பி.கே.சிவகுமார்
மனித நேயம்:
குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அவர்கள் மொழியிலும் உணர்வுகள் வெளிப்பாட்டிலும் சப்-டெக்ஸ்ட் தேடுகிற இலக்கியவாதிகள் ஏமாந்து போவார்கள். அன்பு, அழுகை, பிடிவாதம், மகிழ்ச்சி, தோழமை என்று பலதரப்பட்ட உணர்வுகளைக் குழந்தைகள் வெளிப்படுத்துகிற விதம் அதீதமானதாகத் தோன்றினாலும் செயற்கையாக யாருக்கும் தோன்றாது. ஏனென்றால், குழந்தைகள் இயற்கையின் வெளிப்பாடுகள். வரப்பிரசாதங்கள். குழந்தைகள் பேசிக் கொள்வதை யாரும் பிரசங்கம் என்றோ வயதுக்கு மீறிய முதிர்ச்சி என்றோ அழைப்பதில்லை. மாறாகக் குழந்தையின் சூட்டிகை என்றும், ‘அட, இந்த வயசிலேயே இவ்வளவு வியாக்கியானமா ‘ என்றும் வியந்து பாராட்டுகிறோம். மற்றவர்கள் பாராட்டுகிறார்களா இல்லையா என்பது பற்றியும்கூட குழந்தைகள் ஆரம்பத்தில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மனதுக்குப் பிடித்ததைத் தங்களுக்குத் தெரிந்த மாதிரி செய்து கொண்டு ஆனந்தமயமாக இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் இது நல்லது, இது கெட்டது, இது சூட்டிகைத்தனம், இது ஏமாளித்தனம், இது பாதுகாப்பானது, இப்படி வாழ வேண்டும் என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் குழந்தைகளின் மேல் பாரமேற்றி அவர்களுக்கு நல்வழி காட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை குறித்தெல்லாம் பிரக்ஞை உள்ள பெற்றோர் கூட இதைச் செய்வதில் இருந்து முழுவதுமாகத் தப்பித்துவிட முடியாது என்பது வாழ்வின் விசித்திரம். குழந்தைகள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலுமே அதைப் பெற்றோர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், குழந்தைகளின் குழந்தைமையைப் போக்குவதில் பெற்றோர் ஆற்றுகிற கடமை குறித்து வருந்துகிற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
குழந்தைகள் அன்பு மயமானவர்கள். தோழமைக்கும் மனிதநேயத்துக்கும் அவர்களை மிகச் சிறந்த உதாரணமாகக் காட்ட முடியும். என் பக்கத்து வீட்டில் என் பால்ய காலம் முதற்கொண்டு வசிக்கிற தோழர் ஒருவர் எனக்குண்டு. எங்கள் குடும்பங்களுக்குள் உறவொன்றும் அவ்வளவு சிலாகிக்கத் தக்கதாய் இல்லை. எங்கள் பாட்டனார் காலம் முதற்கொண்டே கொடுக்கல் வாங்கலில் பிரச்சினைகள், விஷயங்களை அணுகுவதில் கருத்து மாறுபாடுகள், வாழ்க்கைத் தர வேறுபாடுகள் என்று இரண்டு குடும்பத்துக்கும் இடையே வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், அதை எல்லாம் மீறி மூன்றாம் வகுப்பிலிருந்து என் வகுப்புத் தோழராய் இருந்து வந்தவர் அவர். எங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நட்பினிடையே பழம்பிரச்சினைகளைக் கொண்டுவரக் கூடாது என்கிற முதிர்ச்சி இருந்தது எங்கள் பாக்கியம். இன்றைக்கும் ஊருக்குப் போனால் அதே நெருக்கத்துடன் பேசவும் சண்டை போடவும் அந்த நண்பருக்கும் எனக்கும் முடிகிறது. வாழ்க்கை உண்டாக்குகிற பிளவுகளைத் தாண்டிய உறவுகளைச் சிறுவயது நட்பும் நேசமும் உருவாக்க முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்தான். அவரவர் வாழ்விலிருந்து இப்படி ஆயிரம் உதாரணங்களைத் தோண்டி எடுக்க முடியும்.
இன்னொரு நிகழ்ச்சி. ஒரு மூன்றரை வயது குழந்தை. தாயாரிடம் சாப்பிட ஒரு ப்ளம் பழம் கேட்கிறது. தாயார் தருகிறார். பழத்தை ருசித்துச் சாப்பிடுகிறது. சாப்பிடுவதற்குப் பொதுவாக அடம் பிடிக்கிற குழந்தை ஒரு ப்ளம் பழத்தை முழுமையாகச் சாப்பிட்டு விட்டதைப் பார்த்த சந்தோஷம் தாயாருக்கு. குழந்தையிடம் ‘இன்னொரு பழம் சாப்பிடுகிறாயா ‘ என்று கேட்கிறார். ‘சரி, கொடும்மா ‘ என்கிறது குழந்தை. இரண்டாவது ப்ளம் பழத்தைத் தாயாரிடமிருந்து கையில் வாங்கிக் கொண்டது. சாப்பிடாமல் ஒரு நிமிடம் தயங்கியது. பின்னர் தாயாரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. ‘அப்பாவுக்குப் பழம் இருக்கிறதா, அவர் சாப்பிடுவதற்கு. ‘ தாயார் பதில் சொல்கிறார். ‘ம்ம். அப்பாவுக்கு இருக்கு. நீ சாப்பிடு. ‘ ‘அண்ணாவுக்கு இருக்கிறதா ‘ ‘ம்ம். அண்ணாவுக்கும் இருக்கிறது. நீ சாப்பிடு ‘ என்கிறார் தாயார். ‘உனக்கு இருக்கிறதா அம்மா ‘ என்றும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்கிறது குழந்தை. அதன் பின்னரே அந்த இரண்டாவது ப்ளம் பழத்தைச் சாப்பிடுகிறது. சில நேரங்களில் தன் மூடு சரியில்லை என்றால் தன் விளையாட்டுச் சாமான்களைக் கூட தன் சகோதரனிடம் பகிர்ந்து கொள்ள மறுக்கிற அதே குழந்தைதான் இயற்கையாக இவ்வளவு பகிர்தலுடனும் நேசத்துடனும் இருக்கிறது. சொல்லிக் கொடுப்பதால் வருகிற விஷயம் இல்லை இது. குழந்தைகளின் இயற்கை சுபாவமே இதுதான் என்று அறியலாம். இந்தக் குழந்தைபோல எல்லாக் குடும்பங்களிலும் ஒரு குழந்தை இருக்கும் என்பதே குழந்தைகள் வெளிப்படுத்துகிற இயற்கையான நேசத்துக்கு கட்டியம்.
மூன்றாவது நிகழ்ச்சி. ஓர் இரண்டரை வயது குழந்தை. தந்தையார் காலையில் அலுவலகம் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார். குழந்தையிடம் ‘ஆபிஸீக்குப் போய்விட்டு வருகிறேன். ஐ லவ் யூ. பை பை ‘ என்று சொல்கிறார். குழந்தை ஓடி வந்து அணைத்துக் கொண்டு பதிலுக்கு ஐ லவ் யூவும் பை பையும் சொல்கிறது. தந்தையாரும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தட்டிக் கொடுக்கிறார். பின்னர் மனைவியிடம் ‘போயிட்டு வரேன்மா ‘ என்று கிளம்புகிறார். தந்தையின் கையைப் பிடித்து நிறுத்திக் குழந்தை சொல்கிறது. ‘அப்பா, அம்மாவையும் ஹக் பண்ணி முத்தா கொடுத்துட்டுப் போ. ‘
மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்கிற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பழக்கமான நிகழ்வுகளாகவும் இருக்கலாம். இதே நிகழ்வுகளாக இல்லாவிட்டாலும், இதே பொருளோ அல்லது இதே போன்று குழந்தைகளின் விசாலமான மனப்பான்மையையும் பிறருக்காகக் கவலைப்படும் இருதயத்தையும் வெளிக்காட்டுகிற நிகழ்ச்சிகளைப் பிறநாட்டுக் குழந்தைகளிடமும் காண முடியும். அவற்றைப் பார்க்கிற யாரும் குழந்தைகள் காட்டுகிற நேசத்திலும் முதிர்ச்சியிலும் நெக்குருகிப் போவார்கள். குழந்தைகளின் அச்செய்கையை செயற்கை என்றோ, அதீதம் என்றோ, பிரசாரம் போல் இருக்கிறது என்றோ சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், குழந்தைகள் தெய்வீகக் குணங்கள் கொண்ட பாக்கியவான்கள் என்கிற நம்பிக்கை எனக்கு.
தமிழ்நாடு. ஒரு பள்ளிக் கூடம். மாலை வகுப்புகள் முடியப் போகின்றன. மாணவர்கள் புத்தக மூட்டைகளைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள். வெளியே தின்பண்டம் விற்பவர்கள் தயாராகி விட்டார்கள். ஆசிரியர் வீட்டுப் பாடத்தைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பாக இருக்கலாம். வகுப்பிலேயே பெரிய மாணவன் எழுந்து ‘சார் நான் போக வேண்டும் ‘ என்கிறான். எதற்காகப் போக வேண்டும் என்று கேட்கிறார் ஆசிரியர். ‘நான் போக வேண்டும் ‘ என்கிற பதிலே வருகிறது. ‘உடம்பு சரியில்லையா ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். ‘சார், நான் போக வேண்டும். ‘ ‘உங்க அப்பா அம்மா யாரும் வந்திருக்கிறார்களா ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். ‘சார் நான் போக வேண்டும் ‘. ‘என்னலே, சும்மா சும்மா போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்ன காரணம் ‘ என்று கேட்கிறார் ஆசிரியர். மாணவன் சொல்கிறான். ‘சார், பள்ளி இறுதி மணி அடித்ததும் ஓடிச் சென்று பள்ளிக் கூடத்தின் கேட்டை யார் முதலில் தொடுவது என்று எங்களுக்குள் ஒரு போட்டி இருக்கிறது. அதில் எல்லாரும் ஜெயித்திருக்கிறோம். நான் கூட ஜெயித்திருக்கிறேன். ஆனால் ஒருவனால் முடியாது ‘ என்று சொல்கிறான். ‘ஏன் ‘ என்று ஆசிரியர் கேட்கிறார். இரு கால்களும் செயலிழந்து போய் ஊன்று கோல் உதவியுடன் வேறொரு இளைய வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவன் நடப்பதைப் பற்றிய காட்சி திரையை நிறைக்கிறது. பின்புலமாய் ஒரு பாடல். பின்னர், இந்தப் பெரிய மாணவன் அந்த மாணவனைத் தூக்கித் தோளில் அமர்த்திக் கொண்டு மணியடித்ததும் ஓட, மாணவர் கூட்டம் பின்தொடர்ந்து ஓடுகிறது. தோளில் அமர்ந்தபடி கேட்டைத் திறந்த மாணவன், கட்டை விரலை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார். மனித நேயம் மலரட்டும் என்ற வாசகத்துடன் மனித நேயம் என்கிற இந்த ஐந்து நிமிட குறும்படம் நிறைவுறுகிறது. சரவணன் சொக்கலிங்கம் தயாரித்து சேகர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். வேறொரு இடத்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் பார்வையாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது என்று அறிகிறேன். இப்படத்தை ஜீன் 5, 2004 அன்று நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய தமிழ்க் கலைப்பட விழாவில் பார்த்தேன். தாமதமாக வந்தவர்களுக்காக நியூ ஜெர்ஸியிலும் இரண்டாவது முறையாகத் திரையிடப்பட்டது.
சொல்கிற விஷயத்தைச் சத்தமாகச் சொல்கிறது, சப்-டெக்ஸ்ட்வுடனும் இன்னும் மென்மையாகவும் சொல்லியிருக்க வேண்டும் என்று இப்படத்தைப் பற்றிச் சில விமர்சனங்களைப் படித்தேன். குழந்தைகளைப் பற்றி நான் விவரித்த உதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது எனக்கென்னவோ இப்படம் இயல்பாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. நம்முடைய புத்திசாலித்தனத்தையும் மேதாவித்தனத்தையும் குழந்தைகள் மேல் கொட்டுவதில் நிறையவே யோசிக்க வேண்டும். ஒரு குழந்தையின் மனநிலையோடு இப்படத்தைப் பார்த்தால் இதன் செய்தியில் செயற்கையோ அதீதமோ இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. வர்த்தகத் தமிழ்ச் சினிமாவைப் பார்த்தோமேயானால், குழந்தைகளை வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடையவர்களாகவும், பிஞ்சிலே பழுத்தவர்களாகவும் காட்டி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அவ்வாறெல்லாம் இருக்குமேயானால் அதையே நான் செயற்கையென்று சொல்லுவேன்.
இப்பட விழாவில் மரத்தடி இணையக் குழுவைச் சார்ந்த நண்பர்கள் பலரை முதன்முறையாகச் சந்தித்தேன். திண்ணையில் எழுதிய திரு.டெக்ஸன், திரு.ராஜன் குறை ஆகியோரையும் முதன்முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அமெரிக்கா வந்தும் தப்பிக்க முடியாது ‘ என்று கணையாழியில் எழுதி வந்தவர் டெக்ஸன் என்று அறிந்தேன். கணையாழியில் அவற்றைப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அக்கட்டுரைகளின் மென்பிரதி இருந்தால் டெக்ஸன் அவற்றைத் திண்ணையில் இட்டு என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவ வேண்டுமென்று வேண்டுகிறேன். நேரமும் இறையருளும் இருப்பின் இப்பட விழாவில் நான் பார்த்த படங்கள் எழுப்பிய சிந்தனைகளைக் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்வதாக உத்தேசம்.
**** **** ****
திண்ணை களஞ்சியம்:
ஒன்று: பலபேர் கேட்கிற கச்சேரிகளில் வாசிக்கிற வாய்ப்பை வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கடற்கரையில் மணிக்கணக்கில் தனியாக வாசித்துக் கொண்டிருப்பார் மாலி என்று சிறுவயதில் யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம்.
இரண்டு: ‘முதலில் எழுதுகிறவன் என்கிற முறையில் எதை எழுதுவது என்று தீர்மானிப்பது நானே தவிர வேறு எவரும் இல்லை. பெரியார் அவர்களின் கட்டளைக்கேற்ப என்னால் எழுத முடியாது ‘ என்று பெரியார் முன்னிலையில் பேசினார் ஜெயகாந்தன்.
மூன்று: இரா.முருகன் கட்டுரையொன்றில் படித்தது. மாலனும் அவரும் ஒரு சந்திப்பில் பிறமொழி எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இரா.முருகன் அந்த எழுத்தாளரிடம் வேறு ஓர் எழுத்தாளர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். கிடைத்த பதில் ‘அவரைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் ‘.
நான்கு: ‘ஒரு படைப்பாளி என்ற முறையில், will you not give me the freedom to choose what I want to write ? ‘ இது பிரபல எழுத்தாளர் எஸ்.பொ. திசைகள் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியது.
ஐந்து: சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய கலைப்பட விழாவில் பார்த்த குறும்படம் ‘தப்புக்கட்டை ‘. நிறப்பிரிகையில் வந்த தய்.கந்தசாமியின் நல்ல சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அதிலே மேல்ஜாதிக்காரர் ஒருவர் பறையடிக்கிற ஒரு தலித் இசைக் கலைஞரை அவமானப்படுத்துகிறார், தாக்குகிறார். மற்றவர்களின் விருப்பப்படி வாசிக்கிற இசைக் கலைஞர், மற்றவர்கள் தருகிற கூலியை மற்றவர்கள் விருப்பபடியே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேல்ஜாதிக்காரரால் வலியுறுத்தப்படுகிறார். அதற்கு உடன்பட மறுக்கும்போது தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால், பறையடிக்கிற தொழிலையே விட்டு விடுகிறார் இசைக் கலைஞர். சிறுவயதில் இசைக் கலைஞரின் இசை ஆர்வத்தைக் கண்டு உற்சாகப்படுத்திய அவரின் தாயார் இறந்து விடுகிறார். இசைக் கலைஞருக்கு மனதில் குழப்பம். தாயின் மரணத்துக்கு விட்டுவிட்ட பறையை அடிப்பதா கூடாதா என்று. முடிவில் தாயின் எரிகிற சிதையின் முன்னே ஓயாது அவர் பறையடிக்கிற காட்சியுடன் படம் நிறைவுறுகிறது. இசைக்கும் கலைக்கும் ஜாதிகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென்பதையும் கலைஞர்கள் எது நேர்ந்தபோதும் தாங்கள் நேசிக்கிற கலையைத் தாங்கள் விரும்பும் வண்ணம் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதையும் மனதைத் தொடும் விதமாகச் சொல்லிய படம் இது.
நிஜ வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கிற எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அது மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கலைஞர்கள் எழுத வேண்டும் என்பது. ‘இந்த எழுத்தாளர் இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுதவில்லை. எனவே அவர் என் மதிப்பில் வீழ்ந்து விட்டார் ‘ என்று எழுதுகிற சக எழுத்தாளர்களே இருப்பது சகஜம். ஓர் எழுத்தாளரையோ கலைஞரையோ மதிப்பிடுகிற அளவீடுகள் அகவயப்பட்ட அபிப்ராயங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிறப்பதை பலர் அறிந்திருப்பதில்லை. இன்னும் சிலர் கொஞ்சம் மேலே போய் எழுதுபவர்களுக்குக் கட்டளைகள் தருகிற ப்ரீ அட்வைஸ் சர்வீஸ் செய்கிறார்கள்.
சில வெகுஜனப் பத்திரிகைகளில் பார்த்தீர்களேயானால் அதில் வேலை செய்கிற சப்-எடிட்டர்களின் நிலைமை மிகவும் அனுதாபத்துக்குரியதாக இருக்கும். சர்க்குலேஷன் அதிகமாக வேண்டுமென்று விரும்புகிற முதலாளியின் விருப்பங்களை சிரமேற்கொண்டு செயல்பட வேண்டிய கிளார்க்குகளாக கலை ஆர்வம் மிக்க சப்-எடிட்டர்கள் மாறிப்போவது வாழ்வின் விபத்துதான். ஆனால், சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிற மாதிரியான இயந்திர இலக்கியப் படைப்புகளை வாசிக்கிற அத்தகைய சப்-எடிட்டர்கள் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் தாங்கள் செய்கிற வேலையைச் சிறப்பாகச் செய்கிற திறமை படைத்தவர்கள். அடுத்தவர் என்ன எழுத வேண்டும் என்ன எழுதக் கூடாது என்று சொல்லுகிற பட்டியலில் தன்னை இலக்கியவாதியாக உருவகப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள் வெகுஜனப் பத்திரிகையின் சப்-எடிட்டர் மனப்பான்மையை விட்டு வெளிவர இயலாதவர்களும் அடங்கிப் போகிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். அதற்குக் காரணம் வெகுஜன ரசனைக்கேற்பவும் பத்திரிகைகளின் தரத்துக்கேற்பவும் அவர்கள் தங்கள் எழுத்தின் பொருளையும் நடையையும் மாற்றி சமரசம் செய்து கொள்வதாக இருக்கலாம். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் மற்றவர்களிடமும் அதையே அவர்கள் எதிர்பார்ப்பது இயல்பான நிகழ்வுதான்.
மனித மனம் நுட்பமானது, அதன் ஆசைகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எழுத்துகளுக்கும் காரணங்கள் பல உண்டு. அதனாலேயே, எழுத்தாளர்களின் மீது தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுமத்துபவர்களின் வாதங்களைப் படிக்கும்போது, அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசிக்கவும் அதற்கானக் காரணங்களைத் தேடி அவர்கள்பால் அனுதாபமும்பட நம்மால் முடிகிறது.
ஆனால், கலைஞர்கள் கம்பீரமானவர்கள். சுதந்திரமானவர்கள். நான் மேற்சொன்ன ஐந்து உதாரணங்களையும் பார்ப்பீர்களேயானால், அதிலே வருகிற கலைஞர்களின் விருப்பங்களும், கொள்கைகளும், ரசனைகளும், வெளிப்பாடுகளும் வேறு வேறானவையாக இருக்கும். ஆனால், அடிப்படையில் கலைஞர்களுக்கேயுரிய கம்பீரத்தையும், சுதந்திரத்தையும் உணர்ந்தவர்கள் அவர்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆணித்தரமாக அவற்றை நிலைநாட்டுபவர்களும் கலைஞர்கள். நேயர் விருப்பம் போல கலைஞர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களை அவமானப்படுத்துகிற விஷயம் இருக்க முடியாது. அதற்காகக் கலைஞர்கள் கோபம் கொண்டால் அதன் தார்மீகத்தின் உண்மையொளி மற்றவர்களை நெளியவைத்து பதிலுக்குக் கோபப்பட வைக்கிறவையாக இருக்கும். அத்தகையக் கலைஞரின் கோபமொன்றை இந்தப் பக்கத்தில் உள்ள பசுவைய்யாவின் உன் கவிதையை நீ எழுது என்கிற பின்வரும் கவிதை காட்டுகிறது. கலைஞர்கள் அனைவரும் இக்கவிதையைத் தங்களின் பிரகடனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிற அளவுக்கு என்னைக் கவர்ந்த கவிதை இது.
உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.
– பசுவைய்யா
**** **** ****
http://pksivakumar.blogspot.com
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- இசை கேட்டு…
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- கடிதம் ஜூன் 10, 2004
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- நஞ்சில் விளையும் பருத்தி
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- கவிதைகள்
- எலக்ட்ரான் எமன்
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- கடிதம் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் ஜூன் 10,2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- பெண் ஒன்று கண்டேன்
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- போர்வை
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- நிழல்
- பறத்தல் இதன் வலி
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- நாத்திக குருக்கள்
- அம்மாவின் கடிதம்!
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- பிறந்த மண்ணுக்கு – 5