண்ணாடித்தாள் மிகக் கவனத்துடன் கிழிக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு சிகரெட் பெட்டி மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, உள்ளிருப்பவை வெளியே கொட்டப்படுகிறது. காலியான சிகரெட் பெட்டிக்குள் கிரெடிட் கார்டுகள் அடுக்கப்பட்டு, கார்ட்டன் அலுங்காமல் மீண்டும் சீல் செய்யப்படுகிறது. அன்றைய பிற்பகலில், கோலாலம்பூர் சுபாங் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருக்கும் டியூட்டி ஃப்ரீ கடையில் விஸ்கி பாட்டில் ஒன்றை வாங்குகிறார் ஒரு ஆசாமி. ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்துத்தரப்படும் விஸ்கி பாட்டிலுடன் மேற்கூறிய சிகரெட் பாக்கெட்டும் வைக்கப்படுகிறது. அடுத்த ஃபிளைட்டில் இத்தாலிக்கும் போகும் அந்த ஆசாமி, இத்தாலிய கஸ்டம்சைக் கடந்து அந்த டூயூட்டி ஃப்ரீ கவரைக் கைவீசி எடுத்துக் கொண்டு போகிறார்.
அவ்வாறு எடுத்து வரப்பட்ட கிரெடிட் கார்டுகள் ரஷ்ய மாஃபியாக்களுக்கு சகாய விலையில் விற்கப்படுகிறது. பாரிஸ், ரோம் போன்ற நாடுகளில் அந்தக் கார்டுகள் உபயோகிக்கப்பட்டு நகைகளும், வாட்ச்சுகளும், கைப்பைகளும் இன்ன பிற விலையுயர்ந்த சாமான்களும் ரஷ்யாவின் உயர்தர மால்களுக்கும், டிபார்மெண்டல் ஸ்டோர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்படித் திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைத் தேடி, தண்டைனை வாங்கிக் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பெரும்பாலான – விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் – போன்றவை அதிகம் மெனக்கடுவதில்லை. கோவிந்தாவிற்கு வேறொரு புதிய எண்ணில் இன்னொரு கார்டை அனுப்பி வைத்துவிட்டு, வராக்கடனில் எழுதி அப்படியே மறந்து போகிறார்கள். மாஃபியாக்களின் துணிச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.
எதிர்வரும் காலம் உலகிற்கு மிகவும் சோதனையானது.
நேரம் கிடைக்கையில் மேலும் இதுபற்றி எழுதுகிறேன்.
—-
narenthiranps@yahoo.com
- உடுக்கை
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 2
- திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு!
- சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி
- அ.முத்துலிங்கம் பரம்பரை
- பாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து
- மெய்மையின் மயக்கம்-18
- சொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004
- ஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்
- கடிதம்- செப்டம்பர் 23,2004
- கடிதம் – செப்டம்பர் 23,2004
- கடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்
- கடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை
- கடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்
- கடிதம் செப்டம்பர் 23,2004
- சிரிக்க மாட்டாயோ
- அறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)
- பட்டுப்பூச்சி
- பெரியபுராணம் — 10
- தானம் ஸ்தானம் சமஸ்தானம்
- செவ்வாயின் மீது வீழ்வது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38
- தெளிந்த மனம்
- தீக்குளிக்கும் மனங்கள்!
- பாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள்
- தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்
- ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்
- சடங்குகள்
- பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….
- மணிப்பூரின் போர்க்கோலம்
- வசந்த காலம்
- கவிக்கட்டு 26 – நாய் வால்
- முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி
- செங்கல்லா கனக்குதடி…
- காதலென்பேன்
- ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்: